தேடுதல்

திருப்பலி வழியே, தன் உடலையும், இரத்தத்தையும் பகிர்ந்தளிக்கும் இயேசு திருப்பலி வழியே, தன் உடலையும், இரத்தத்தையும் பகிர்ந்தளிக்கும் இயேசு 

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

தன்னையே வழங்கிய இயேசுவைப்போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, நம்மையே வழங்கும் வழிகளை கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா நமக்கு உதவுவதாக.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா : ஞாயிறு சிந்தனை

வழிபாட்டு ஆண்டு முழுவதும் நாம் கொண்டாடும் விழாக்களில் பெரும்பாலானவை, இயேசுவின் வாழ்விலோ, புனிதர்களின் வாழ்விலோ நிகழ்ந்தவற்றின் நினைவுகளாக அமைந்துள்ளன. இயேசுவின் பிறப்பு, திருமுழுக்கு, தோற்றமாற்றம், உயிர்ப்பு, விண்ணேற்றம் என்று, அவரது வாழ்வின் பல நிகழ்வுகளை நாம் விழாக்களாக கொண்டாடுகிறோம். ஒரு சில விழாக்கள்மட்டுமே, ஒரு கருத்தை, ஒரு மறையுண்மையை மையப்படுத்தி அமைந்துள்ளன. அவற்றில், சென்ற ஞாயிறு, நாம் தூய்மைமிகு மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடினோம். இந்த ஞாயிறு, கிறிஸ்துவின் தூய்மைமிகு உடல் மற்றும் இரத்தம் என்ற மறையுண்மையை, விழாவாகக் கொண்டாடுகிறோம்.

இவ்விரு விழாக்களும், கத்தோலிக்கத் திருமறையின் மிக முக்கியமான மறையுண்மைகள். இவ்விரு மறையுண்மைகளுக்கும், 'தூய்மைமிகு' என்ற அடைமொழியை வழங்கியுள்ளோம். திருஅவை வரலாற்றை திருப்பிப்பார்த்தால், இவ்விரு 'தூய்மைமிகு' மறையுண்மைகளும், 'விவாதங்கள் மிகுந்த' மறையுண்மைகளாகவும் விளங்கின என்பதை உணரலாம். பல நூற்றாண்டுகளாக, இவ்விரு மறையுண்மைகளையொட்டி, கேள்விகளும், விவாதங்களும் வலம்வந்துள்ளன.

கேள்விகள் கேட்பதும், விவாதங்கள் புரிவதும், அறிவை வளர்க்க மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிய கொடைகள். இக்கொடைகள், அறிவியல் வளர்ச்சிக்குப் பெருமளவு பயன்படுகின்றன. அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க கேள்விகளை, விவாதங்களைப் பயன்படுத்துவதுபோல், அறிவுக்கு எட்டாத மறையுண்மைகளைக் கண்டுபிடிக்கவும் அதே முறைகளை நாம் பயன்படுத்தியுள்ளோம்.

மூவொரு கடவுள் என்ற மறையுண்மையை தன் அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த புனித அகுஸ்தினை கடந்த ஞாயிறு, சந்தித்தோம். நம் கடவுள் 'எப்படி' மூன்று ஆள்களாய், அதே நேரம், ஒரே கடவுளாய் இருக்கமுடியும் என்ற கேள்வி, புனித அகுஸ்தினையும், இன்னும் பல இறையியல் மேதைகளையும் ஆட்கொண்டது. இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதில், கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் எழுந்தன.

கடற்கரையில் குழந்தை வடிவில், வானதூதரைச் சந்தித்த அனுபவம், புனித அகுஸ்தினை, அறிவிலும், பணிவிலும் வளர்த்தது. எனவே, அவர், "அன்பைக் காணமுடிந்தால், மூவொரு கடவுளையும் காணமுடியும்" என்ற அற்புதக் கூற்றை, பல தலைமுறைகளுக்கு, பாடமாக விட்டுச்சென்றார்.

இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தம் என்ற மறையுண்மையில், அப்ப இரச வடிவில் கிறிஸ்து எப்படி பிரசன்னமாகியிருக்க முடியும் என்ற கேள்வி, பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. 'எப்படி' என்ற கேள்வி, இன்றைய நற்செய்தியிலும் ஒலிக்கிறது.

யோவான் 6:51-52

இயேசு, யூதர்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”

“நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.

இவ்வுலகம் வாழும்பொருட்டு, தன்னையே ஒரு கொடையாக வழங்கப்போவதாக இயேசு கூறியதை, சரியாகப் புரிந்துகொள்ளாமல், இது எப்படி இயலும் என்ற வாக்குவாதத்தை யூதர்கள் துவக்கினர். அன்று எழுந்த 'எப்படி' என்ற வாக்குவாதம், பல நூற்றாண்டுகளாக, திருஅவை வரலாற்றில், பல்வேறு வடிவங்களில், 'எப்படி' என்ற கேள்வியாக, விவாதமாக, வலம்வந்துள்ளது.

கேள்விகளால், மறையுண்மைகளை கூறுபோடும் முயற்சிகளைக் கைவிட்டு, அந்த உண்மைக்குமுன், பணிவுடன் மண்டியிட்டு வணங்குவதே, மனிதர்களுக்கு நலம் என்பதை புனிதர்கள் நமக்கு உணர்த்திச் சென்றுள்ளனர். மறையுண்மைகளை அறிவுக்குள் அடக்கிவிடும் முயற்சியில் எழுப்ப்படும் 'எப்படி' என்ற கேள்விக்குப் பதில், இந்த மறையுண்மைகள் 'ஏன்' நமக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வது மேல் என்பதை, புனித அகுஸ்தின் போன்ற புனிதர்கள் புரிந்துகொண்டனர்.

இயேசுவின் பிரசன்னம் எப்படி அந்த அப்ப இரச வடிவில் உள்ளதென்பதைக் கூறும் இறையியல் விளக்கங்கள் பல நூல்களாக வெளிவந்துள்ளன. எப்படி என்ற கேள்விக்குப் பதிலாக, ஏன் நம் இறைமகன் இயேசு அப்ப இரச வடிவில் நம்முடன் தங்கியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்வது நமக்குப் பயனளிக்கும்.

இறைமகன், ஏன் அப்ப இரச வடிவில் தன் பிரசன்னத்தை இந்த உலகில் விட்டுச்சென்றார்? அப்பமும், இரசமும் இஸ்ரயேல் மக்கள் தினமும் உண்ட எளிய உணவாக இருந்ததால், அவற்றின் வழியே தன் பிரசன்னத்தை விட்டுச் செல்ல இயேசு விழைந்தார். அடுத்து, எந்த ஓர் உணவையும் நாம் உண்டபின், அது நம் உடலின் இரத்தமாக, தசையாக, எலும்பாக, நரம்பாக மாறிவிடுகிறது என்பது அடுத்த காரணமாக அமைந்திருக்க வேண்டும்.. அப்பத்திற்கும், இரசத்திற்கும் உள்ள இந்த அடிப்படை குணங்கள், தனக்கும் உண்டு என்பதை நிலைநாட்ட, இயேசு, இந்த வடிவைத் தேர்ந்தெடுத்தார். எளிய உணவாக, நாம் தினமும் உண்ணும் உணவாக, நம் உடலாகவே மாறி நம்மை வாழவைக்கும் உணவாக, இறைவன் நம்முடன் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் தரப்பட்டுள்ள அற்புதமான கொடை. இந்தக் கொடையை, இந்த அன்புப் பரிசைக் கொண்டாடும் திருநாளே, இயேசுவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா.

'இம்மானுவேல்' அதாவது, 'கடவுள் நம்மோடு' என்ற பெயருடன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இயேசு, தன் உலக வாழ்வுக்குப் பின்னும் நம்மோடு தங்கியிருக்கிறார் என்பதை, தன் திரு உடல் திரு இரத்தம் என்ற மறையுண்மையின் வழியாக நிலைநாட்டினார். அவர் இந்த திருவருள் அடையாளத்தை உருவாக்கிய நேரமும், இவ்விழாவின் மற்றொரு முக்கிய பரிமாணத்தை உணர்த்துகிறது. இறுதி இரவுணவின்போது, தன் நெருங்கிய நண்பன் தன்னைக் காட்டிக்கொடுக்கப்போவதை அறிந்த வேளையில், இயேசு, அப்பத்தையும், இரசத்தையும் சீடர்களுக்கு வழங்கி, தான் அவர்களோடு என்றும் வாழப்போவதை உறுதி செய்தார். தன் திருஉடல், திருஇரத்தத்தின் வழியாக, நம்முடன் எப்போதும் வாழும் இயேசுவின் பிரசன்னத்தை மையப்படுத்தி பல புதுமைகள், வரலாற்றில் நடந்துள்ளன; இன்றும் தொடர்கின்றன.

இயேசுவின் பிரசன்னத்தை ஒவ்வொரு நாளும் உணர்த்தும் திருப்பலி, திருநற்கருணை ஆகிய அற்புத மறையுண்மைகளை மையப்படுத்திய உன்னத நிகழ்வுகள் சிலவற்றை இன்று அசைபோடுவது பயனளிக்கும்.

இயேசு சபையின் முன்னாள் உலகத் தலைவர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், சபையின் தலைவராவதற்கு முன், ஜப்பானில் பணி புரிந்தவர். ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்த நேரத்தில் அங்கு அவர் நவதுறவிகளின் பயிற்சியாளராக இருந்தார். 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வீசப்பட்ட அணுகுண்டு, ஹிரோஷிமாவை அழித்தது. 80,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட அந்த கொடுமையின்போது, அந்நகரின் புறநகர் பகுதியில் இருந்த இயேசு சபை நவதுறவியர் இல்லம், பெரும் சேதமின்றி தப்பித்தது. அந்த இல்லம், ஒரு மருத்துவ மனையாக மாறியது. அங்கிருந்த சிறு கோவிலும், காயப்பட்டவர்களால் நிரம்பி வழிந்தது. அணுகுண்டு வீசப்பட்டதற்கு அடுத்த நாள், அக்கோவிலில், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார். அந்தத் திருப்பலி நேரத்தில், அவர் அடைந்த வேதனை அனுபவத்தை இவ்விதம் கூறியுள்ளார்:

"நான் திருப்பலி நிகழ்த்தியபோது, மக்களை நோக்கித் திரும்பி நின்று, 'ஆண்டவர் உங்களோடு இருப்பாராக' என்று சொல்ல கரங்களை விரித்தேன். ஆனால், அங்கு நான் கண்ட காட்சி, என்னை உறைந்துபோகச் செய்தது. எனக்கு முன் காயப்பட்டுக் கிடந்த அந்த மனுக்குலத்தை, அவர்களை அந்த நிலைக்கு உள்ளாக்கிய மனிதர்களின் அழிவுச்சிந்தனைகளை எண்ணியபோது, விரிந்த என் கரங்கள், அப்படியே உறைந்து நின்றன. அங்கு படுத்திருந்தவர்கள், என்னைப் பார்த்த அந்தப் பார்வை, என் உள்ளத்தைத் துளைத்தது. எங்கிருந்தாகிலும் தங்களுக்கு ஆறுதல் வருமா, முக்கியமாக, இந்த பீடத்திலிருந்து ஆறுதல் வருமா என்ற ஏக்கத்தை, அவர்கள் பார்வையில் நான் படித்தேன். என் வாழ்வில் மறக்கமுடியாத திருப்பலி அது" என்று அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், தன் நினைவுகளை பதிவுசெய்துள்ளார்.

அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்கள், மருத்துவம் படித்தவர் என்பதால், ஹிரோஷிமா தாக்குதலுக்குப்பின், நவதுறவியர் இல்லத்தில் மட்டுமல்ல, வெளியிலும் சென்று தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகள் செய்துவந்தார். ஒரு நாள் மாலை, அவர் வீடு வீடாகச் சென்று உதவிகள் செய்து வந்தபோது, நாகமுரா சான் (Nakamura San) என்ற இளம் பெண்ணின் வீட்டுக்கும் சென்றார். அணுகுண்டின் கதிர் வீச்சால், அந்த இளம் பெண்ணின் உடல், பெருமளவு எரிந்துபோய், கொடூரமான வேதனையில், அந்தப் பெண், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் இருந்த நிலையைக் கண்ட தந்தை அருப்பே அவர்கள், கண்களில் பெருகிய கண்ணீரை அடக்கிக்கொண்டு, அவர் அருகில் முழந்தாள் படியிட்டு, அவரது காயங்களுக்கு மருந்துகள் இட்டபோது, அந்தப் பெண் தந்தை அருப்பேயிடம், "சாமி, எனக்கு திருநற்கருணை கொண்டு வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். தந்தை தலையை அசைத்தபடி, தான் கொண்டு வந்திருந்த திருநற்கருணையை அந்தப் பெண்ணுக்குத் தந்தார். மிகுந்த பக்தியுடன் நற்கருணையை உட்கொண்ட நாகமுரா சான் அவர்கள், சில நிமிடங்களில் இறையடி சேர்ந்தார்.

ஒரு மறக்கமுடியாத திருப்பலி, மறக்க முடியாத நற்கருணைப் பகிர்வு இரண்டையும் அருள்பணி அருப்பே அவர்கள், தன் வாழ்வைப் பாதித்த ஆழமான நினைவுகளாக பதிவுசெய்துள்ளார். காயப்பட்ட மனுக்குலத்திற்கு முன் காயப்பட்டக் கடவுளைக் காட்டும் ஒரு திருவிழாவே, இன்று நாம் கொண்டாடும், கிறிஸ்துவின் திருஉடல், திருஇரத்தம் பெருவிழா.

ஏனைய ஆண்டுகளைவிட, இவ்வாண்டு, இவ்வுலகம் பெரிதும் காயப்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருநாளும் உணர்ந்துவருகிறோம். காயப்பட்டு கிடக்கும் மக்கள், திருப்பலிகள் வழியே, ஆறுதல் பெற இயலாமல், அனைத்து நாடுகளிலும் திருப்பலிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலை, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இன்னும் நீடிக்கிறது.

இத்தகையச் சூழலில், ஆலயங்களுக்குச் சென்று கிறிஸ்துவின் பிரசன்னத்தை உணர முடியாத மக்களைத் தேடி ஆண்டவர் வருகிறார் என்பதை உணாத்தும்வண்ணம், மக்கள்  வாழும் இடங்களுக்கு, அருள்பணியாளர்கள் திருநற்கருணையை பவனியாக ஏந்திச் சென்றுள்ளனர். மருத்துவ மனைகளில், சிறைகளில், மக்கள் வாழும் பகுதிகளில், திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பாக, கொரோனா தொற்றினால் நோயுற்று கிடந்தோருக்கு திருநற்கருணை வழங்கியுள்ளனர். இந்தப் பணியில் ஈடுபட்ட பல அருள்பணியாளரும், துறவியரும்,  தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், இவ்வாண்டு, புனித வியாழன் திருப்பலியை, மக்களின் பங்கேற்பின்றி சிறப்பித்த வேளையில், கொரோனா தொற்றுள்ளவர்களுக்குப் பணியாற்றி, தங்கள் உயிரை வழங்கிய இந்த அருள்பணியாளரை, துறவியரை, மற்றும் மருத்துவப் பணியாளரை, சிறப்பான முறையில் குறிப்பிட்டு, அவர்கள், "நம்மிடையே உலவிவந்த அடுத்தவீட்டுப் புனிதர்கள்" என்பதை, தன் மறையுரையில் கூறினார்.

எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் நிலைநாட்டிய, இன்றும் நிலைநாட்டும் தியாக உள்ளங்கள், இந்த விழாவின் உண்மைப் பொருளை நமக்கு தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர்.

நம்முடன் இறைமகன் என்றும் வாழ்கிறார் என்ற அந்த ஓர் உணர்வால், எத்தனையோ உன்னத உள்ளங்கள், தங்கள் வாழ்வை, அவருக்காக அர்ப்பணித்தனர். அவரைப்போல், தங்கள் பகைவருக்கும் அர்ப்பணித்தனர். அத்தகைய ஓர் உன்னத உள்ளத்தைப் பற்றிய எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

17ம் நூற்றாண்டில் கனடாவில் பழங்குடியினரிடையே பணி புரிந்து, அவர்கள் மத்தியில் மறைசாட்சியாக உயிர்துறந்த பல இயேசு சபை அருள்பணியாளர்களில், புனித ஐசக் ஜோக்ஸ் (Isaac Jogues) அவர்களும் ஒருவர். அம்மக்கள் அவருக்கு வழங்கிய கடுமையான சித்ரவதைகள் காரணமாக, அவர் தன் கை விரல்கள் சிலவற்றை இழந்திருந்தார். இந்நிலையில், அவர் ஐரோப்பாவிற்குத் திரும்பியபோது, அங்கு, திருப்பலி நிகழ்த்த விரும்பினார். அக்காலத்தில் பின்பற்றப்பட்ட திருஅவை விதிமுறையின்படி, அருள்பணியாளர், தன் கட்டைவிரல், மற்றும், ஆள்காட்டி விரல்களால் மட்டுமே அப்பத்தைத் தொடவேண்டும். அருள்பணி ஐசக் அவர்களுக்கு அவ்விரு விரல்களும் இல்லாததால், அவர் வேறு விரல்களைக் கொண்டு அப்பத்தைத் தொடுவதற்கு, திருத்தந்தையின் தனிப்பட்ட உத்தரவைப் பெற வேண்டியிருந்தது. அப்போது திருத்தந்தையாக இருந்த 8ம் உர்பான் அவர்களிடம் உத்தரவு கேட்டபோது, அவர், "இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக வாழும் இந்த அருள்பணியாளர் திருப்பலி நிகழ்த்த யாரும் தடை செய்யமுடியுமா?" என்று சொல்லி, அவருக்கு உத்தரவு அளித்தார். முக்கியமான விரல்கள் இல்லாத நிலையிலும், திருப்பலி நிகழ்த்தி, அப்பத்தையும் கிண்ணத்தையும் விரல்களற்ற தன் கரங்களில் புனித ஐசக் ஜோக்ஸ் அவர்கள் உயர்த்திப் பிடித்தது, கட்டாயம் பலருக்கு, இறை பிரசன்னத்தின் வலிமையை உணர்த்தியிருக்கும்.

அருள்பணி ஐசக் ஜோக்ஸ் அவர்கள், தான் பணியாற்றிய கனடா நாட்டு பழங்குடியினர் நடுவே மீண்டும் திரும்பி, அவர்கள் நடுவே மறைசாட்சியாக உயிர் துறந்தார். 1646ம் ஆண்டு, அக்டோபர் 18ம் தேதி, அவரைக் கொன்ற கொலையாளியை, 1647ம் ஆண்டு, பிரெஞ்சு படையினர் கைது செய்து, அவருக்கு மரணதண்டனை வழங்கினர். அந்தக் கொலையாளி, தன் மரணத்திற்கு முன், ஐசக் என்ற பெயருடன் திருமுழுக்கு பெற்றார். இதனால், ஐசக் ஜோக்ஸ் அவர்கள், இருமுறை சாட்சியாக உயிர்துறந்தார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப்போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளை கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா நமக்கு உதவுவதாக.

இறுதியாக, ஓர் எண்ணம். உலகின் பல நாடுகளில், ஜூன் 13, இச்சனிக்கிழமை, பதுவை நகர் புனித அந்தோனியார் திருநாள் சிறப்பிக்கப்பட்டது. இப்புனிதரின் பரிந்துரையால், இவ்வுலகின்மீது, இறைவன் நல் வரங்களைப் பொழிவார் என்ற நம்பிக்கையுடன், நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2020, 14:14