தேடுதல்

அரசர் நெபுகத்னேசர் பொற்சிலை அரசர் நெபுகத்னேசர் பொற்சிலை   (BibleArtLibrary)

தடம் தந்த தகைமை - பொற்சிலை வழிபாடு

நெபுகத்னேசர் அரசர் தான் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு சிற்றரசர்களும், அதிகாரிகளும், மற்றெல்லா அலுவலரும் ஒன்றாய்க் கூடி வரவேண்டுமென்று ஆணையிட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நெபுகத்னேசர் அரசர் அறுபது முழ உயரமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் நாட்டிலிருந்த ‘தூரா’ என்னும் சமவெளியில் நிறுத்தி வைத்தார். பின்பு நெபுகத்னேசர் அரசர் தான் நிறுவிய சிலையின் அர்ப்பணிப்புக்கு சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அறிவுரை கூறுவோரும் நிதிப்பொறுப்பாளரும் நீதிபதிகளும் மணியக்காரரும் மற்றெல்லா அலுவலரும் ஒன்றாய்க் கூடி வரவேண்டுமென்று ஆணையிட்டார். அவர்கள் நெபுகத்னேசர் நிறுவிய சிலை முன் வந்து நின்றனர். எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கியவுடன், எல்லா மக்களும் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசர் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழுதார்கள்.

அப்பொழுது கல்தேயர் சிலர் நெபுகத்னேசர் அரசரிடம், “அரசரே! நீர் நீடூழி வாழ்க! அரசரே! எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் எந்த மனிதனும் உடனே தாழவீழ்ந்து பொற்சிலையைப் பணியவேண்டும் என்று, நீர் கட்டளை பிறப்பித்தீர், ஆனால், பாபிலோன் நாட்டின் புறப்பகுதிகளுக்குப் பொறுப்பாளர்களாக சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்னும் யூதர்களை நீர் நியமித்தீர் அல்லவா? அந்தப் பேர்வழிகள் உமது கட்டளையை மதிக்கவில்லை; உம் தெய்வங்களை வணங்கவில்லை; நீர் நிறுவின பொற்சிலையைப் பணிந்து தொழவும் இல்லை” என்றனர்.

உடனே நெபுகத்னேசர் கடுஞ்சினமுற்று, சாத்ராக்கையும், மேசாக்கையும், ஆபேத்நெகோவையும் பிடித்து வரும்படி கட்டளையிட்டான். அவ்வாறே அரசன் முன்னிலைக்கு அவர்களைப் பிடித்துக்கொண்டு வந்தனர். சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கி, “இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார்” என்றார்கள். இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவரது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசர் கட்டளையிட்டார். மன்னரின் வீரர்களும் அவர்களை மேற்போர்வையோடும் உள்ளாடையோடும் தலைப்பாகையோடும் மற்ற ஆடைகளோடும் சேர்த்துக்கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போட்டார்கள். அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, “மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!” என்றார். “ஆம் அரசரே” என்று அவர்கள் விடையளித்தனர். அதற்கு அவர், “கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவர் போல் தோன்றுகிறார்!” என்றார். உடனே நெபுகத்னேசர் எரிகிற தீச்சூளையின் வாயிலருகில் வந்து நின்று, “உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு, ஆபேத்நெகோ வெளியே வாருங்கள்” என்றார். அவ்வாறே சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர் நெருப்பைவிட்டு வெளியே வந்தனர். சிற்றரசர்களும் அதிகாரிகளும் ஆளுநரும் அரசனுக்கு அறிவுரை கூறுவோரும் கூடிவந்து, அந்த மனிதர்களின் உடலில் தீப்பட்ட அடையாளமே இல்லாமலும் அவர்களது தலைமுடி கருகாமலும் அவர்களுடைய ஆடைகள் தீப்பற்றாமலும் நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் வீசாமலும் இருப்பதைக் கண்டார்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2023, 13:15