அசாமில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவதில்...
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 ஊரடங்கு மற்றும், நிதிப் பற்றாக்குறை காரணமாக, அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்கு தலத்திருஅவை மிகவும் சிரமப்படுகின்றது என்று, அம்மாநில ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
வட இந்திய மாநிலமான அசாமில் இடம்பெற்றுவரும் வெள்ளத்தால் 36 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும், 66 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, யூக்கா செய்தியிடம் கூறியுள்ள, அம்மாநிலத்தின் Bongaigaon மறைமாவட்ட ஆயர் Thomas Pullopillil அவர்கள், கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளால், நிவாரண நிதி திரட்ட இயலாமல் உள்ளது என்று கூறினார்.
அசாம் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், செய்வதறியாது திகைத்து நிற்கிறோம் எனவும், உணவும், தங்கும் இடமும் கிடைக்காமல் மக்கள் மிகவும் துன்புறுகின்றனர் எனவும், ஜூலை 16, இவ்வியாழனன்று கூறினார், ஆயர் Pullopillil
அடுத்த 72 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று, உள்ளூர் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளவேளை, இது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது என்றும், கோவிட்-19 ஊரடங்கு, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும், ஆயர் Thomas Pullopillil அவர்கள் கூறினார். (REI/UCAN)
இந்தியாவில், பத்து இலட்சத்திற்கு அதிகமானோர் கொரோனா கொள்ளைநோயால் தாக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்