தேடுதல்

கோதுமை மணிகள் கோதுமை மணிகள்  

தவக் காலம் 5-ஆம் ஞாயிறு : கோதுமை மணிகளாய்ப் பயன்தருவோம்!

நாம் மண்ணில் விழுந்து மடியாத கோதுமை மணிகளா அல்லது, மண்ணில் விழுந்து மடிந்து பன்மடங்கு விளைச்சளைத் தரும் கோதுமை மணிகளா என்பதை ஆன்ம பரிசோதனை செய்வோம்.
தவக் காலம் 5-ஆம் ஞாயிறு : கோதுமை மணிகளாய்ப் பயன்தருவோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எரே 31:31-34     II.  எபி 5:7-9   III.  யோவா 12:20-33)

இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். கடவுள் இஸ்ரயேல் மக்களுடன் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையின் வழியாக, அவர்கள் என்றுமுள்ள கடவுளின் மக்களாகின்றனர். இந்த புதிய  உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கின்ற நமதாண்டவர் இயேசு, கல்வாரியில் சிந்தவிருக்கும் புனித இரத்தத்தின் வழியாக நாமும் இறைத்தந்தையுடன் அவருடைய சுவிகாரப்பிள்ளைகளாக நிலைவாழ்வில் நுழைகின்றோம். இதனை மையக்கருத்தாகக் கொண்டுள்ளன இன்றைய வாசகங்கள். அதேவேளையில், இந்தப் புதிய உடன்படிக்கையின் அடையாளமான இயேசுவின் வழியில் நாமும் கோதுமை மணிகளாக இம்மண்ணில் விழுந்து மடிந்து பலன் தரவும் அழைக்கப்படுகிறோம். இந்தக் கருத்துக்களை உள்ளத்தில் உள்வாங்கிக்கொண்டு இப்போது நமது மறையுரைச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராம் கடவுள் பழைய மற்றும் புதிய உடன்படிக்கைப் பற்றி பேசுகின்றார். இன்றும் மனிதர் வாழ்வில் உடன்படிக்கை என்பது பல்வேறுத் தளங்களில் மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது. கடவுள் தனது அன்புறவை இஸ்ரயேல் மக்களுடன் நிலைநிறுத்திக்கொள்ள உடன்படிக்கையை ஏற்படுத்தினார் என்பதைப் பார்க்கின்றோம். திருவிவிலியத்தில் பல உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. ஆனால் திருவிவிலியத்தின் கதையையும், கடவுளின் மீட்புத் திட்டத்தையும் நாம் புரிந்துகொள்வதற்கு ஐந்து உடன்படிக்கைகள் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. அவைகள்: நோவாவுடன் உடன்படிக்கை, ஆபிரகாமுடன் உடன்படிக்கை, மோசேயுடன் உடன்படிக்கை, தாவீதுடன் உடன்படிக்கை மற்றும் புதிய உடன்படிக்கை. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்களை மீட்டல் மற்றும் புதுப்பித்தல் பற்றிய எரேமியாவின் வாக்குறுதியில் புதிய உடன்படிக்கை என்பது முதலில் பயன்படுத்தப்பட்ட மொழியாகும். "இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர்”  என்றும், அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்" (காண்க  எரே 31:31, 33) என்று வாசிக்கின்றோம். இந்தப் புதிய உடன்படிக்கையின் அடையாளமாக இயேசு விளங்குகின்றார்.

"கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்" என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்றைய நற்செய்தியின் சாராம்சமாக அமைகின்றது. வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்திருந்த கிரேக்கர் சிலர் அவரைச் சந்தித்துவிட்டுப் போனபின்பு இயேசு, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கூறி தன்னைக் குறித்தும் தனது தியாமிக்க மரணத்தைக் குறித்தும் இவ்வாறு எடுத்துரைக்கின்றார். இங்கே தனது பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு வழியாகவே தான் மாட்சிபெறப் போவதாக உரைக்கின்றார் இயேசு. அதற்குக் கோதுமை மணிகளை உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றார். இயற்கையின் விதிப்படி எந்தவொரு விதையும் குதிருக்குள்ளோ அல்லது மூட்டைக்குள்ளோ இருக்கும்போது அது பாதுகாப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதனால் பயன் ஒன்றுமில்லை. அதேவேளையில், அவ்விதை மண்ணில் விதைக்கப்படும்போதுதான் அது மடிந்து, அதாவது, தனது ஓடுகளை இழந்து பலபோராட்டங்களுக்குப் பிறகு அவ்விதையிலிருக்கும் உயிர் விருட்சமாகிறது. பின்னர் அது பூத்து, காய்த்து, கனி தந்து மனிதர் வாழ்வை மகிழ்விக்கிறது. அவ்வாறே நாமும், கோதுமை மணிகள்போன்று விழுந்து மடிந்து பன்மடங்கு பயன் தருவதற்குத் தயாராக இருக்கவேண்டும். இன்றளவும் உலகில் கிறிஸ்தவம் நீடித்து நிலைத்திருக்கிறது என்றால், அதற்குப் பலரின் வீரமிகு உயிர்த்தியாகம்தான் காரணம். அதாவது, அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் வழியில், கிறிஸ்துவைப் போன்று, கோதுமை மணிகளாக விழுந்து மடிந்து பலன் தந்திருக்கின்றனர். அதன் பயனாளிகளாக நாம் இருக்கின்றோம். அதேவேளையில், நாம் வெறும் பயனாளிகளாக மட்டுமே இருந்துவிட்டுப் போய்விடக் கூடாது. கிறிஸ்துவுக்காக நாமும் அவர்களைப்போல தன்னலம் விடுத்து கோதுமை மணிகளாய் மடிந்து பயன்தர வேண்டும். இதன் காரணமாகவே, "தமக்கென்றே வாழ்வோர்  தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்று கூறுகின்றார் இயேசு. ஆக, இவ்வுலகில் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளைப் பின்பற்றி உயர்ந்த இலட்சியத்திற்காகத் தங்களின் வாழ்வைக் கையளிக்கும் தொண்டர்கள் அனைவரும் நிலைவாழ்வில் அவரோடு தந்தையின் மாட்சியில் பங்குபெறுவர் என்கின்றார். அதனால்தான், தனது மரணத்திற்குத் தடைபோட நினைக்கும் பேதுருவைப் பார்த்து, “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றும் கூறும் இயேசு, தனது சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்” (காண்க. மத் 16:23-25) என்று உரைக்கின்றார்.  

 அடுத்து, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத் தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன்" என்கின்றார். இயேசு, மனிதத்தன்மையில் தனது கலக்கத்தையும் பயத்தையும் வெளிப்படுத்தினாலும், இறைத்தன்மையில் தந்தையின் பெருந்துணையுடன் அதனை வென்றுவிடுவதாகக் கூறுகின்றார். மேலும் இலட்சிய மரணமேற்பது என்பது தனக்குத் தந்தை வழங்கியுள்ள அரியதொரு வாய்ப்பு என்றும், எக்காரணம் கொண்டும் அதனை நழுவவிடமாட்டேன் என்றும் உறுதிபடக் கூறுகின்றார். ‘வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகிவிடக் கூடாது’ என்பார்கள் நம் முன்னவர்கள். இங்கே, இலட்சிய மரணமேற்பதிலிருந்து பின்வாங்கும் நிலையை இவ்வுலகின் தலைவனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சாத்தான் இயேவுக்குக் கொடுக்க விரும்புகின்றான். அதாவது, இந்த இலட்சிய மரணமேற்பதிலிருந்து எப்படியாவது அவரைப் பின்வாங்க வைத்துவிட வேண்டும் என்றும், மீட்புத் திட்டத்தில் அவரைத் தோல்வியுறச் செய்யவேண்டும் என்றும் பலவழிகளிலும் முயற்சி செய்கின்றான். மேலும் இயேசுவின் பாலைவன சோதனையின்போது சாத்தான் அவரிடம் தோற்றுப்போய் ஓடினாலும், தொடர்ந்து அவரை விட்டகலாது மரணமட்டும் அவரை சோதிக்கவே விரும்புகின்றான். ஆனால் தனது உறுதியான உள்ளத்தால் சாத்தானின் செயல்களை முறியடிக்கின்றார் இயேசு. அதனால்தான், “இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான்” என்று உரைக்கின்றார். ஆகவே, இவ்வுலகில் தங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருந்து இறுதிவரைப் போராடும் ஒவ்வொருவருமே சாத்தானை வெல்பவர்கள்தான் என்பதை நம் நினைவில் கொள்வோம்.

கடந்த 1997-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி புதன்கிழமை, மதுரை வில்லாபுரத்தில் எண்ணெய் வாங்குவதற்காகப் பக்கத்தில் உள்ள மளிகைக் கடைக்குப் போய்க்கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் லீலாவதி இரவுடிக் கும்பல் ஒன்றால் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். அந்தப் படுகொலை நடப்பதற்கு முன்பு வரையில் லீலாவதி யார்? என்பதைத் தமிழகம் அறிந்திருக்கவில்லை. தமிழகத்தில் நடந்த முக்கியமான அரசியல் படுகொலைகளில் லீலாவதி மரணமும் ஒன்று. கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்த குப்புசாமி 1977-ஆம் ஆண்டு லீலாவதியைக் கரம்பிடித்தார். வீட்டில் நெசவு வேலை செய்துகொண்டிருந்த லீலாவதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உட் பிரிவான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினராகச் சேர்த்தார் குப்புசாமி. இதன் வழியாக, மண வாழ்விலிருந்து பொது வாழ்க்கைக்குள் வந்தார் லீலாவதி. வறுமையில் வளர்ந்த பின்னணி என்பதால் இயல்பாகவே ஏழைகள் மீது லீலாவதிக்குக் கரிசனம் இருந்தது. அவர்களின் உரிமைகளைத் தட்டிப்பறித்த போதெல்லாம் லீலாவதிக்குக் கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. கட்சிப் பணியும் சமூகச் செயல்பாடுகளும் லீலாவதியைக் குறுகிய காலத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக்கியது. வில்லாபுரம் பகுதி மக்களின் நம்பிக்கையை வெகுவாகச் சம்பாதித்தார் அவர். வட்டிக்குப் பணம் வசூல், ரேஷன் பொருள்கள் கடத்தல், அரசு குடி தண்ணீரை விலைக்கு விற்பது, ரௌடியிசம் ஆகியவை 1990-களில் மதுரை வில்லாபுரம் பகுதியின் முக்கியமான பிரச்னைகளாக எதிரொலித்தன. அப்படியான சூழலில், 1996-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த தி.மு.க, சில மாதங்களிலேயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. உள்ளாட்சி இடங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வில்லாபுரம் 59-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு லீலாவதியை நிறுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அதுவரை தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்த வில்லாபுரத்தை மார்க்சிஸ்ட் கட்சி கைப்பற்றியது. அதற்குக் காரணம், லீலாவதிக்கு அங்கே இருந்த தனிப்பட்ட செல்வாக்கு. அன்றைக்கு வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாய் எல்லாம் இல்லை. மாநகராட்சி வழியாகத்தான் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. அந்தத் தண்ணீரை விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள் அரசியல் பின்புலம் கொண்ட ரெளடிகள். கவுன்சிலரான லீலாவதி அதை எதிர்த்துக் குரல் கொடுத்தார். வில்லாபுரத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் தண்ணீர் வரும். தண்ணீர் கொண்டுவரும் மாநகராட்சி தண்ணீர் லாரியைக் கைப்பற்றி, ரௌடிகள் விலை வைத்து விற்றுக் கொண்டிருந்தனர். ஒரு குடம் தண்ணீர் 2 ரூபாய் வரை விலை வைக்கப்பட்டது. 1997-இல் இரண்டு ரூபாய் என்பது ஏழைகளுக்குப் பெரிய தொகைதான். மறுபுறம் மக்களுக்குப் போக வேண்டிய தண்ணீர் மறைமுகமாக உணவகங்களுக்கு வழங்கப்பட்டது. வாகனத்தில் வந்த தண்ணீரைப் பிடிக்க மக்கள் கூட்டம் முண்டியடிக்க, அதை வைத்து கல்லா கட்டினார்கள் இரவுடிகள். அதேவேளையில், வில்லாபுரத்தில் குடிநீர்க் குழாயோ, குடிநீர்த் தொட்டியோ அமைக்கவிடாமல் அப்போதைய அரசியல்வாதிகளும் பார்த்துக் கொண்டனர்.

இச்சூழலில், 'வில்லாபுரத்தில் தண்ணீர்க் குழாய்களும் தண்ணீர்த் தொட்டியும் அமைக்க வேண்டும்' எனக் கவுன்சிலர் லீலாவதி மதுரை மேயருக்கு மனுக்கொடுத்தார். மக்களைத் திரட்டி தொடர்ச்சியாகப் போராட்டமும் நடத்தினார். அத்துடன் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கோரிக்கையும் எழுப்பினார். இதனால், வில்லாபுரம் பகுதியில் குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் வேலைகள் நடைபெற்றன. மாநகராட்சி குழாய் வழியாகத் தண்ணீர் விநியோக சோதனையும் நடந்து முடிந்தது. மறுபுறம், கவுன்சிலர் என்கிற முறையில் ரேஷன் கடை முறைகேடுகளையும் தட்டிக் கேட்டுக்கொண்டிருந்தார் லீலாவதி. மேலும் அப்பகுதியில் ஒவ்வொரு கடையிலும் ரௌடிகள் தண்டல் வசூல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால், கோபத்தில் இருந்த வியாபாரிகளின் ஆதரவும் லீலாவதிக்குக் கிடைத்தது. அதுமட்டுமன்றி, லீலாவதியின் எதிர்ப்பு அரசியல் ரெளடிகளின் வருமானத்துக்கு வேட்டு வைத்ததால், அது அவர்களின் கோபத்தை இன்னும் அதிகரிக்கவே செய்தது.. இப்படியான சூழலில்தான் 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி லீலாவதி மிகவும் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு மிப்பெரிய அரசியல் பின்புலமும் இருந்தது. லீலாவதி இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடைகள் அடைக்கப்பட்டன. லீலாவதி கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் நடந்தன. பொது மக்களிடம் அப்படி ஒரு எழுச்சி ஏற்படாமல் போயிருந்தால் லீலாவதி வழக்கை இழுத்து மூடியிருப்பார்கள். மேலும் வில்லாபுரத்தில் இன்னொரு கட்சி வெல்ல முடியாத அளவுக்கு அரசியல் மறுமலர்ச்சியை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் லீலாவதி என்பதுதான் நிதர்சனமான உண்மை. இச்சம்பவத்திற்குப் பிறகு, வில்லாபுரம் பகுதிக்குக் குடிநீர்க் குழாய்களில் முதன்முறையாகத் தண்ணீர் வந்தபோது, அதைக் குடங்களில் பிடித்துக்கொண்டு போன மக்கள் வீட்டுக்குக் கொண்டு போகாமல் லீலாவதி உயிர்விட்ட இடத்தில் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள். அன்று லீலாவதி எதுவேண்டுமென போராடி உயிர் துறந்தாரோ, இன்று அம்மக்களுக்கு அது கிடைத்துள்ளது. லீலாவதி கோதுமை மணியாய் விழுந்து மடிந்து இன்று அம்மக்களுக்குப் பலன் தந்துகொண்டிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய பேருண்மை!

"அநீதிக்கெதிராக உயராத கையும் அநீதிக்கெதிராக திறக்காத வாயும் அடிமையாக இருக்க மட்டுமே அருகதையானது" என்றார் சேகுவேரா.  தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயச் செயல்களைக் கண்டு வீறுகொண்டு எழாத அனைவருமே தமக்கென்று வாழ்பவர்கள், மாறாக, அவைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து உயிர்துறப்பவர்கள் யாவரும் இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதவர்கள். இவர்கள்தான் கோதுமை மணிகளாய் மண்ணில் விழுந்து மடிந்து என்றென்றும் பலன்தருபவர்கள். இவர்கள் சாவை வென்றவர்கள் மட்டுமல்ல, மரணித்தாலும் மக்களின் மனங்களில் என்றுமே வாழ்பவர்கள். ஆகவே, நாம் மண்ணில் விழுந்து மடியாத கோதுமை மணிகளா அல்லது, மண்ணில் விழுந்து மடிந்து பன்மடங்கு பயன் தரும் கோதுமை மணிகளா என்பதை ஆன்ம பரிசோதனை செய்வோம். இயேசுவின் வழியில், இயேசுவில் இணைந்து, இயேசுவைப் போல பன்மடங்கு பலன்தரும் கோதுமை மணிகளாய் வாழ இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2024, 12:27