ஜப்பான் போர்க்கதிகளை விடுவிக்க வத்திக்கான் எடுத்த முயற்சிகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இரண்டாம் உலகப்போருக்குப் பின் சைபீரியாவிலும் ஏனைய சோவியத் யூனியன் முகாம்களிலும் சிறைவைக்கப்பட்டிருந்த ஜப்பான் வீரர்களை விடுவிப்பதில் வத்திக்கான் நாடு சிறப்புப் பங்காற்றியுள்ளதாக அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் Nihon பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Matsumoto Saho என்ற பேராசிரியர் அண்மையில் வெளியிட்டுள்ள வரலாற்று ஆவணங்களின்படி, ஜப்பான் நாட்டு போர்க்கைதிகளை விடுவிப்பதில் வத்திக்கான் நாடு, 1946 முதல் 48 வரை எடுத்த முயற்சிகள் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
தூதரக அளவில் வத்திக்கான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த ஏறக்குறைய 40 ஆவணங்களை ஆய்வு செய்த பேராசிரியர் Matsumoto Saho அவர்கள், ஜப்பானுக்கான திருப்பீடத் தூதுவர் வத்திக்கானுக்கு 1947ல் அனுப்பிய ஒரு தந்திச் செய்தியில், ஜப்பான் போர்க்கைதிகளை விடுவிக்க சோவியத் யூனியனுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டின் பேச்சுவார்த்தைகள் வலியுறுத்தப்படவேண்டும் எனக் கேட்டுள்ளதையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
தங்கள் உறவினர்களை விடுவித்து தங்களுடன் சேர்க்க ஜப்பானின் பல குடும்பத்தினர் இணைந்து வத்திக்கானுக்கு 1948 ஆகஸ்டில் அனுப்பிய கடிதமும், தங்களால் இயன்றதை செய்ய உள்ளதாக வத்திக்கான் பதில் கடிதம் எழுதியதும் தற்போது ஜப்பான் பேராசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஜப்பான் போர்க்கைதிகளை விடுவிப்பதில் மனிதாபிமான சிந்தனையுடன் வத்திக்கான் எடுத்த முயற்சிகள் குறித்த ஆவணங்கள் பலவும் தற்போது ஜப்பான் பேராசிரியரால் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்