புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுபவர்களாக...
மெரினா ராஜ் - வத்திக்கான்
மியான்மாரில் வாழும் புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து நீக்க அந்நாட்டு அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும், புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படுபவர்களாக, ஏற்றுக்கொள்ளப்படுபவர்களாக இருக்க ஆக்கப்பூர்வமான செயல்கள் ஆற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் மியான்மார் ஆயர் Francis Xavier Vira Arpondratana.
மியான்மாரில் நடந்து வரும் உள்நாட்டு மோதல் காரணமாக மக்கள் பலர் புலம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக புறக்கணிப்பால் அம்மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு கூறியுள்ளார் Chiang Mai மறைமாவட்டத்தின் ஆயர் Francis Xavier Vira Arpondratana.
நமது அண்டை வீட்டார் நம் வாசல் கதவுகளைத் தட்டி, அடைக்கலம் தேடி வருகின்றனர் என்றும், நம் உடன் சகோதர சகோதரிகளாகிய அவர்களின் கடினமான இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் அவர்களை வரவேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஆயர் Francis Xavier
1951ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற இடம்பெயர்ந்தோர்க்கான மாநாட்டில் இடம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோர் பாதுகாப்பிற்கான ஒரு குறிப்பிட்ட தேசிய சட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்றும், ஆசியான் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் அழைப்புகளுக்கு செவிசாய்த்து புலம்பெயர்ந்தோர்க்கு உதவவேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன உள்ளூர் காரித்தாஸ் அமைப்புக்கள்.
இதனால் இடம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோர்க்கான பாதுகாப்புக் கொள்கைகளை சீர்திருத்த முடியும் என்றும், இன்னும் அதிக இரக்க குணத்துடன் நாம் செயலாற்ற முடியும் என்றும் காரித்தாஸ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
தாய்லாந்து மற்றும் மியான்மார் எல்லையில் தாய்லாந்து அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பது புலம்பெயர்ந்தோர் முகாம்களில் 90,000க்கும் மேற்பட்ட மியான்மார் மக்கள் புலம்பெயர்ந்தோர்களாக வாழ்கின்றனர். ( Fides )
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்