ஆசிய கண்டத்திற்கான ஒருங்கிணைந்த பயணக் கூட்டம் ஆரம்பமானது
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஆயர் மாமன்றத்தை முன்னிட்டு உலகளாவிய வகையில் 7 கண்டங்களில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பயணக்கூட்டத்தின் ஐந்தாவது கூட்டமாக ஆசிய கண்டத்திற்கான ஒருங்கிணைந்த பயணக் கூட்டம் பாங்காங்கில் தொடங்கியது.
பிப்ரவரி 24 வெள்ளி முதல் 26 ஞாயிற்றுக் கிழமை வரை நடைபெறும் ஆசிய ஆயர் பேரவைக்கான ஒருங்கிணைந்த பயணக் கூட்டமானது தாய்லாந்தின் பாங்காங்கில் உள்ள Baan Phu Waan மேய்ப்புப்பணி பயிற்சி மையத்தில் FABC என்னும் ஆசிய ஆயர் பேரவையின் பொதுச்செயலாளரும் டோக்கியோவின் ஆயருமான பேராயர் Tarcisio Isao Kikuchi அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் தொடங்கியது.
அத்திருப்பலியில், தொற்றுநோய் மற்றும் ஆயுத மோதல்கள் நம்மை "ஒளியின்றி இருளில் நடக்கும் நிச்சயமற்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளதாகவும், "அலட்சியம் கொல்லக்கூடும், நம்பிக்கை மட்டுமே வாழும் என்பதே திருஅவை வலியுறுத்துவதாகும் என்று கூறியுள்ளார் பேராயர் Kikuchi.
மேலும், நம்பிக்கையை உருவாக்கும் மையத்தில் நாம் இருக்கவேண்டும் என்று வலியுறுத்திய பேராயர் Kikuchi, விரக்தி அல்லது சோகத்தின் ஆதாரமாக இருக்கக்கூடாது மாறாக, நம்பிக்கையின் ஆதாரமாக நாம் இருக்க வேண்டும், ஏனென்றால் வாழ்க்கையின் நற்செய்தி, நம்பிக்கையின் நற்செய்தி நம்மிடம் உள்ளது என்றும், ஒருங்கிணைந்த பயணப்பாதையில் ஒற்றுமையுடன் நடப்பவர்கள் நாம் என்றும் கூறியுள்ளார்.
29 ஆசிய நாடுகளைச் சார்ந்த 80 பங்கேற்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் தொடங்கப்பட்ட ஆசிய ஆயர் பேரவையானது, பிப்ரவரி 26ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை யாங்கூன் பேராயரும் FABCயின் தலைவருமான கர்தினால் சார்லஸ் போ அவர்களின் தலைமையில் திருப்பலியுடன் நிறைவடைய இருக்கின்றது.
இக்கூட்டத்தில் 6 கர்தினால்கள், 23 ஆயர்கள், 28 அருள்பணியாளர்கள், 4 அருள்சகோதரிகள், 7 பொது நிலையினர் ஆண்கள் மற்றும் 12 பொது நிலையினர் பெண்கள் பங்கேற்பாளர்களாக கலந்துகொள்கின்றனர். இவர்கள், கம்போடியா, லாவோஸ், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மங்கோலியா, பங்களாதேஷ், மலேசியா, புருனே, மியான்மர், ஜப்பான், ஹாங்காங், தைவான், இந்தியா, கிழக்கு திமோர், பாகிஸ்தான் கொரியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், நேபாளம், கஜகஸ்தான், மக்காவ், கிர்கிஸ்தான் ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருப்பவர்கள்.
இக்கூட்டத்தின் கருப்பொருள்களாக “மகிழ்ச்சியின் அனுபவம், ஒன்றிணைந்து நடத்தல், காயங்களின் அனுபவம், புதிய பாதைகளைத் தழுவுவதற்கான அழைப்பு, ஒருங்கிணைந்த பயண வாழ்க்கை, முடிவெடுத்தல், அருள்பணியாளர்கள் பணி, இளையோர், ஏழைகள், மத மோதல்கள் அருள்பணித்துவம் ஆகியவை இடம்பெற உள்ளன.
நேரடி ஒளிபரப்பு நிகழ்வுகள்
ஆசிய ஆயர் பேரவைக் கூட்டத்தின் மூன்று நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்பட உள்ளன.
திறப்பு விழா திருப்பலி பிப்ரவரி 24 வெள்ளிக்கிழமை இந்திய இலங்கை நேரம் (தாய்லாந்து நேரத்திற்கு 1.30 மணி நேரம் முன்னதாக ) காலை 6.00 – 7.00, நிறைவு அமர்வு பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை; பிற்பகல் 2.30 – 4.00, நிறைவு திருப்பலி பிப்ரவரி 26 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 - 4.00
இந்நிகழ்வுகள் பின்வரும் இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன.
www.youtube.com/catholicthailand
www.facebook.com/thaicatholicmedia
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்