"L'Osservatore Romano"வின் ஆசிரியருக்கு திருத்தந்தை பாராட்டு
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் நாளிதழ் "L'Osservatore Romano"வின் தலைமைப் பதிப்பாசிரியராக, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து, தற்போது ஒய்வுபெறும், பேராசிரியர் ஜியோவான்னி மரிய வியான் (Giovanni Maria Vian) அவர்களின் பணிக்காக நன்றி கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அழைப்பை ஏற்று, பேராசிரியர் வியான் அவர்கள், இந்தக் கடினமான பணியை திறம்பட செய்து, திருப்பீடத்திற்கு பக்க பலமாக விளங்கியதற்காக தான் நன்றி கூறுவதாக திருத்தந்தை இம்மடலில் கூறியுள்ளார்.
திருஅவை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்று, திருஅவைத் தந்தையரைக் குறித்து, மாணவர்களுக்கு கல்வி புகட்டிவந்த பேராசிரியர் வியான் அவர்கள், தன் பேராசிரியர் பணியில் காட்டிய அதே அர்ப்பண உணர்வை, வத்திக்கான் நாளிதழின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய வேளையிலும் வெளிப்படுத்தினார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் வியான் அவர்களின் வாழ்வில் இறைவனின் துணை தொடரவேண்டும் என்றும், அன்னை மரியா, திருத்தூதர்கள் பேதுரு, பவுல் ஆகியோர் அவரது வாழ்வை பாதுக்காக்க வேண்டுமென்றும் திருத்தந்தை தன் மடலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
1952ம் ஆண்டு பிறந்த வியான் அவர்கள், 2007ம் ஆண்டு முதல், வத்திக்கான் நாளிதழ் "L'Osservatore Romano"வின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்