தேடுதல்

தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார் - யோவான் 20:28 தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார் - யோவான் 20:28 

இறை இரக்கத்தின் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

இயேசுவிடம் கேட்கமுடியாமல், மற்ற சீடர்கள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான், தோமா, வாய்விட்டுச் சொன்னார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

இறை இரக்கத்தின் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

"கவிதை பயம் எனக்கு, காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு... எல்லாமே பயமயம்" என்று, தமிழ் திரைப்படம் ஒன்றில், மனநல மருத்துவர் ஒருவரிடம், தன் பயங்களைப் பட்டியலிடுவார், அந்தக் கதையின் நாயகன். வாழ்க்கையில் பார்க்குமிடத்திலெல்லாம் பயங்களைச் சந்திப்பதாக அவர் பேசும் அந்தக் காட்சி, இன்று நினைவுக்கு வருவதற்குக் காரணம், நாம் வாழ்ந்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று சூழல். அவர் பட்டியலிடும் பயங்களில், "காசு பயம், மாசு பயம், தூசு பயம்... அழுக்கு பயம், குளிக்க பயம், அண்டை மனிதரை அணுக பயம், அணுகிய மனிதரை இழக்க பயம்..." என்று அவர் வெளிப்படுத்தும் பய உணர்வுகளை, கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக, நாமும், பல்வேறு வகையில் உணர்ந்து வருகிறோம்.

2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றியதாகச் சொல்லப்படும் ஒரு தொற்றுக்கிருமியைக் குறித்து, இன்றளவும், மருத்துவ மேதைகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் சரியான, தெளிவான புரிதல் இல்லை என்பது, நாளுக்கு நாள், தெளிவாகப் புரிகிறது. தங்கள் அறியாமையை மறைக்க, அவர்கள் பயன்படுத்திவரும் ஒரு முக்கிய ஆயுதம், சந்தேகம். இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ, இப்படியும் இருக்குமோ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பும் சந்தேகங்களையும், பயத்தையும் உருவாக்கி, நம்மை அடைபட்ட வீடுகளில், அடைபட்ட உள்ளங்களுடன் வாழ வைத்துவிட்டனர்.

பயமும், சந்தேகமும், தங்கள் உள்ளங்களை ஆக்ரமித்ததால், அடைபட்ட கதவுகளுக்குப்பின் வாழ்ந்துவந்த சீடர்களை, அவர்களில் குறிப்பாக, தோமாவை சந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு வாய்ப்பளித்துள்ளது.

சந்தேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக, சுட்டிக்காட்டப்படும் ஒரு மனிதர், தோமையார் என்றழைக்கப்படும் தோமா. உண்மை பேசுபவரை "அரிச்சந்திரன்" என்றும், தாராள மனதுடையவரை "பாரி வள்ளல்" என்றும் அழைக்கிறோமே, அதேவண்ணம், சந்தேகப்படும் யாரையும், “சந்தேகத் தோமையார்” என்றழைக்கிறோம். அவ்வளவு தூரம், தோமா, சந்தேகத்தின் எடுத்துக்காட்டாக மாறிவிட்டார்.

தோமா, இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும், நம்மில் பலர், உடனே, ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்துகொள்கிறோம். "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியைக் கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு" என்ற தீர்ப்பையும் எழுதிவிடுகிறோம். நீதியிருக்கைகளில் ஏறி அமர்வதும், அடுத்தவர் மீது தீர்ப்பை எழுதுவதும் எளிது. ஒரு விரலை நீட்டி, தோமாவை, குற்றவாளி என்று சுட்டிக்காட்டும்போது, மற்ற மூன்று விரல்கள் நம் பக்கம் திரும்பியுள்ளதை கருத்தில கொண்டு, கொஞ்சம் நிதானிப்போம்.

இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய், ஆயிரமாயிரம் விளக்கங்களை வழங்கிவரும் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்துள்ள நமக்கே, அந்த உயிர்ப்பு குறித்த நம்பிக்கையில், அவ்வப்போது, தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியிருக்க, உயிர்ப்பைப்பற்றி தெளிவற்ற எண்ணங்கள் கொண்டிருந்த யூத சமுதாயத்தில், 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர், இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக, அவருக்கு, கண்டனத் தீர்ப்பை வழங்குவது தவறு.

கல்வாரியில், இயேசு இறந்ததை, நீங்களோ, நானோ, நேரடியாகப் பார்த்திருந்தால், ஒருவேளை, தோமாவைவிட இன்னும் அதிகமாய் மனமுடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை, என்ற முடிவுக்கும் வந்திருப்போம். எனவே, தீர்ப்பு வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து முதலில் எழுவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச் சிந்திப்போம்.

உயிர்த்த இயேசுவைக் கண்டதும், ஏனையச் சீடர்களுக்கும், கலக்கம், குழப்பம், சந்தேகம் எழுந்தன என்பதை நற்செய்திகள் கூறுகின்றன (மத்தேயு 28:17; மாற்கு 16:13-14; லூக்கா 24:37-39). இயேசுவிடம் கேட்கமுடியாமல், மற்ற சீடர்கள் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த சந்தேகத்தைத்தான், தோமா, வாய்விட்டுச் சொன்னார். எனவே, தோமாவை மட்டும், சந்தேகப் பேர்வழி என்று கண்டனம் செய்யாமல், எல்லாச் சீடர்களுமே, சந்தேகத்தில், பயத்தில் வாழ்ந்துவந்தனர் என்பதை, முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும், காரணம் இருந்தது. அதையும் புரிந்துகொள்ள முயல்வோம்.

தங்கள் குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள், இச்சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில், இயேசுதான் தங்களது உலகம் என்று, அவர்கள், கண்ணும், கருத்துமாய் வளர்த்துவந்த நம்பிக்கை மரம், ஆணிவேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. இயேசுவை அடித்தளமாய் வைத்து, அவர்கள் கட்டியிருந்த கனவுக் கோட்டைகளெல்லாம், தரை மட்டமாக்கப்பட்டன.

எருசலேமில், கல்வாரியில், அவர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலை குலையச் செய்துவிட்டன. இயேசுவின் கொடுமையான மரணம், அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்களில் ஒருவர், இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால், தங்களில் ஒருவர், இயேசுவை மறுதலித்ததால், இதுவரை, அவர்கள், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்துபோனது. சிலுவையில், கந்தல் துணிபோல் தொங்கிக்கொண்டிருந்த இயேசுவை, உடலோடு புதைப்பதற்கு முன்பே, இனி அவரை நம்பி வாழ்வதில் பயனில்லை என்று, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர், சீடர்கள்.

பயத்தில், சந்தேகத்தில், பூட்டப்பட்ட அந்த அறையின் இருளில் இனி வாழ்ந்தால் போதும் என்று தீர்மானித்த சீடர்களை, இயேசு, அப்படியே விடுவதாய் இல்லை. அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைந்தார். அவர்கள் வாழ்வில் மீண்டும் நுழைய, சாத்தப்பட்ட கதவுகள் இயேசுவுக்கு ஒரு தடையாய் இல்லை. தன் கல்லறையை மூடியிருந்த அந்தப் பெரும் பாறையே அவரைத் தடுக்க முடியவில்லை.  இந்தக் கதவுகள் எம்மாத்திரம்!

சாத்தப்பட்ட அந்த அறைக்குள் இயேசு வந்து நின்றதை, சீடர்களால் நம்பமுடியவில்லை. கதவு, சன்னல்கள் எல்லாம் சாத்தப்பட்ட ஓர் அறைக்குள் உடலோடு ஒருவரால் வர முடியுமா? முடியாது. இயற்கை நியதிகளுக்கு, அறிவியல் கூற்றுகளுக்கு முரணான ஒரு செயல் அது. இயற்கை நியதிகள், அறிவியல் வரைமுறைகள் ஆகியவை மீறப்படும்போது, சந்தேகம் எழும். அறிவு, அந்த நிகழ்வை ஏற்க மறுக்கும்.

ஆனால், அறிவும், அறிவியலும் சொல்வதை மட்டும் வைத்து, வாழ்க்கையை நடத்திவிட முடியாதே. இரண்டும், இரண்டும், நான்கு தான். ஆனால், சில வேளைகளில், இரண்டும், இரண்டும், ஐந்தாகலாம் அல்லது, மூன்றாகலாம். இதைக்காண மனம் வேண்டும், ஆன்மா வேண்டும், வெறும் அறிவுத்திறன் மட்டும் போதாது. எத்தனை முறை இது போன்ற அனுபவங்களை நாம் பெற்றிருக்கிறோம்! நமது அறிவு ஒரு வழியில் சிந்திக்கும்போது, நமது ஆழ்மனம், வேறு வழியில், அறிவுக்கு முற்றிலும் மாறுபட்ட வழியில் சிந்தித்திருக்கிறதல்லவா? பல வேளைகளில் அறிவைவிட ஆழ்மனம் சொல்வது, மிக அழகானதாய், அற்புதமானதாய், இருந்திருக்கிறது. உண்மைதானே?

இதோ ஓர் எடுத்துக்காட்டு... பத்தாண்டுகளுக்கு முன், 2011ம் ஆண்டு, சனவரி 30ம் தேதி ஞாயிறன்று, இங்கிலாந்தில் Woodford Wells என்ற இடத்தில் இருந்த அனைத்துப் புனிதர்கள் ஆலயம் (All Saints Church) நிரம்பி வழிந்தது. மாலை நேரத் திருவழிபாட்டில் Jose Henriquez என்பவர் உரையாற்ற எழுந்தார். அவர் பேசுவதைக் கேட்க அனைவரும் ஆவலாய் இருந்தனர். அவர் பேச ஆரம்பித்தார்: "பூமிக்கடியில் சிக்குண்டிருந்த எங்களை 69 நாட்கள் சென்று மீண்டும் உயிரோடு பூமிக்கு மேல் கொண்டு வந்தது, இறைவன் ஆற்றிய ஒரு புதுமையே. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், இதை, ஒரு புதுமையாக எண்ணுகின்றனர்" என்று அவர் தன் உரையைத் துவக்கினார்.

2010ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 5ம் தேதி முதல், அக்டோபர் மாதம், 13ம் தேதி வரை, சிலே நாட்டின் San Jose சுரங்கத்தில் புதையுண்டு போன 33 தொழிலாளர்களில் ஒருவர், Jose Henriquez. அவர் தொடர்ந்து பேசியபோது, சுரங்கத்தில் புதையுண்ட 33 பேரும் அந்த 69 நாட்களில் அடைந்த அழகான, அற்புதமான மாற்றங்களைப்பற்றி எடுத்துக் கூறினார். கடவுள் மேல், தங்கள் மேல், தங்கள் மனைவியர் மேல் நம்பிக்கையின்றி, சந்தேகக் கண்களுடன், சந்தேக மனதுடன் வாழ்ந்த பலர், இந்த அனுபவத்திற்குப் பின், பெரும் மாற்றங்கள் அடைந்ததைக் கூறினார்.

புதையுண்ட 33 தொழிலாளர்களை வெளிக்கொணர, சிலே அரசு, அறிவியல் உதவியுடன் பல முயற்சிகளை மேற்கொண்டது. ஒவ்வொரு முறையும் அறிவியல் முயற்சிகள் தோற்றபோது, சுரங்கத்தில் சிக்குண்டிருந்த தொழிலாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் செபித்தனர். அதிலும், முதல் 17 நாட்கள், வெளி உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல், அவர்கள் ஆரம்பித்த அந்த நம்பிக்கைப் பயணத்தைப்பற்றி Jose Henriquez  அவர்கள், அற்புதமாக விவரித்தார். தன் உரையின் இறுதியில் Jose Henriquez  சொன்ன வார்த்தைகள் இவை: "நான் உங்கள் முன் இப்போது உயிரோடு நிற்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே உண்டு. என்னுடைய கடவுள், வாழும் கடவுள்; என்னை வாழ்விக்கும் கடவுள். இந்தக் கடவுளைக் கண்டுபிடிக்க, இந்தக் கடவுள் மேல் நம்பிக்கை கொள்ள, உங்கள் வாழ்வில், விபத்துக்கள் நிகழும் வரை காத்திருக்காதீர்கள்" என்று, அவர் தன் உரையை நிறைவு செய்தார்.

முற்றிலும் மூடப்பட்டு, இனி, வெளி உலகுடன் எந்தத் தொடர்பும் கிடைக்காது, இனி உயிரோடு மீளமாட்டோம், என்ற அச்சத்தில், சந்தேகத்தில் புதையுண்டிருந்தனர், சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகள். இயேசுவின் பாடுகளுக்குப்பின், அந்தக் கல்வாரிக் கொடுமைகளுக்குப்பின், இயேசுவின் சீடர்களும், இதே நிலையில், தங்களை, மூடிய கதவுகளுக்குப்பின் பூட்டி வைத்திருந்தனர். இயேசுவின் உயிர்ப்பிற்குப்பின், தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட சீடர்கள், அச்சமின்றி, சந்தேகம் ஏதுமின்றி, இயேசுவை உலகறியச் செய்ததுபோல், இந்த சிலே நாட்டு சுரங்கத் தொழிலாளிகளும் வெளியே வந்தபின், பல ஊர்களுக்கு, பல நாடுகளுக்குச் சென்று, இயேசுவை, உலகறியச் செய்து வருகின்றனர். "அந்தச் சுரங்கத்தில் 33 பேர் புதைந்து போனோம். ஆனால் எங்களுடன் 34வது பேராக, இறைவன் எப்போதும் உடன் இருந்தார்." என்று இவர்கள் பறைசாற்றி வருகின்றனர்.

2010ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி இரவு 10 மணியளவில், சுரங்கத்திலிருந்து, 33வது தொழிலாளர் வெளியேறிய வேளையில், சிலே நாட்டின் அனைத்து ஆலயங்களிலும், மணிகள் ஒலித்தன. சிலே ஆயர் பேரவையின் தலைவரான, ஆயர் Alejandro Goic Karmelic அவர்கள், "இன்று நாம் ஆண்டவரின் உயிர்ப்பை இந்நாட்டில் கொண்டாடுகிறோம்" என்று கூறினார்.

இந்நிகழ்வின் 10ம் ஆண்டு நினைவு, 2020ம் ஆண்டு, அக்டோபர் 13ம் தேதி சிலே நாட்டில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவில், சிலே நாட்டு அரசுத்தலைவர், Sebastián Piñera அவர்கள், "San Jose சுரங்கத் தொழிலாளர்களுக்கு நிகழ்ந்த புதுமையை நினைவுகூர்ந்து பாடங்களைப் பயில்வோம். அன்று நாம் காட்டிய நம்பிக்கை, ஒற்றுமை, மனவலிமை ஆகியவற்றுடன், இன்று நாம் சந்தித்துவரும் கொரோனா தொற்றுக்கிருமியை வெல்வோம்" என்று கூறினார்.

சந்தேகமும், இரக்கமும் சந்திக்கும் ஞாயிறு இது. உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறை 'இறை இரக்கத்தின் ஞாயிறு' என்று கொண்டாடுகிறோம். இறை இரக்கம், அல்லது, இறைவனின் பேரன்பு என்ற கதிரவன் எழும்போது, சந்தேகப் பனிமூட்டம் கலைந்துவிடும் என்பதை, இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.

இறைவனின் பேரன்பும், இரக்கமும் எத்தனையோ அற்புதங்களை ஆற்றவல்லது. அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை, குறிப்பாக, அவரது இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேக சுவர்களால் நாம் உருவாக்கிக்கொள்ளும் கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள இருளை வெல்வதற்கு உயிர்த்த கிறிஸ்து நம் அனைவருக்கும் வலிமை தருவார் என நம்புவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்விலும் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 April 2021, 14:59