ஹெயிட்டி அரசுத்தலைவர் கொலை – ஆயர் பேரவை கண்டனம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஜூலை 6ம் தேதி நள்ளிரவு அல்லது, 7ம் தேதி விடியற் காலையில் ஹெயிட்டி நாட்டு அரசுத்தலைவர் Jovenel Moise அவர்கள் கொலையுண்டது, எவ்வகையிலும் அனுமதிக்கப்படமுடியாத, அருவருப்பான நிகழ்வு என்று, ஹெயிட்டி ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வன்முறை மேலும் வன்முறையைத் தூண்டுமேயொழிய வேறு எதையும் சாதிக்கப்போவதில்லை, எனவே, நாம் தற்போது இருக்கும் அரசியல் நிலையற்ற சூழலில், உரையாடல் மட்டுமே நம்மை வழிநடத்தவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மோதல்களில் ஈடுபட்டுள்ள குழுக்கள் தங்கள் ஆயுதங்களை களைந்து, நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வாழ்வை ஆதரிக்கும் வழிகளைப் பின்பற்றுமாறு ஆயர்கள், போரிடும் குழுக்களுக்கு சிறப்பாக அழைப்பு விடுத்துள்ளனர்.
அரசுத்தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள Claude Joseph அவர்கள், நாட்டை தற்போது, காவல்துறையும், இராணுவமும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதென கூறியுள்ளார்.
2017ம் ஆண்டு அரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற Jovenel Moise அவர்கள், 2020ம் ஆண்டு சனவரி மாதம் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, தனியொருவராக நாட்டை ஆட்சி செய்துவந்தார். இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலும், அரசுத்தலைவர் தேர்தலும் நடைபெறும் என்று, அறிவித்திருந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்