தேடுதல்

சிங்கக் குகையில் தள்ளப்பட்ட தானியேல் சிங்கக் குகையில் தள்ளப்பட்ட தானியேல்  

தடம் தந்த தகைமை – தானியேல் மீது குற்றச்சாட்டு

தானியேல் மீது குற்றம் சாட்டுவதற்குரிய எந்தத் தவற்றையும் ஊழலையும் மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவர் நேர்மையாய் நடந்துகொண்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மேதியனாகிய தாரியு என்பவன் தன் அறுபத்திரண்டாம் வயதில் அரசை ஏற்றுக் கொண்டான். தன் நாடு முழுவதும் வரி வசூலிப்பதற்கென்று நூற்றிருபது தண்டல்காரரைத் தாரியு நியமித்தான். இத்தண்டல்காரரைக் கண்காணிப்பதற்கென்று மூன்று மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான். அரசனுக்கு எவ்வித இழப்பும் நேரிடாவண்ணம் இம்மூவரிடமும் அத்தண்டல்காரர்கள் கணக்குக் கொடுக்கவேண்டும். இம்மூவருள் தானியேலும் ஒருவர். இவர் மற்ற மேற்பார்வையாளரையும் தண்டல்காரரையும்விடச் சிறந்து விளங்கினார்; ஏனெனில், வியத்தகு ஆவி அவரிடத்தில் இருந்தது. தன் அரசின் முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம் என அரசன் எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் மற்ற மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் அரசைக் கண்காணிப்பதில் தானியேலின்மீது குற்றம்சாட்ட வகை தேடினார்கள். அவரிடத்தில் குற்றம் சாட்டுவதற்குரிய எந்தத் தவற்றையும் ஊழலையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஏனெனில் அவர் நேர்மையாய் நடந்துகொண்டார். அவரிடம் எவ்விதத் தவறும் ஊழலும் காணப்படவில்லை. அப்பொழுது அவர்கள், “இந்தத் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் தவிர வேறெதிலும் அவர்மீது குற்றம் காணமுடியாது” என்றார்கள்.

எனவே, இந்த மேற்பார்வையாளரும் தண்டல்காரரும் தங்களுக்குள் கூடிப்பேசி அரசனிடம் வந்து அவனிடம், “தாரியு அரசரே! நீர் நீடூழி வாழ்க! அதிகாரிகள், தண்டல்காரர்கள், அமைச்சர், ஆளுநர் ஆகிய நாங்கள் அனைவரும் கலந்தாலோசித்துக் கூறுவது: முப்பது நாள் வரையில் அரசராகிய தங்களிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றித் தடையுத்தரவு போடவேண்டும். 8ஆகையால், அரசரே! இப்பொழுதே அச்சட்டத்தை இயற்றித் தடையுத்தரவில் கையெழுத்திடும்; அப்பொழுதுதான் மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பது போல, இச்சட்டமும் மாறாதிருக்கும்” என்றார்கள். அவ்வாறே தாரியு அரசன் சட்டத்தில் கையொப்பமிட்டுத் தடையுத்தரவு பிறப்பித்தான். தானியேல் இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டு மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருந்தன. தமது வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி அவருக்கு நன்றி செலுத்துவார். முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அந்த மனிதர்கள் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். உடனே அவர்கள் அரசனை அணுகி, அவனது தடையுத்தரவைப் பற்றிக் குறிப்பிட்டு, “அரசரே! முப்பது நாள்வரையில் அரசராகிய உம்மிடமன்றி வேறெந்தத் தெய்வத்திடமோ மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகையில் தள்ளப்படுவான் என்ற தடையுத்தரவில் கையொப்பமிட்டுள்ளீர் அல்லவா?” என்றார்கள். அதற்கு அரசன், “ஆம், மேதியர், பாரசீகரின் சட்டங்கள் மாறாதிருப்பதுபோல், இதுவும் மாறாததே” என்றான். உடனே அவர்கள் அரசனை நோக்கி, “யூதாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்களுள் ஒருவனாகிய தானியேல் உம்மை மதியாமல், நீர் கையொப்பமிட்டுள்ள தடையுத்தரவை மீறி நாள்தோறும் மூன்று வேளையும் வேண்டுதல் செய்கிறான்” என்றார்கள்.

ஆனால், அரசன் இந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் மனம் வருந்தினான்; தானியேலைக் காப்பாற்றத் தனக்குள் உறுதி பூண்டவனாய், அன்று கதிரவன் மறையும் வரையில் அவரைக் காப்பாற்ற வழி தேடினான்.

ஆனால் அந்த மனிதர்கள் முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, அரசனிடம் வந்து, அவனை நோக்கி, “அரசரே! மேதியர், பாரசீகரின் சட்டப்படி, அரசன் விடுத்த தடையுத்தரவோ சட்டமோ மாற்றத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளும்” என்றனர்.

ஆகவே, அரசனுடைய கட்டளைப்படி தானியேல் கொண்டுவரப்பட்டுச் சிங்கக் குகையில் தள்ளப்பட்டார். அப்பொழுது அரசன் தானியேலை நோக்கி, “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2023, 11:17