கேரள ஆயர்கள் : பயங்கரவாத வலைஅமைப்புக்கு எதிராக நடவடிக்கை
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இந்தியாவின் கேரள மாநிலத்தில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசு போன்ற பன்னாட்டு பயங்கரவாதிகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது என்று, அம்மாநில கத்தோலிக்க ஆயர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், அல்-கெய்தா போன்ற குழுக்கள், மற்றும், இஸ்லாமிய அரசோடு தொடர்புடைய பயங்கரவாதிகள் உள்ளனர் என்று, கடந்த ஜூலை 25ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டதையடுத்து, இத்தகைய பயங்கரவாதிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வை அதிகம் உருவாக்குவதற்கு, கேரள ஆயர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 08, கடந்த வெள்ளியன்று கேரள ஆயர்கள், நிறைவுசெய்த 5 நாள் மெய்நிகர் கூட்டத்தின் இறுதியில், பயங்கரவாதிகள் குறித்து எச்சரித்துள்ளனர். இக்கூட்டத்தில், அம்மாநிலத்தின் 29 மறைமாவட்டங்களிலிருந்து 47 ஆயர்கள் பங்குபெற்றனர்.
பயங்கரவாதிகள் குறித்த ஐ.நா.வின் அறிக்கை, கேரள மாநில அதிகாரிகளுக்கு விழிப்புணர்வைத் தூண்டுவதாகவும், அம்மாநிலத்திலிருந்து இத்தகைய செயல்பாடுகளை வேரோடு களைவதற்கு அழைப்பு விடுப்பதாகவும் உள்ளது என்று ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கண்ணூர் ஆயர் Alex Vadakumthala அவர்கள், இந்த ஐ.நா. அறிக்கை குறித்து யூக்கா செய்தியிடம் கருத்து தெரிவிக்கையில், இது, நம் நாட்டையும், நம் பிள்ளைகளையும் பாதுகாப்பதற்கு, நம் அனைவருக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்று கூறினார்.
மேலும், கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், ஏறத்தாழ 80 பேர் சகதியில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்