கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
பிலிப்பீன்ஸ் நாட்டின் 70க்கும் மேற்பட்ட கத்தோலிக்க மற்றும் சமூக குழுக்கள் ஒன்றிணைந்து பல்வேறு இயற்கை பாதுகாப்புத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன.
படைப்பைப் பாதுகாப்பதில் அனைவரின் கடமையை தொடர்ந்து வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பினை ஏற்று உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டங்கள் சிலவற்றை நிறைவேற்றுவதில், பிலிப்பீன்ஸ் இஸ்லாமிய சமுதாயமும் ஆர்வமுடன் இணைந்து பணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்பின் கொண்டாட்டங்கள், இம்மாதம் முதல் தேதி துவங்கி, பழங்குடியினரின் உலக நாளான, அக்டோபர் 11ம் தேதி வரை தொடரும் நிலையில், முதல்கட்ட முயற்சியாக, பிலிப்பின்ஸின் Puerto Princesa கடற்கரையை சுத்தம் செய்ய துவங்கியுள்ளன, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியக் குழுக்கள்.
கத்தோலிக்கர்களும் இஸ்லாமியர்களும் இணைந்து இயற்கை பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட Puerto Princesa ஆயர், Socrates Mesiona அவர்கள், வேறு வேறு மதங்களை சார்ந்திருந்தாலும், நம் பொதுவான இல்லமாகிய ஒரே உலகில் வாழ்கிறோம் என்பதை மனதில் கொண்டதாக நம் நடவடிக்கைகள் உள்ளன என்று கூறினார். (AsiaNews)