தேடுதல்

தோமைக்குத் தன்னை வெளிப்படுத்தும் உயிர்த்த ஆண்டவர் தோமைக்குத் தன்னை வெளிப்படுத்தும் உயிர்த்த ஆண்டவர்  

பாஸ்கா காலம் 2-ஆம் ஞாயிறு: இரக்கம் விளைவிப்பது இறையமைதி!

அன்பிலிருந்து இரக்கமும், இரக்கத்திலிருந்து பொதுவுடமையும், பொதுவுடமையிலிருந்து அமைதியும் பிறக்கின்றது என்பதை உணர்ந்துகொள்வோம்.
பாஸ்கா காலம் 2-ஆம் ஞாயிறு: இரக்கம் விளைவிப்பது இறையமைதி!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. திப 4:32-35     II.  1 யோவா 5:1-6      III. யோவா 20:19-31)

ஒரு கடற்கரை ஓரத்தில் ஒரு சின்ன கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு சின்ன பள்ளிக்கூடம். கடற்கரையோரத்தில் உள்ள ஒரு விடுதியில் ஓய்வுக்காக ஒருவர் வந்து தங்கியிருந்தார். பள்ளிக்கூடத்தில் ஏதோ விழா நடப்பது போல் தெரிந்தது. உடனே அவர் அங்கே போனார். அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்தார். பள்ளி ஆண்டு விழா நடக்கிறது என்று சொன்னார்கள். உள்ளே போனார். கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டார். பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்கள் தயார் செய்த பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள். அந்த ஊர் மக்கள் எல்லாம் அதை கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். இவரும் ஆர்வமாக அதை எல்லாம் பார்த்துக் கொண்டே போனார். ஓர் இடத்தில் ஒரு சின்ன இரயில் செய்து வைத்திருந்தார்கள். மின்சாரத்தில் ஓடுவதுபோல் அதனைத் தயார் செய்திருந்தார்கள். அதில் ஒரு சின்ன பொத்தான் இருந்தது. அதை அழுத்தினால் இரயில் சுற்றிச் சுற்றி வரும். மாணவர்கள் எதிரில் நின்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இவர் அதை கவனித்தார். அங்கிருந்த மாணவர்களிடம் விளையாட்டாக, “இரயில் எதனாலே ஓடுகிறது” என்று கேட்டார். “சக்தியினாலேயே ஓடுகிறது” என்று மாணவர்கள் பதில் சொன்னார்கள். “அது என்ன சக்தி” என்று கேட்டார். “அதற்குப் பேர் மின்சாரம்” என்றார்கள் மாணவர்கள். அவர்களிடம், “நீங்கள் மின்சாரத்தை பார்த்திருக்கிறீர்களா” என்று கேட்டார் அந்த மனிதர். “நாங்கள் பார்த்ததில்லை ஆனால் இதை செய்வதற்கு எங்களுக்கு உதவி செய்த ஆசிரியர் ஒரு பட்டதாரி. ஒருவேளை அவர் பார்த்து இருக்கலாம்” என்றார்கள் மாணவர்கள். “அவர் எங்கே இருக்கிறார்” என்று கேட்டார். “அழைத்துக் கொண்டு வருகிறோம்” என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள். அவரிடம், “மின்சாரத்தை பார்த்து இருக்கிறீர்களா” என்று கேட்டார் அந்த மனிதர். “மின்சாரத்தை பார்க்கிறதாவது? நான் பார்த்ததே இல்லை” என்றார் அந்த ஆசிரியர். “இது மாதிரி எத்தனையோ இயந்திரங்களை செயல்பட வைக்கின்றது. ஆனால் உண்மையிலேயே அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஒருவேளை இந்தப் பள்ளிக்கூட தலைமை ஆசிரியருக்குத் தெரிந்திருக்கலாம். ஏனென்றால் அவர் ஒரு மேல்நிலைப் பட்டதாரி”  என்றார். “நான் அவரைப் பார்க்க முடியுமா” என்று அந்த மனிதர்.. “சரி” என்று கூறிவிட்டு போய் தலைமையாசிரியரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். அவரிடமும் இதே கேள்வியை கேட்டார் அந்த மனிதர். உடனே தலைமையாசிரியர், "மன்னிக்க வேண்டும். இந்தக் கேள்வியை இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை. மின்சாரத்தின் சக்தியை யாரும் பார்க்க முடியாது. ஆனால் அது செயல்படும் விதத்தை தான் பார்க்க முடியும்" என்றார். இப்போது இதுவரைக்கும் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் சிரித்தார். சிரித்து விட்டுச் சொன்னார் "சரி எதற்கும் கவலைப்படாதீர்கள் நான் தான் தாமஸ் ஆல்வா எடிசன்" என்றார். இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் விப்படைந்தனர். "நீங்கள்தானா எடிசன். நீங்கள் எவ்வளவு மின்சார கருவிகளை கண்டுபிடித்து இருக்கிறீர்கள். நீங்களே இந்தக் கேள்வியை கேட்கின்றீர்களே? என்றனர் அவர்கள். அதற்கு எடிசன், "ஆமாம் நான் தான் கேட்கிறேன். ஏன் என்றால் நானும் மின்சாரத்தை பார்த்தது கிடையாது" என்றார். அன்பு என்பதும் இப்படி பட்டதுதான். அன்பு நமது உடற்கூறு அமைப்பிலே இல்லை. அது நமது உடம்பில் உள்ள தூய அன்பின் சக்தியின் வெளிப்பாடு. அதை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது. இறைவன் நம் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக எத்தனை அருட்கொடைகள், இரக்கச் செயல்களைப் பார்க்கின்றோம். அவ்வாறே அன்பு இல்லாமல் மனிதன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. அன்புதான் மனிதநேயம். அதுவே உயர்ஞானம். அன்பிலிருந்து பிறப்பது தான் இரக்கம். கடவுள் நம்மீது கொண்ட பேரன்பினால் மனுவுருவெடுத்தார். அதுவே, பணிகள், பாடுகள், மரணம், உயிர்ப்பு என பல்வேறு வடிவங்களில் அவரது இரக்கச் செயல்களை நமக்கு வெளிப்படுத்தியது.

இன்று நாம் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறைக் கொண்டாடுகின்றோம். இந்நாள் இறைஇரக்க ஞாயிறாகச் சிறப்பிக்கப்படுகிறது. மூவொரு கடவுள் இரக்கத்தின் கடவுளாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். இறைத்தந்தையின் இரக்கம் தனது ஒரே மகன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பியது. இயேசுவிடம் வெளிப்பட்ட இரக்கம் கல்வாரியில் தனது திருஇரத்தத்தை சிந்தி நம்மை மீட்க வழிகோலியது. துணையாளராம் தூய ஆவியாரிடம் துலங்கிய இரக்கம், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பின்பு இன்றுவரை இவ்வுலகை வழிநடத்தி வருகிறது. இயேசுவின் நீட்சியான அவரது சீடர்கள் வழியாக அவரது இரக்கம் இவ்வுலகமெங்கும் வெளிப்பட்டது. சீடர்களின் நீட்சிகளாகிய நம் அனைவரின் வழியாக இறைஇரக்கம் அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமதாண்டவர் இயேசுவின் விருப்பம். இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை எடுத்துச் செல்வது, அவருடைய இரக்கத்தின் செய்தியை எடுத்துச் செல்வது என பொருளாகிறது.

இன்றைய முதல் வாசகத்தில், 'நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது' என்ற வார்த்தைகள் தொடக்க கால கிறிஸ்தவர்களிடம் விளங்கிய பொதுவுடைமையை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் இந்தப் பொதுவுடைமையைப் பெற்றதற்கு அடிப்படைக் காரணம் அவர்களிடம் துலங்கிய இரக்கம். இது உயிர்த்த இயேசுவின் இரக்கமிகு இதயத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. அதனால்தான், 'திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்' என்று தொடர்ந்து வாசிக்கின்றோம். ஆக, நற்செய்தி அறிவிப்பிலும் சான்று வாழ்விலும் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் இரக்கம், தொடக்க கால கிறிஸ்தவர்களிடம் பொதுவுடைமையைக் கொண்டு வருகிறது. இந்தப் பொதுவுடைமையின் காரணமாகத்தான் அவர்கள் தங்களிடம் இருப்பதை இல்லாதவர்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வருகின்றனர். இதனைத்தான், தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று முதல் வாசகம் சுட்டிக்காட்டுகின்றது. மேலும் சுயநலமில்லா, தாராளமனம்கொண்ட ஒரு பகிர்தலுக்கு சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவருடைய வாழ்வை நம்கண்முன் நிறுத்துகிறது திருத்தூதர் பணி நூல்.

நாம் வாழும் இன்றைய உலகில் இந்தப் பொதுவுடைமை நிலவுகின்றதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. பணக்காரர் மேலும் மேலும் பணக்காரர் ஆகிக்கொண்டே போகிறார். ஏழை மேலும் மேலும் ஏழையாகிக்கொண்டே போகிறார்.  ‘இன்னும் வேண்டும்’ ‘இன்னும் வேண்டும்’ என்று பணக்காரர் பலர் அலைந்துகொண்டே இருக்கின்றனர். மனிதம் சார்ந்த செயல்களைக் காட்டிலும் மதியீனம் சார்ந்த செயல்கள்தாம் இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. அதனால்தான் போர்களும், மோதல்களும், கலவரங்களும், தீவிரவாத மற்றும் பயங்கரவாதச் செயல்களும் நம்மத்தியில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு உக்ரைன்-இரஷ்ய மற்றும் ஹமாஸ்-இஸ்ரயேல் போர்கள் சான்றுபகர்கின்றன. குறிப்பாக ஹமாஸ் மற்றும் இஸ்ரயேலுக்கு இடையே நடக்கும் கடந்த 100 நாட்களுக்கும் மேலான போரில் ஏறக்குறைய முப்பதாயிரம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அறுபதாயிரம் பேர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்தப் போரில், இரக்கமற்ற முறையில் 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். அவ்வாறே, ஆப்பிரிக்க நாடுகளில் தொடரும் இரக்கமற்ற மோதல்களாலும் கடத்தல் சம்பவங்களாலும் பெருந்துயருற்று வரும் அதன் தலத் திருஅவையின் ஆயர்கள் புலம்பி அழுகின்றனர். இந்தியாவில் சொல்லவே தேவையில்லை. சாதி மற்றும் மதத்தின் பெயரால் தொடர்ந்து இரக்கமற்ற செயல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனாலும் உலகளாவியத் திருஅவை உயிர்த்த ஆண்டவர் வெளிப்படுத்திய இரக்கமிகு செயல்களைப் பல்வேறு பணிகள் வழியாக வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகின்றது. அப்படியென்றால், திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், உயிர்த்த ஆண்டவரின் இரக்கமுடைய செயல்களை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறோம்.  

அண்மையில் நெஞ்சை நெகிழவைக்கும் காணொளிக்காட்சி ஒன்றை பார்த்தேன். ஒரு வயதான பாட்டி கூடையில் காய்கறிகளைச் சுமந்துகொண்டு ஒரு மேம்பாலத்தின் வழியாகப் போய்க்கொண்டிருக்கிறார். அந்நேரத்தில் இளைஞர் ஒருவர் அவரை எதிர்கொண்டு, "பாட்டி எவ்வளவு நாள்களாக இந்த வேலையைச் செய்கிறீர்கள்" என்று கேட்கின்றார். அதற்கு அவர், ரொம்ப வருசமா செய்யுறேன்" என்கிறார். "சரி, ஒரு நாளு முழுக்க இதை எல்லாத்தையும் வித்தா உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று கேட்கிறார் அவ்விளைஞர். "இருநூறு முன்னூறு ரூபா கிடைக்கும்" என்கிறார் அப்பாட்டி. சற்றும் தாமதியாமல், "இந்தாங்க 200 ரூபா. நான் கொஞ்சம் காய்கறி எடுத்துக்கிறேன். ஆனால் மீதமெல்லாம் எனக்கு வேண்டாம். நீங்களே வச்சுக்கோங்க" என்கிறார். அந்தப் பாட்டி மிகவும் மகிழ்ச்சியடைகிறார். தொடர்ந்து அவ்விளைஞர், "பாட்டி உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப்போறேன். கண்ண மூடிக்கோங்க" என்று கூறியவாறு ஊதா நிறத்திலான ஓர் அழகான புடவையை அவருக்குக் கொடுத்துவிட்டு, “என்னைய உங்க பேரன்மாதிரி நினைச்சுக்கோங்க” என்று கூறியதும், அவர் திக்குமுக்காடிப்போய், “நீ என் பேரன்தான் சாமி, உன்னைய என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்” என்று கண்கலங்குகிறார். அப்போது அந்த இளைஞர், அந்தப் பாட்டியின் கண்ணீரைத் துடைத்தவாறு, "அழக்கூடாது பாட்டி... நீங்க எப்போதும் சந்தோசமா இருக்கணும்" என்று கூறியவாறு அவ்விடத்தைவிட்டு அகன்று போகிறார். என்னே ஒரு அற்புதமான காட்சி இது! இதுவல்லவா இரக்கத்தின் வெளிப்பாடு! இந்த இளைஞர் யாராக வேண்டுமானலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் தனது எளிய செயல் வழியாக இறைவனின் இரக்கத்தையல்லவா வெளிப்படுத்தியிருக்கிறார். நமது இரக்கமிகு செயல்கள் பரந்த அளவில் வெளிப்பட வேண்டும் என்பது தேவை என்றாலும், முதலில் அவை இதுபோன்ற சிறு சிறு செயல்கள் வழியாகத் தொடங்கட்டும். ஆக, அன்பிலிருந்து இரக்கமும், இரக்கத்திலிருந்து பொதுவுடமையும், பொதுவுடமையிலிருந்து அமைதியும் பிறக்கின்றது என்பதை உணர்ந்துகொள்வோம். உயிர்த்த ஆண்டவரின் அன்புக் கட்டளைகளை நாம் நேரிய உள்ளமுடன் கடைபிடிக்கும்போது இவை நமது வாழ்வில் சாத்தியமாகும். இதனைத்தான், "நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே" என்று கூறுகின்றார் திருத்தூதரான யோவான்.

இன்றைய நற்செய்தியில் “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்று கூறிய தோமாவிடம், எட்டு நாள்களுக்குப்பின் தோன்றிய இயேசு,  “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்று கூறியபோது, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று கூறி ஆண்டவரைப் பற்றிக்கொள்கின்றார் அவர். “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று தோமா அறிக்கையிட்ட அந்த வார்த்தைகளில் உயிர்த்த ஆண்டவரின் இரக்கமிகு செயல்களை வெளிப்படுத்துகின்றார். நாம் பிறர்மீது காட்டும் இரக்கம் என்பது நம்முடைய இதயம் மற்றும் தூய அன்பை மற்றவர்களுக்கு வெளிக்காட்டுகிறது. அவ்விரக்கம், நம்மை பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயம் திணிக்கப்பட்ட எல்லைகளில் இருந்தும், தனிமையில் இருந்தும் உடைத்து நம்மை வெளிக்கொண்டு வருகிறது. வாழ்வில் பிரச்னைகளைச் சந்திப்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டே இருக்கிறோம், நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்கிறோம் என்று உணரும்போது இரக்கமிகு செயல்கள் நம்மில் ஊற்றெடுக்கின்றன. மேலும் இரக்க குணத்தோடு இருப்பது நம்மை மகிழ்ச்சியாகவும், மிகுந்த பாதுகாப்பு உணர்வோடும் வைத்துக்கொள்ளும் என்று அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் வலியையும், துன்பங்களையும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, இரக்கத்துடன் உதவ முன்வரும்போது அது அவர்களுக்கு உள்ளார்ந்த உறுதி மற்றும் தன்னம்பிக்கையை அளிக்கும். இரக்கத்தை மேம்படுத்திக் கொள்ள நமக்கு நாமே பயிற்சி அளித்துக்கொண்டால், அது உண்மையிலேயே நல்வாழ்வின் ஆழமான ஆதாரமாக மாறும். அறிவும் ஞானமும் இணைந்த நிலையில் வெளிப்படும் இரக்கம் உண்மையானதாகவும் உள்மனம் சார்ந்ததாகவும் இருக்கும் என்பது திண்ணம். ஆகவே, எத்தகைய வழிகளில் நாம் இயேசுவின் இரக்கத்தையும் அவர் வலியுறுத்தும் அமைதியையும் வெளிப்படுத்தப் போகிறோம் என்பது குறித்து ஆழ்ந்து சிந்திப்போம். நம் நாட்டில் வாழ்ந்த அன்னை தெரசா இயேசுவின் இரக்கத்தை வெளிப்படுத்தும் வாய்க்களாக இருந்தார். அதனால்தான் "எல்லோரும் இறக்கத்தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம்" என்றார். ஆகவே, நமது அன்றாட வாழ்வில், உயிர்த்த ஆண்டவரின் இரக்கமிகு செயல்களை வெளிப்படுத்தி இனிமைமிகு அமைதியான உலகம் படைப்போம். இவ்வருளுக்காக, இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2024, 14:11