தேடுதல்

விவிலியத்தின் ஆதிகாலப் பிரதி விவிலியத்தின் ஆதிகாலப் பிரதி  (AFP or licensors)

தடம் தந்த தகைமை - அசீரியப் படைத்தலைவர்களின் கலக்கம்

அசீரியப் படைத்தலைவர்கள் தங்கள் மேலாடையைக் கிழித்துக்கொண்டார்கள்; பெரிதும் கலக்கமுற்றார்கள். அவர்களுடைய அழுகைக் குரலும் பெரும் கூச்சலும் பாசறையெங்கும் ஒலித்தன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

யூதித்து வெட்டி எடுத்து வந்த ஒலோபெரினின் தலையை இஸ்ரயேலர் மதில்மேல் தொங்கவிட்டார்கள்; பிறகு எல்லாரும் தங்கள் படைக்கலங்களை எடுத்துக் கொண்டு, அணி அணியாக மலைப்பாதைகளில் இறங்கிச் சென்றார்கள். அசீரியர்கள் இவர்களைக் கண்ணுற்றபோது தங்கள் தலைவர்களுக்கு ஆளனுப்பினார்கள்; இவர்கள் படைத்தலைவர்களிடமும் ஆயிரத்தவர் தலைவர்களிடமும் தங்கள் ஆளுநர்கள் அனைவரிடமும் சென்றார்கள்; ஒலோபெரினின் கூடாரத்துக்குச் சென்று அவனுடைய உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாய் இருந்தவனிடம், “நம் தலைவரை எழுப்பி விடும். அந்த அடிமைகள் முழுதும் அழிந்துபோகும்படி நம்மேல் போர்தொடுக்கத் துணிந்து கீழே இறங்கி வருகிறார்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே பகோவா உள்ளே சென்று, கூடாரத்தின் கதவைத் தட்டினான்; ஏனெனில், ஒலோபெரின் யூதித்துடன் உறங்குவதாக நினைத்துக்கொண்டிருந்தான். ஒரு மறுமொழியும் வராததால், அவன் கதவைத் திறந்து படுக்கையறைக்குள் சென்றான். கட்டில் அருகே ஒலோபெரின் தரையில் இறந்து கிடந்ததையும் அவன் தலை துண்டிக்கப் பட்டிருந்ததையும் கண்டான்; உடனே பெருங் கூச்சலிட்டான்; அழுது, புலம்பி, உரக்க அலறித் தன் ஆடையைக் கிழித்துக் கொண்டான். பிறகு யூதித்து தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்தான்; அங்கு அவரைக் காணாததால் வெளியே மக்களிடம் ஓடிவந்து உரத்த குரலில், “அந்த அடிமைகள் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். ஓர் எபிரேயப் பெண் நெபுகத்னேசர் மன்னரின் குடும்பத்துக்கே இழிவு இழைத்துவிட்டாள். இதோ, ஒலோபெரின் தரையில் கிடக்கிறார். அவரது தலையைக் காணோம்!” என்று கத்தினான்.

அசீரியப் படைத்தலைவர்கள் இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது தங்கள் மேலாடையைக் கிழித்துக்கொண்டார்கள்; பெரிதும் கலக்கமுற்றார்கள். அவர்களுடைய அழுகைக் குரலும் பெரும் கூச்சலும் பாசறையெங்கும் ஒலித்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2023, 15:44