திருத்தந்தையைச் சந்தித்த இஸ்ரேல் நாட்டின் அரசுத்தலைவர்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இஸ்ரேல் நாட்டின் அரசுத்தலைவர், Reuven Rivlin அவர்களும், உடன் வந்திருந்த அரசு அதிகாரிகளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 15 இவ்வியாழன் காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.
திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பைத் தொடர்ந்து, அரசுத்தலைவர் Rivlin அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.
இஸ்ரேல் நாட்டுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட செய்தித்துறை .அறிவித்தது.
மேலும், ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப் நிறுவனத்தின் தலைவர், Henrietta Fore அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினர்.
இதற்கிடையே, நவம்பர் 15, இவ்வியாழன் காலை, திருஅவையின் வளர்ச்சி குறித்து, திருப்பலியில் பகிர்ந்துகொண்ட மையக்கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.
"இறையாட்சி உங்கள் நடுவே உள்ளது. அது ஆர்ப்பாட்டமான காட்சி அல்ல. சாட்சிய வாழ்வு, செபம், ஆன்மீக வாழ்வினால் ஈர்த்தல் என்ற வழிகளில் திருஅவை மறைவாகவும், அமைதியிலும் வளர்ந்து வருகிறது" என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.
நவம்பர் 15, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1,758 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 78 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்