தேடுதல்

"டிஜிட்டல் உலகில் குழந்தையின் மாண்பு" என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு திருத்தந்தையின் உரை "டிஜிட்டல் உலகில் குழந்தையின் மாண்பு" என்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு திருத்தந்தையின் உரை 

டிஜிட்டல் உலகில் குழந்தையின் மாண்பு காக்கப்பட...

டிஜிட்டல் உலகின் தொழில்நுட்பங்கள், இளையோரை, பெரும் தீமைகளுக்கு அழைத்துச் செல்வதை உணர்ந்து, அத்தீமைகளிலிருந்து அவர்களைக் காப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமூக வலைத்தளங்கள், சிறுவர் சிறுமியரை தவறான முறையில் பயன்படுத்தாமல், அவர்களுக்கு உரிய மாண்பை வழங்கும் முயற்சியில், அனைத்துத் துறைகளும் இணைந்து செயலாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு உறுப்பினர்களிடம் கூறினார்.

"டிஜிட்டல் உலகில் குழந்தையின் மாண்பு" என்ற தலைப்பில், நவம்பர் 14, மற்றும் 15 ஆகிய இரு நாள்கள், வத்திக்கானில் நடைபெறும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களை, நவம்பர் 14, இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளைக் காக்கும் பொறுப்பு அனைத்துத் துறைகளையும் சார்ந்த கடமை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இதே மையக்கருத்துடன், 2017ம் ஆண்டு, அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கைப் பற்றியும், அக்கருத்தரங்கில் கலந்துகொண்டோரை தான் சந்தித்தது குறித்தும் திருத்தந்தை தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

சிறுவர், சிறுமியர் அடைந்துள்ள துன்பங்கள் குறித்து அண்மைய ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவை சந்தித்துள்ள வேதனைகளும், சவால்களும் மிகப் பெரியவை என்பதை தன் உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க நெடுநாள் நீடிக்கும் தீர்வுகள் தேவை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

டிஜிட்டல் உலகம் கண்டுபிடித்துவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள், மக்களுக்கு, குறிப்பாக, இளையோருக்கு பெரும் உதவியாக உள்ளன என்பதை நாம் மறுக்கமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இதே தொழில்நுட்பங்கள், இளையோரை பெரும் தீமைகளுக்கும் அழைத்துச் செல்வதை உணர்ந்து, அத்தீமைகளிலிருந்து அவர்களைக் காப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளைக் கொண்டு உருவாக்கப்படும் ஆபாச வலைத்தளங்கள், மனித வர்த்தகம், பாலியல் கொடுமைகள் ஆகியவற்றை வளர்க்கின்றன என்பதை தன் உரையில் கவலையுடன் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகையக் கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளும், சிறுவர் சிறுமியரும் தங்கள் வாழ்வு முழுவதையும் வேதனையில் கழிக்கும் தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று கூறினார்.

சிறுவர் சிறுமியரை டிஜிட்டல் வழியில் தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களை தண்டிக்கும், மற்றும், தடுத்து நிறுத்தும் வழிமுறைகளை, அரசுகள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் அழைப்பு விடுத்தார்.

தொடர்புத் துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்கள், தங்கள் பணி, தொழில் நுட்பத்தோடு நின்று விடுகிறது என்று சாக்கு சொல்லி தப்பித்துக்கொள்ளக்கூடாது என்பதையும், அவர்கள் உருவாக்கும் தொழில்நுட்பங்கள், தகுதியான முறையில் பயன்படுத்தப்படுவதையும் அவர்கள் உறுதி செய்யவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட அடையாளங்கள் டிஜிட்டல் முறையில் பதிவாகும் இன்றையச் சூழலில், குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியரின் தனிப்பட்ட அடையாளங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வழிகளையும் டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்கள் நடுவே அறிமுகம் செய்வது அவர்களது கடமை என்பதையும் திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளின் கண்களை நேருக்கு நேர் காணும்போது, அவர்களை, இறைவனின் ஒப்பற்ற கலைப்படைப்பாகக் கண்டு, அவர்களுக்கு உரிய மாண்பை வழங்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் நல்லதொரு வாழ்வை அமைத்துக்கொள்ளும் உரிமை பெற்றுள்ளது என்பதை அனைவரும் உணரவேண்டும் என்றும் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 November 2019, 14:47