தேடுதல்

வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுகோள் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுகோள்   (AFP or licensors)

ஜூலை 2, ஞாயிறு, மணிப்பூருக்கான இறைவேண்டல் தினம்

மணிப்பூரில் நிலவும் நிலைமை குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்கு உதவும் வகையில், டார்ச் லைட் ஊர்வலங்கள் அல்லது அமைதி பேரணிகளை ஏற்பாடு செய்யவும் இந்தியக் கத்தோலிக்க ஆயர்பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மணிப்பூர் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஜூலை 2, ஞாயிற்றுக்கிழமையை இறைவேண்டல் நாளாகக் கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளது இந்தியக் கத்தோலிக்க ஆயர்பேரவை.

இதுகுறித்து அறிவிப்பு செய்துள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும் Trichur, பேராயருமான Andrews Thazhath அவர்கள், இந்த இறைவேண்டல் முயற்சியானது கடவுளிடமிருந்து அமைதிக்கான கொடையைப் பெறவும், வடகிழக்கு மாநிலத்தில் மெய்டேய் மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையேயான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டு முயற்சி குறித்து இறைமக்களுக்கு ஜூன் 25, இஞ்ஞாயிறன்று அறியவிப்பு செய்யுமாறு அனைத்து ஆயர்களையும் அருள்பணியாளர்களையும் கேட்டுக்கொண்ட பேராயர் Thazhath அவர்கள், ஜூலை 2-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்நிகழ்வை நாடு முழுவதும் அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுமாறும் அழைப்புவிடுத்துள்ளார்.

விசுவாசிகள் மன்றாட்டுகளின்போது அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறப்பு நோக்கங்களைச் சேர்ப்பது, மற்றும், மணிப்பூர் மக்களுக்காகச் சிறப்பாக செபிப்பதற்காக அனைத்துப்  பங்குத்தளங்களிலும் ஒரு மணிநேரம் சிறப்பு வழிபாடு நடத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார் பேராயர் Thazhath

இதற்கிடையில் இரு சமூகங்களுக்கிடையில் மீண்டும் உரையாடலைத் தொடங்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், ஆனால் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளது என்று கூறியுள்ள இம்பால் பேராயர் Dominic Lumon அவர்கள், இச்சூழலில் இறைவேண்டல் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும் என்று தெரிவித்துள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2023, 14:49