அக்டோபர் 14, ஏழு அருளாளர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவர்
லூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள்
இவ்வாண்டு அக்டோபர் 14, ஞாயிறன்று, அருளாளர்களான திருத்தந்தை 6ம் பால், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ உட்பட, ஏழு அருளாளர்கள், புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அறிவித்தார்.
ஜூலை 19, இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் நிகழ்ந்த கர்தினால்கள் கூட்டத்தில் திருத்தந்தை அறிவித்த ஏழு அருளாளர்களில் ஒருவரான, 19 வயது நிறைந்த இளம் தொழிலாளி நுன்சியோ சுல்ப்ரீசியோ (Nunzio Sulprizio) அவர்கள், 1963ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி, 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்திற்கென கூடியிருந்த ஆயர்கள் முன்னிலையில், அருளாளர் திருத்தந்தை 6ம் பால் அவர்களால், அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டவர்.
இளையோரை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த புனிதர் பட்ட விழாவில், 19 வயது நிறைந்த தொழிலாளி சுல்ப்ரீசியோ அவர்கள், புனிதராக உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், மறைமாவட்ட அருள்பணியாளரும் திரு நற்கருணை ஆராதனையாளர்கள் சபையை நிறுவியவருமான பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி, மறைமாவட்ட அருள்பணியாளர் வின்சென்சோ ரொமானோ, இயேசு கிறிஸ்துவின் எளிய பணியாளர்கள் சபையை நிறுவிய மரிய கத்தெரீனா காஸ்பெர், திருஅவையின் மறைபரப்புப்பணியாளர்கள் சபையை நிறுவிய அருள் சகோதரி நசாரியா இஞ்ஞாசியா ஆகிய நால்வரும் அருளாளர் நிலையிலிருந்து, புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்