தேடுதல்

பாகிஸ்தானில் ஏழைகளுக்கு உதவும் கத்தோலிக்க இளையோர் பாகிஸ்தானில் ஏழைகளுக்கு உதவும் கத்தோலிக்க இளையோர்  

ஏழைகளுக்கு பாகிஸ்தான் கத்தோலிக்க இளையோரின் பணி

பாகிஸ்தானில் கத்தோலிக்க இளையோரால் உருவாக்கப்பட்டுள்ள உணவு வங்கியில், இந்து, சீக்கிய, மற்றும் இஸ்லாமிய இளையோர் இணைந்து, உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள Sahiwal நகரின் கிறிஸ்தவ இளைஞர்கள் இணைந்து, ஏழை மக்களுக்கென உணவு வங்கி ஒன்றை துவக்கியுள்ளனர்.

தங்குமிடமும், போதிய வருமானமும் இன்றி தெருக்களில் வாடும் ஏழை மக்களுள் நூறு பேருக்கு ஒவ்வொரு நாளும் மாலை உணவை, இந்த கொரோனா தொற்றுக்காலத்தின்போது வழங்கிவருவதாக உரைத்த இவ்விளையோர் குழுவின் செயலர் Ashiknaz Khokhar அவர்கள், அருள்பணியாளர்களின் உதவியுடன் கத்தோலிக்க இளையோரால் உருவாக்கப்பட்ட இந்த உணவு வங்கியில், இந்து, சீக்கிய, மற்றும் இஸ்லாமிய இளைஞர்களும் இணைந்து, உணவு விநியோகப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

உண்ண  உணவின்றி, தெரு ஓரங்களில் ஏழை மக்கள் தவித்ததைக் கண்டதனால், துவக்கப்பட்ட இந்த உணவு வங்கி, மதப்பாகுபாடின்றி அனைத்து மக்களையும் சென்றடைவதாகவும், கடந்த மாதத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மேல், உணவு உதவிகளைப் பெற்றதாகவும் கூறினார் Ashiknaz.

கத்தோலிக்க இளையோரால் துவக்கப்பட்டுள்ள இந்த முயற்சி குறித்துத் தன்  பாராட்டுக்களை வெளியிட்ட, இவர்களுடன் பணியாற்றும் இஸ்லாமிய பணியாளர் Mufti Sohail Shaukat அவர்கள், எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்கும் உதவிகளை வழங்கும் கிறிஸ்தவர்கள், ஏனைய மதத்தவரையும் இதில் இணைத்துப் பணியாற்றுவது, மதங்களிடையே நல்லுறவுகள் வளர உதவுகின்றது என்கிறார்.

இதுபோல், நற்செய்தி மதிப்பீடுகளின் உதவியுடன், கராச்சியிலுள்ள கத்தோலிக்க இளையோர் இணைந்து, 'வாழ்வுப்பாதை' என்ற பெயருடன் ஒரு குழுவைத் துவக்கி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், இந்துக்கள் என 800 பேருக்கு, ஒவ்வொருவருக்கும் 20 கிலோ உணவுப் பொருட்களை வழங்கியுள்ளதுடன், ஒவ்வொரு நாளும் 100 குடும்பங்களுக்கு காய்கறிகளையும் வழங்கி வருகின்றனர்.

கோவிட்-19 தொற்றுநோய் முழு அடைப்பு காரணமாக வறுமையில் வாடும் ஏழைக்குடும்பங்களுக்கு இந்த உதவிகளை ஆற்றி வருகின்றன, இந்த கத்தோலிக்க இளையோர் குழுக்கள். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2020, 14:05