தேடுதல்

இறைவேண்டல் செய்யும் சீன கிறிஸ்தவர்கள் இறைவேண்டல் செய்யும் சீன கிறிஸ்தவர்கள்   (©Grigory Kubatyan - stock.adobe.com)

சீனாவின் Shaowu-வில் புதிய ஆயரின் திருநிலைப்பாட்டு நிகழ்வு!

புதிய ஆயரின் திருநிலைப்பாட்டுத் திருப்பலியில் 80 அருள்பணியாளர்களும் 360 அருள்சகோதரிகளும், பல்வேறு பொதுநிலையினரும் திரளாகக் கலந்துகொண்டனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜனவரி 31, இப்புதனன்று, சீன மாநிலமான Fujian-இல் உள்ள Shaowu (Minbei) -வின் புதிய ஆயராக அருள்பணியாளர் Pietro Wu Yishun அவர்கள் திருநிலைப்படுத்தப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அருள்பணியாளர் Pietro Wu Yishun அவர்கள் நியமிக்கப்பட்டார்.

திருப்பீடத்திற்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான தற்காலிக உடன்படிக்கையின்படி, அவரது ஆயர் திருநிலைபாட்டைத் தொடர்ந்து, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் ஜனவரி 31, இப்புதனன்று இந்த நியமனத்தை அறிவித்தது.

புதிய ஆயர் Pietro Wu Yishun அவர்கள், 1964-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி பிறந்தார். 1992-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சியாமென் மறைமாவட்டத்தில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்டார். பின்னர் மின்பேக் நகரத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு நான்பிங்கின் பங்குத் தந்தையாகவும் மற்றும் ஷாவு மற்றும் ஜியானோவின் அப்போஸ்தலிக்க மாநிலங்களுக்குப் பொறுப்பாளராகவும், இன்னும் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தார்.

ஆயர்கள் நியமனம் தொடர்பான 2018-இல் ஏற்பட்ட சீன-வத்திக்கான் உடன்படிக்கையில் இருந்து வத்திக்கான் மற்றும் அரசின் ஒப்புதலுடன் கம்யூனிஸ்ட் தேசத்தில் இதுவரை ஒன்பது ஆயர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருத்தந்தை ஆணை இன்றி முன்னர் நியமிக்கப்பட்ட பல ஆயர்களையும் வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2024, 16:24