நியூசிலாந்து மக்களுக்கு திருத்தந்தை செபம்
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
நியூசிலாந்தின் Christchurch நகரில், இரு மசூதிகள் மீது நடத்தப்பட்டுள்ள வன்முறைத் தாக்குதல்களில் இறந்துள்ளவர்கள் மற்றும் காயமுற்றோர் குறித்த, செய்திகள் மிகுந்த கவலை தருகின்றன எனத் தெரிவித்துள்ள அதேநேரம், இந்த தாக்குதல்கள், அறிவற்ற செயல்களின் வெளிப்பாடு என்று குறை கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நியூசிலாந்து மக்கள் எல்லாருக்கும், குறிப்பாக, முஸ்லிம் சமுதாயத்துடன் இதயப்பூர்வமான தோழமையுணர்வைத் தெரிவிப்பதுடன், அந்நாட்டினர் அனைவருக்காக, தான் செபிப்பதாகவும், திருத்தந்தை உறுதி கூறியுள்ளார்.
இக்கட்டான இச்சூழலில் அவசரகாலப் பணிகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகச் செபிப்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, காயமுற்றோர் குணமடையவும், தங்கள் உறவுகளை இழந்துள்ளவர்கள், இறைவனின் ஆறுதல் பெறவும், நாட்டினர் திடன் கொள்ளவும், இறந்தவர்கள் நிறைசாந்தியடையவும் தான் செபிப்பதாகக் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் இச்செய்திகள் அடங்கிய தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நியூசிலாந்திற்கு அனுப்பியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்