தேடுதல்

பல்வேறு நாடுகளின் அரசியல் தூதர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பல்வேறு நாடுகளின் அரசியல் தூதர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

நம்பிக்கைகளுடன் பிறந்துள்ளது புதிய ஆண்டு

சமூகங்களில் அமைதியும் ஒப்புரவும் நிலவவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டிவருகிறது திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

2018ம் ஆண்டு, சில நாடுகளுடன் திருப்பீடம் உருவாக்கிய ஒப்பந்தங்களும், சில நாடுகளுக்கு தான் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்ததும், மகிழ்ச்சி தருவதாக இருந்தன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் பல்வேறு நாடுகளின் அரசியல் தூதர்களை சந்தித்தபோது கூறினார்.

வத்திக்கான் நாட்டிற்கான பல்வேறு நாடுகளின் அரசியல் தூதர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து, அவர்களுக்கு இவ்வாண்டின் வாழ்த்துக்களை தெரிவித்து, உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெனின் குடியரசோடும், சான் மரினோ குடியரசோடும் கடந்த ஆண்டில் திருப்பீடம் உருவாக்கிய ஒப்பந்தங்களைப்பற்றிக் குறிப்பிட்டு, கடந்த ஆண்டில், சிலே, பெரு, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, லித்வேனியா, லாத்வியா மாற்றும் எஸ்டோனியா நாடுகளுக்கு தான் திருப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க முடிந்தது குறித்தும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

சமூகங்களில் அமைதியும், ஒப்புரவும் நிலவவேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் திருஅவை, நிக்கராகுவா நாட்டின் இன்றைய நிலைகள் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளது என்று எடுத்துரைத்த திருத்தந்தை, வியட்நாமிலேயே தங்கியிருக்கும் வகையில் திருப்பீடப் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட உள்ளது, சீனாவில் ஆயர்கள் நியமனம் குறித்த 2018ம் ஆண்டின் செப்டம்பர் ஒப்பந்தம் போன்றவை குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கு முன்னோடியாக 1919ம் ஆண்டு, அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பு (League of Nations) குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீதிக்கும் அமைதிக்கும் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் மக்கள் குறித்த அக்கறைக்கும் தன் உரையில் அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்களின் இன்றைய நிலை குறித்தும், சிரியா உட்பட, மத்தியக் கிழக்கின் சில நாடுகள் போர்க்களமாக காணப்படுவது குறித்தும் எடுத்துரைத்ததோடு, இஸ்லாமியர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தான் விரைவில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள உள்ளதையும் எடுத்துரைத்தார்.

அடைக்கலம் தேடி புலம்பெயர்வோர்க்கு மட்டுமல்ல, குடிபெயர்வோர்க்கும் போதிய உதவிகள் ஆற்றப்பட்டவேண்டும் என்பதையும் தன் உரையில் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெனிசுவேலா நாட்டிலிருந்து பெரும் எண்ணிக்கையில் வெளியேறும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பராமரிக்கும் கொலம்பியா நாட்டின் செயலை அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துரைத்தார்.

இன்றைய உலகின் இளையோர், குழந்தைகள், தொழிலாளர்கள், பெண்கள் ஆகியோரின் உரிமைகள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என புனிதத் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் ஆற்றிய உரையில் விண்ணப்பித்ததையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டில் எத்தியோப்பியாவிற்கும், எரித்ரியாவிற்கும் இடையில் உருவான அமைதி ஒப்பந்தம், தென் சூடான் தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், காங்கோ ஜனநாயகக் குடியரசின் இன்றைய நிலைகள், மாலி, நைஜீரியா, நிஜர், காமரூன் நாடுகளில் நிலவும் வன்முறை, மற்றும் பதட்டநிலைகள் என்பவைகளை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கொரிய தீபகற்பத்தில் காணப்படும் நம்பிக்கைகள், வெனிசுவேலா நாட்டில் அமைதி வாய்ப்புக்கள், இஸ்ராயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவக்கப்படுவதற்கான நம்பிக்கைகள் போன்றவைகளையும் எடுத்துரைத்தார். சுற்றச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறுதியாக, வத்திக்கான் என்ற தனிநாடு உருவாக்கப்பட்டதன் 90ம் ஆண்டு, வரும் பிப்ரவரி 11ம் தேதி சிறப்பிக்கப்பட உள்ளதையும் கூறி, தன் உரையை நிறைவுச் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2019, 15:23