தேடுதல்

சக்ர நாற்காலியில் மாற்றுத்திறனாளி சக்ர நாற்காலியில் மாற்றுத்திறனாளி   (©saelim - stock.adobe.com)

மாற்றுத்திறனாளிகளுக்கு பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு உதவி

தங்கள் வாழ்வை தாங்களே நிர்வகிக்க உதவும் நோக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கியுள்ளது பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பாகிஸ்தானின் கராச்சி உயர் மறைமாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள், சுயமாக இயங்க உதவும் வகையில் தேவையான உபகரணங்களை வழங்கி உதவி வருகிறது அந்நாட்டின் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.

வாழ்வை மீட்டளிக்கும் நலவாழ்வு நிறுவனம் என்ற அமைப்புடன் இணைந்து இப்பணிகளை ஆற்றிவரும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, அண்மையில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ளது.

பிறரை அதிகம் சார்ந்திராமல், தங்கள் வாழ்வை தாங்களே நிர்வகிக்க உதவும் நோக்கத்தில் இவ்வுதவிகளை வழங்கி வருவதாக உரைத்த பாகிஸ்தான் காரித்தாசின் உயர் அதிகாரி Mansha Noor அவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் எவ்வித பாகுபாடும் காட்டப்படாமல் அவர்களுக்கே உரிய மாண்புடன் நடத்தப்படவேண்டும் என விண்ணப்பித்தார்.

பாகிஸ்தானில் போதிய உதவிகளின்றி வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, மதம், இனம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி போதிய உதவிகள் வழங்கி அவர்கள் வெளியில் நடமாட உதவி வருகிறது பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு.

ஐநா நிறுவனத்தின் அறிக்கையின்படி, இன்றைய உலகில் 65 கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். போர்கள், பயங்கரவாதத் தாக்குதல்கள், மற்றும் இயற்கைப் பேரிடர்களால் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2022, 16:09