தேடுதல்

தனது சீடர்களுக்குப் படிப்பினைகள் வழங்குகிறார் இயேசு தனது சீடர்களுக்குப் படிப்பினைகள் வழங்குகிறார் இயேசு  

பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு: என்றுமிருக்கும் தூய ஆவியார்!

உண்மையின் ஆவியானவர் நம் உள்ளங்களில் உறைந்திருக்கும்போது நம்மிடம் நம்பகத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் வெள்ளமெனப் பாய்ந்தோடும்.
பாஸ்கா காலத்தின் 6-ஆம் ஞாயிறு: என்றுமிருக்கும் தூய ஆவியார்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. திப 8: 5-8. 14-17     II.  1 பேது 3: 15-18     III.  யோவா 14: 15-21)

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு இன்று சிறப்பிக்கப்படுகின்றது. இன்றைய நாளில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள மூன்று வாசகங்களில் தூய ஆவியானவர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக விரைவில் நாம் தூய ஆவியானவர் பெருவிழாவையும் கொண்டாடவிருக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம்மோடு என்றும் துணையிருப்பதற்குத் தூய ஆவியாரை இறைத்தந்தையிடமிருந்து பெற்றுத் தருவதாக வாக்களிக்கின்றார் நமதாண்டவர் இயேசு. இப்போது அதுகுறித்த நற்செய்தி வாசகத்திற்குச் செவிமடுப்போம். “நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில், அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இறைத்தந்தையினுடனான தனது உறவைக் குறித்தும் பேசுகின்றார் இயேசு.

உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்

உலகை மீட்கும் இறைத்திட்டத்தில் தூய ஆவியாருக்கு மிகப் முக்கிய பங்குண்டு என்பதை திருவிவிலியம் நமக்கு சிறப்பாக எடுத்தியம்புகிறது. உங்களுக்குத் துணையாளராம் தூய ஆவியைப் பெற்றுத் தருவேன் என்று கூறும் இயேசு, அவர் உண்மையை வெளிப்படுத்துக்கூடியவர் என்றதொரு முக்கியமான அவரது இயல்புகளில் ஒன்றையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். மேலும் உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை என்றும் எடுத்துரைக்கின்றார். அப்படியென்றால், உண்மைக்குப் புறம்பாக செயல்படும் இவ்வுலகம் அவரை ஏற்றுக்கொள்ளாது என்று அர்த்தம் பெறுகிறது. காரணம், உண்மை கசக்கும். உண்மை, அன்பு, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், ஒன்றுபடுத்துதல் ஆகியவை தூய ஆவிக்குரிய இயல்புகள். ஆக, இதற்கு மாறாக நடப்பவர்கள் தூய ஆவியாரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் இருளின் பிடியில் வாழக்கூடியவர்கள். அதனால்தான் இதனை புரிந்துகொள்ளாத பிலாத்து, ஆண்டவர் இயேசுவிடம், உண்மையா அது என்ன என்று கேட்டான். இன்றைய கால கட்டங்களில் அறநெறித் தவறி வாழும் ஒரு நபரைக் குறித்துப்பேசும்போது, அவரிடம் நம்பகத்தன்மை இல்லை, உண்மைத்தன்மை இல்லை, வெளிப்படைத்தன்மை இல்லை என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றோம். ஆக, தூய ஆவியாரைப் பெற்றிருக்கும் ஒருவர் உண்மைத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்டிருப்பார் என்பது திண்ணம். வெளிப்படைத்தன்மை என்பது ஒளிவுமறைவு இல்லாத நடத்தையைக் குறிக்கிறது. அதாவது, ‘நான் இப்படித்தான் இருப்பேன், சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு என்று சொல்வேன். இதனைச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை, இதற்காக எந்த விலையைக் கொடுப்பதற்கும் நான் தயார்’ என்று உண்மையின் பக்கம் நிற்போர் மிகவும் துணிச்சலுடன் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். "நான் உண்மையானவனாக வாழ்வதற்காக இந்த உலகம் எனக்கு அடிக்கடி அபராதம் போடுகிறது... பரவாயில்லை. பொய்மையின் தோல்களில் ஏறிக்கொண்டு உலகைச் சுற்றி வருவதைவிட, உண்மையின் கால்களைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது கூட உத்தமமானதுதான்" என்கிறார் கவிஞர் மு. மேத்தா.

உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்

இயேசு கைதுசெய்யப்பட்டு தலைமைக்குருவின் முன்பு நிறுத்தப்படுகிறார். அப்போது தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப் பற்றியும், அவருடைய போதனைகளைப் பற்றியும் அவரிடம் வினவுகின்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே” என்றார். அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், “தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?” என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். இயேசு அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார் (காண்க யோவா 18:23).

இந்நாகழ்விலும் கூட ஒன்றை நாம் உற்றுக் கவனிக்க வேண்டும். அதாவது, இயேசு அச்சமின்றி இவ்வுண்மையை வெளிப்படையாகக் கூறியபோது அவருக்கு அறை விழுகிறது, ஆனாலும், வெறுமனே வாய்பொத்தி நிற்கவில்லை. “உண்மையைத்தானே கூறினேன். அதற்காக ஏன் என்னை அடிக்கிறாய்” என்று உறுதியான மனதுடன் அப்படைவீரரை நோக்கிக் கேள்வி எழுப்புகிறார். இன்றைய நம் இந்திய அரசியல் சூழலில் உண்மையை பேசுபவர்கள் யாருக்கும் தெரியாமல் கைது செய்யப்படுகிறார்கள், அவர்கள் வீடுகளுக்கு வருமான வரித்துறையினர் சொல்லாமல் கொள்ளாமல் சோதனையிட வருகின்றனர், மேலும் உண்மையை உரைக்கும் அந்தச் சம்மந்தப்பட்ட நபர் காணாமலே போகின்றார் அல்லது படுகொலை செய்யப்படுகின்றார் என்று எதிர்கட்சியினரும், சமூக நலன் விரும்பிகளும் ஆளும் அரசை நோக்கி எதிர்க்குரல் எழுப்புவதைக் காண்கின்றோம். ஆனால், உண்மைக்காக வாழும் மனிதர்கள் எப்படிப்பட்ட துயரமான சூழல்களுக்குத் தள்ளப்பட்டாலும், அந்த உண்மையே அவர்களுக்கு ஒருநாள் விடுதலை அளிக்கும் என்பதைத்தான் “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” (காண்க யோவா 8:31-32) என்கின்றார் இயேசு.

இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது, இறைவனோடு இருக்கப்போகும் நிலைவாழ்வே என்றும் நிரந்தரமானது என்பதை அறிந்துகொள்வதே உண்மை. இதனையே, "உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு" (காண்க. யோவா 17:3) என்று இயேசுவும் எடுத்துரைக்கின்றார். ஆகவே, இந்த உண்மையை நாம் உணர்ந்துகொள்ளும்போது, இவ்வுலகப்பற்றை விடுத்து என்றும் நிரந்தமாக இருக்கின்ற இறைவனை மட்டுமே பற்றிக்கொள்ள நம் மனம் விரும்பும். இதுவே நமக்கு விடுதலை அளிக்கும். மேலும், இத்தகைய நிலையில், சுயநலம் விடுத்து அன்பு, உண்மை, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களுக்காக வாழவும், அவைகளை நிலைநிறுத்த நம் உயிரைக் கொடுக்கவும் என்றும் நாம் தயாராக இருப்போம்.

துணையாளர் என்னும் தூய ஆவியார்

‘துணையாளர்’ என்ற வார்த்தையை, ‘வாழ்வின் சரிபாதியாக நம்மோடு இணைந்திருப்பவர், துணை நிற்பவர், வழிகாட்டுபவர்’ என்று நாம் வரையறை செய்யலாம். ‘துணையாளர்’ என்பதற்கான கிரேக்க மூலச் சொல் 'பராக்கிலீத்தோஸ்' என்பதாகும். இவ்வார்த்தைக்கு வாதிடுபவர், வழக்கறிஞர், பரிந்து பேசுபவர், பதிலாகப் பேசுபவர், ஆறுதல் அளிப்பவர், ஊக்கம் ஊட்டுபவர் என்ற பொருள்களைக் கொண்டுள்ளது. இங்கே, இயேசு மற்றொரு துணையாளரை உங்களுக்கு அனுப்புவேன் என்று கூறும்போது இயேசுவே முதல் துணையாளராக விளங்குகிறார் என்பது நமக்குத் தெளிவாகிறது. இதன் காரணமாகவே, “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்” என்கின்றார் இயேசு. மேலும் மற்றொரு துணையாளரான இந்தத் தூய ஆவியானவர் திருஅவையில் என்றுமே இருப்பார். இவர் திருஅவையின் ஆன்மாவாகப் போற்றப்படுகிறார். திருஅவையின் அனைத்து செயல்களையும் உள்ளிருந்து ஊக்குவிக்கின்றார். எனவே திருஅவைக்கு ஆன்மாவாக இருக்கும் தூய ஆவியார் நம் ஒவ்வொருவருக்குள்ளும் குடிகொண்டிருக்கின்றார். அதனால்தான், அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார் என்கின்றார் இயேசு. மேலும், “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா?” (காண்க. 1 கொரி 6:19) என்று கேள்வி எழுப்புகின்றார் புனித பவுலடியார்.

ஒன்றுபடுத்தும் தூய ஆவியார்

இயேசு தனது பணிவாழ்வின் போது சமாரியாருக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை நாம் அறிவோம். ‘அவர்கள் எங்களுக்கு அறவே ஆகாது’ என்று யூதர்கள் புறந்தள்ளும் அளவிற்குச் சமாரியர்கள் யூதர்களால் வெறுத்தொதுக்கப்பட்டனர். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு திருத்தூதரான பிலிப்பு சமாரியா மக்களிடம் அனுப்பப்பட்டு அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அதேவேளையில், சமாரியர்கள் அனைவரும் அமைந்த மனதுடன் அந்நற்செய்தியை ஏற்றுக்கொண்டு ஆண்டவராம் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்கின்றனர். அதன் விளைவாக அவர்கள்  துணையாளராம் தூய ஆவியாரைப் பெற்று மகிழ்கின்றனர். இதைத்தான், சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள். ஏனெனில், அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு, பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள் என்று இரண்டாம் வாசகம் கூறுகிறது. ஆக, வேறுபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட மக்களைத் தூய ஆவியார் ஒரே கடவுளின் பிள்ளைகளாக ஒன்றிணைகின்றார்.

ஓர் ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு நல்ல நீதிக் கதைகளைக் கூறி வளர்த்து வந்தார். அந்தத் தாய், சிரமப்பட்டாலும் தனது மகன் உண்மை உள்ளவனாக பிற்காலத்தில் வாழ்ந்து சிறப்புப் பெற வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அதனால் அவன் தீய பழக்கங்களால் ஆட்கொள்ளப்படாதவாறும் தீய நண்பர்களுடன் சேர்ந்துவிடாதவாறும் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார். அவன் வளர்ந்து வாலிபனான். வேலைக்குச் சென்றால்தான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், வேறு ஓர் ஊருக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. தாயைவிட்டுப் பிரிந்து செல்ல வேண்டுமே என்ற வருத்தம் அவனுக்கு இருந்தாலும், நன்கு வேலை பார்த்துத் தாயைக் கவனிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஊரை விட்டுக் கிளம்பினான். அவன் ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தாய் மிகுந்த அக்கறையுடன் செய்து முடித்தார். அவன் கிளம்பும் நாள் வந்த போது தாய் அவனிடம், “மகனே! உனக்கு என்ன நேர்ந்தாலும் உண்மை பேசுவதை மட்டும் விட்டுவிடாதே! எங்கும் எப்போதும் யாரிடத்திலும் உண்மையை மட்டுமே நீ பேச வேண்டும். இதை மட்டும் மறக்காதே!’ என்று கூறி அவனை அனுப்பி வைத்தார். அக்காலத்தில் எங்குச் சென்றாலும் நடைப் பயணம்தான். வாகன வசதிகள் கிடையாது. ஆகவே, அந்த வாலிபன் ஒரு கூட்டாத்தாருடன் சேர்ந்து தனது பயணத்தைத் தொடங்கினான்.

செல்லும் வழியில் சில கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தை வழிமறித்தனர். கூட்டத்தினரிடம் இருந்த பொருள்களையெல்லாம் அவர்கள் பறித்துக்கொண்டனர். அப்போது அந்த வாலிபனிடம் வந்த கொள்ளையன் ஒருவன், “உன்னிடம் என்ன உள்ளது? சொல்” என்று கேட்டான். அப்போது, அந்த வாலிபன் தனது தாய் சொன்னதை நினைவு கூர்ந்தான். உடனே அந்தக் கொள்ளையனிடம், “என்னிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே உள்ளன என்று மறைக்காமல் உண்மையைக் கூறினான், கொள்ளையர்கள் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு வியப்படைந்தனர். அவன் சொன்னது போலவே அவனிடம் நாற்பது ரூபாய்கள் மட்டுமே இருந்தன. கொள்ளையர்களின் தலைவன் அசந்து போனான். அந்தச் சிறிய வாலிபனிடம் இருந்த உண்மை பேசும் குணம் கொள்ளையனின் மனதைக் கரைத்தது. ஆபத்திலும் இவ்வளவு நேர்மையும் உண்மையும் ஒரு மனிதனிடம் காணப்பட்டதைக் கண்டு மனம் மாறினான். அன்றே தனது திருட்டுத் தொழிலை விட்டுவிட முடிவெடுத்தான். அவர்களிடமிருந்து திருடிய பொருள்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு நல்ல மனிதனாக மாறி உழைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றான்!

புதுப்பிக்கப்பட்ட மக்களாவோம்

உண்மையின் ஆவியானவர் நம் உள்ளங்களில் உறைந்திருக்கும்போது நம்மிடம் நம்பகத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் வெள்ளமெனப் பாய்ந்தோடும். ஆகவே, துணையாளராம் தூய ஆவியாரின் அருள்துணையோடு நமது வாழ்வை உண்மையின் பாதையில் வளமாக்கிக்கொள்வோம். தூய ஆவியாரின் ஆற்றலால் புதுப்பிக்கப்பட்ட மக்களாகப் புதுப்பொலிவுடன் வாழ்வோம். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2023, 12:35