லெபனோனில் முதலீடு செய்ய இங்கிலாந்து மக்களிடம் வேண்டுகோள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
லெபனோன் மீதான சிறப்புக் கவனம் செலுத்தும் விதத்தில் அனைத்துலக மாநாட்டிற்கு அழைப்பு விடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை தான் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார் அந்தியோக்கியவின் மாரோனிய முதுபெரும்தந்தை Bechara Boutros al-Rahi
ஜனவரி 10, இச்செவ்வாயன்று, பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட பயணத்தில் அதன் Westminster-இல் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இவ்வாறு கூறியுள்ள முதுபெரும்தந்தை al-Rahi அவர்கள், கடந்த காலத்தில் லெபனோன் பேராசைக்கு ஆளாகியிருந்தது மற்றும் "போர்கள், பகைமைகள், ஆக்கிரமிப்பு, படுகொலைகள் மற்றும் அநீதிகளுக்கான இடமாக இருந்தது என்ற தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
மேலும் லெபனோனைப் பாதுகாக்கவும் அதனை, நிலையானதாகவும், ஒன்றிணைந்ததாகவும் வைத்திருக்க வேண்டுமானால் அது உள்நாட்டு மற்றும் அனைத்துலக மோதல்களில் இருந்து காப்பாற்றப்படவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வலியுறுத்திக் கூறியுள்ள்ளார் முதுபெரும்தந்தை al-Rahi
2012-ஆம் ஆண்டு லெபனோன் நாட்டிற்குத் திருத்துப்பயணம் மேற்கொண்ட மறைந்த முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களைக் குறித்த சில சிந்தனைகளையும் பகிர்ந்துகொண்ட முதுபெரும்தந்தை al-Rahi அவர்கள், லெபனோன் நாட்டின்மீது அவர் கொண்டிருந்த அன்பையும் அக்கறையையும் நினைவுகூர்ந்துளார்.
இங்கிலாந்தில் உள்ள மக்களை லெபனோனில் முதலீடு செய்யவும், அந்நாட்டிற்கு ஆதரவாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், பாலஸ்தீனத்தில் இரு நாட்டு தீர்வை ஆதரிக்கவும் கேட்டுக் கொண்ட முதுபெரும்தந்தை al-Rahi அவர்கள், உலகம் முழுவதும் இருக்கும் மாரோனியர்கள் லெபனோனின் பிரச்சனைக்கான காரணத்தை அவர்களுடன் சுமந்து செல்கிறார்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகக் கூறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். (ICN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்