மகிழ்வின் மந்திரம் : இரக்கத்தின் அடையாளமாக, குடும்பம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
2016ம் ஆண்டு, திருஅவையில், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்பட்டது. அந்த சிறப்பான ஆண்டில், மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு திரநாளன்று, ‘அன்பின் மகிழ்வு’ என்ற திருத்தூது அறிவுரை மடலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையொப்பமிட்டு, அம்மடல், ஏப்ரல் 8ம் தேதி, வெளியிடப்பட்டது. குடும்பத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட ஒரு மடல், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில் வெளியாவது மிகவும் பொருத்தமானது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மடலின் அறிமுகப் பகுதியில் இவ்வாறு கூறியுள்ளார்:
"இந்த திருத்தூது அறிவுரை மடல் வெளியாவதற்கு, இரக்கத்தின் யூபிலி ஆண்டு சரியான காலமாகத் தெரிகிறது. ஏனெனில், இரக்கத்தின் யூபிலி ஆண்டு, அனைத்திற்கும் மேலாக, கிறிஸ்தவ குடும்பங்களுக்கு ஓர் அழைப்பாக அமைந்துள்ளது. தாராளமனம், அர்ப்பணிப்பு, பிரமாணிக்கம், பொறுமை என்ற புண்ணியங்களால், திருமண உறவும், குடும்பமும் அன்பில் நிலைத்திருப்பதற்கு இவ்வாண்டு அழைப்பு விடுக்கிறது. இரண்டாவதாக, எங்கெங்கு குடும்பவாழ்வு, சிறு குறைகளுடன், அமைதியையும், மகிழ்வையும் இழந்துள்ளதோ, அங்கு, ஒவ்வொருவரும், இரக்கத்தின் அடையாளமாக விளங்க, இவ்வாண்டு நம்மை ஊக்கப்படுத்துகிறது" (அன்பின் மகிழ்வு - 5)