தேடுதல்

இடாய் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி இடாய் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி 

‘இடாய்’ புயல் – திருத்தந்தையின் அனுதாப டுவிட்டர் செய்தி

சிம்பாப்வே, மொசாம்பிக், மற்றும் மலாவி நாடுகளில் பெரும் அழிவுகளை உருவாக்கியுள்ள இடாய் புயலால் உயிரிழந்தோர், மற்றும், பாதிக்கப்பட்டோருக்கு திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களும், செபங்களும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அன்பின் கட்டளையை நாம் புறந்தள்ளினால், நலிந்தோர் மீது வலியோர் ஆதிக்கம் செலுத்தும் கட்டளை உறுதி செய்யப்படும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, மார்ச் 21, இவ்வியாழனன்று பதிவு செய்திருந்தார்.

மேலும், சிம்பாப்வே, மொசாம்பிக், மற்றும் மலாவி நாடுகளில் பெரும் அழிவுகளை உருவாக்கியுள்ள ‘இடாய்’ (Idai) புயலால் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 20, இப்புதனன்று, தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

"சிம்பாப்வே, மொசாம்பிக், மற்றும் மலாவி நாடுகளில், இடாய் புயலால் பாதிக்கப்பட்ட அன்பு மக்களுக்கு என் வேதனையையும், அருகாமையையும் தெரிவிக்கிறேன். இந்தப் புயலால் உயிரிழந்தோரையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் இறைவனின் இரக்கத்திற்கு சமர்ப்பிக்கிறேன்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

மார்ச் 21, இவ்வியாழன் முடிய, @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.905 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 79 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 680 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 59 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2019, 15:05