தேடுதல்

"நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்" (யோவான் 14: 18) "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்" (யோவான் 14: 18) 

உயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

எதை நம்பி, யாரை நம்பி நம் வாழ்வு அமையப்போகிறது என்ற அடிப்படைக் கேள்வியை, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நம்மிடம் எழுப்பியுள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

உயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

நாம் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, வீட்டிலுள்ளவர்களிடம், "நான் போயிட்டு வரேன்" என்று சொல்வதே, நம் வழக்கம். யாராவது, "நான் போறேன்" என்று சொன்னால், அதை, அமங்கலமான, அபசகுனமான அடையாளம் என்று சொல்கிறோம்; அல்லது, அப்படி சொல்பவர், கோபத்துடன் விலகிச் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். நமது தமிழ் இலக்கியங்களில், போருக்குப் புறப்படும் மகனிடமும், தாய், "சென்று வா மகனே, வென்று வா." என்று சொல்லியே அனுப்பிவைத்ததாகக் கேள்விப்படுகிறோம். யாரும் நம்மைவிட்டுப் பிரிந்து செல்லும்போது, அவர்கள் திரும்பி வருவர் என்று எண்ணத்தில் அனுப்பி வைப்பதே, நம்பிக்கை தரும் ஒரு மனநிலை.

"போயிட்டு வரேன்" என்ற தமிழ் சொற்களுக்கு இணையாக, ஆங்கிலத்திலும், அழகான சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தில் 'Goodbye' அல்லது 'Farewell' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். Goodbye என்ற வார்த்தைக்குள், 'God be with you' என்ற சொற்கள் பொதிந்திருக்கின்றன. பிரிந்து செல்பவர் நலமாக, மகிழ்வாக இருக்கும்படி ஆசீர்வதிக்கும் வார்த்தை, Farewell என்ற வார்த்தை.

தமிழில் நாம் 'பிரியாவிடை' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். 'நான் உன்னைவிட்டுப் பிரியமாட்டேன். இப்போதைக்குத் தற்காலிகமாக விடைபெறுகிறேன்' என்பதைச் சொல்லாமல் சொல்வது, 'பிரியாவிடை' என்ற அந்தச் சொல். இயேசு, தன் சீடர்களுக்கு, இறுதி இரவுணவில் சொன்ன பிரியாவிடையை சென்ற வாரமும், இந்த வாரமும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம்: "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்" (யோவான் 14: 18) என்ற வார்த்தைகளை, இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம். "நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்." (யோவான் 14: 3) என்ற வார்த்தைகளை சென்ற வாரம் நற்செய்தியில் கேட்டோம். தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப்பற்றி சென்ற வாரம் பேசிய இயேசு, இந்த வாரம், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப்பற்றி பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." (யோவான் 14: 16)

இயேசு தன் சீடர்களுக்கு வழங்கிய இந்தப் பிரியாவிடை வாக்குறுதிகள், நமது இல்லங்களில் நடைபெறும் ஒரு காட்சியை, நம் மனக்கண்முன் கொண்டுவருகிறது. அப்பாவோ, அம்மாவோ வேலைக்குக் கிளம்புகிறார்கள், அல்லது ஊருக்குக் கிளம்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஓரளவு விவரம் தெரிந்த தங்கள் குழந்தைகளை, தாத்தா, அல்லது பாட்டியிடம் விட்டுவிட்டுச் செல்லும் ஒரு காட்சி இது. அவர்கள் கிளம்பும்போது, குழந்தை அழுதால், பெற்றோர், அக்குழந்தைக்கு சில வாக்குறுதிகளைத் தருவார்கள். திரும்பி வரும்போது மிட்டாய், சாக்லேட், பொம்மை வாங்கிவருவதாக இந்த வாக்குறுதிகள் இருக்கும். பல நேரங்களில், குழந்தைகள், இந்த வாக்குறுதிகளால் சமாதானம் அடைந்து, பெற்றோருக்கு ‘டாடா’ சொல்வார்கள்.

பெற்றோர் தந்த வாக்குறுதிகளில், குழந்தைக்கு எது மிகவும் பிடித்த பகுதியாக இருக்கும் என்பதைச் சிந்திக்கலாம். அவர்கள் வாங்கித் தருவதாகச் சொன்ன பொருட்கள், குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருமா, அல்லது அந்தப் பொருட்களுடன், தாயோ, தந்தையோ, மீண்டும் வீட்டுக்கு வருவார்கள் என்பது, குழந்தைக்கு மகிழ்ச்சியைத் தருமா? ஒருவேளை, தாயோ, தந்தையோ, திரும்பிவராமல், அந்தப் பொருட்களை, அஞ்சல் வழியாகவோ, வேறொருவர் வழியாகவோ அனுப்பிவைத்தால், குழந்தைகள் முழு மகிழ்ச்சி அடைவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், பரிசுப் பொருட்களைத் தாங்கியவண்ணம், தாயோ, தந்தையோ, மீண்டும் வீடு திரும்புவதைக் காணும் குழந்தைகளின் மகிழ்ச்சி, பல மடங்காகும்.

இந்த வாரமும், சென்ற வாரமும், இயேசு, கனிவு மிகுந்த ஒரு பெற்றோரைப் போல், தன் சீடர்களுக்கு, இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார். என் தந்தையின் இல்லத்தில் நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் என்றும், தூய ஆவியாரை அனுப்பிவைப்பேன் என்றும் இயேசு சொல்லியிருந்தால், சீடர்களின் மனங்கள் மகிழ்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், இவ்விரு வாக்குறுதிகளோடு, தான் திரும்பிவந்து அவர்களை அழைத்துச் செல்வதாகவும், அவர்களோடு என்றும் இருப்பதாகவும் இயேசு சொன்ன சொற்கள், சீடர்களின் மனதில் இன்னும் அதிகமான நிறைவை, நம்பிக்கையைத் தந்திருக்கும்.

பரிசுகள் பலவற்றை ஏந்திக்கொண்டு, இயேசு நம் இல்லம் தேடி, உள்ளம் தேடி வருவதை, ஒரு மறையுரையாளர் (Fr James Gilhooley) அழகாக விவரிக்கிறார். நம் இல்லம் தேடிவரும் இயேசு, தன் முழங்கையை வைத்து நம் இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்துவாராம். காரணம் என்ன? அவரது இரு கரங்களிலும் பரிசுகள் குவிந்திருப்பதால், அவரது விரல்கள் அழைப்பு மணியை அழுத்தும் நிலையில் இருக்காது என்பதே காரணம் என்று, அந்த மறையுரையாளர் அழகாக விவரிக்கிறார். அற்புதமான கற்பனை இது.

கரங்கள் நிறைய பரிசுகளை ஏந்தி, கடவுள், நம் வீடுதேடி வரும் வேளையில், நாம் வீட்டில் இல்லாமல் போனால் எப்படி இருக்கும் என்பதை, யூதமத இராபி ஹெரால்டு குஷ்னர் (Harold Kushner) அவர்கள், “ஆண்டவரே என் ஆயர்” என்ற 23ம் திருப்பாடலை மையப்படுத்தி எழுதிய நூலில் அழகாக விவரிக்கிறார். அத்திருப்பாடலின் இறுதியில் காணப்படும், உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும் என்ற இறுதி வரியை குஷ்னர் அவர்கள் விவரிக்கும்போது, ஒரு கதையுடன் ஆரம்பிக்கிறார்.

ஓர் ஊரில், வாழ்ந்துவந்த ஒரு முக்கிய புள்ளி, எப்போதும் ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோல் எல்லாருக்கும் தெரியும். தொழுகைக் கூடத்திற்குச் சென்றாலும், அங்கும் நிலைகொள்ளாமல் தவிப்பார். தொழுகையின் இறுதிவரை தங்காமல், விரைந்து வெளியேறுவார். இவரைப் பார்த்துக்கொண்டிருந்த யூத குரு, ஒரு நாள் இவரிடம், "நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம், நீங்கள், ஏதோ ஓர் அவசரத்தில் இருப்பதுபோலவே தோன்றுகிறீர்களே. ஏன் இந்த அவசரம்?" என்று கேட்டார். அந்த முக்கிய புள்ளி, குருவிடம், "நான் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க விரும்புகிறேன். வெற்றி, செல்வம், புகழ், இவற்றைத் தேடி, எப்போதும் நான் ஓடிக்கொண்டே இருப்பதால், இந்த அவசரம்" என்று கூறினார்.

"சரியான பதில் இது" என்று கூறிய குரு, மேலும் தொடர்ந்தார்: "வெற்றி, செல்வம், புகழ் எல்லாம் உங்களுக்கு முன் செல்வதாக நினைக்கிறீர்கள். கைநழுவிப் போய்விடுமோ என்ற பயத்துடன், நீங்கள் எப்போதும் இவற்றைத் துரத்திக் கொண்டிருக்கிறீர்கள்... சரி... கொஞ்சம் மாற்றி சிந்தித்துப் பாருங்களேன். நீங்கள் துரத்திச்செல்லும் பரிசுகள், உங்களுக்கு முன் செல்லாமல், உங்கள் பின்னே உங்களைத் தேடிக்கொண்டு வரலாம் இல்லையா? கடவுள், இந்தப் பரிசுகளையெல்லாம் ஏந்திவருவதாகவும் எண்ணிப் பார்க்கலாமே! அப்படி அவர், உங்கள் வீடு தேடி வரும்போது, நீங்கள் இப்பரிசுகளைத் துரத்திக்கொண்டு போயிருந்தால், கடவுள் வரும் நேரத்தில், நீங்கள் வீட்டில் இருக்க மாட்டீர்கள். கடவுள் உங்களைச் சந்திக்காமல், உங்களுக்கு இந்தப் பரிசுகளைத் தரமுடியாமல், திரும்ப வேண்டியிருக்குமே!" என்று, அந்த யூத குரு கூறினார். செல்வத்தையும், புகழையும் தேடி, நாம் ஓடிக் கொண்டிருக்கும்போது, இறைவன், இவற்றையெல்லாம் நமக்குத் தருவதற்கு, நம்மைத் தேடி வரக்கூடும் என்பது, அழகான எண்ணம், மாற்றி சிந்திக்க வைக்கும் ஓர் எண்ணம்.

பரிசுகளைப்பற்றி, அதுவும், கை நிறைய பரிசுகளைச் சுமந்துவரும் இயேசுவைப்பற்றி பேசும்போது, ஒரு கற்பனைக் கதை, நினைவுக்கு வருகிறது. ஒருவருக்கு பரிசுப்பொருள் வந்திருந்தது. பரிசு வந்திருந்த 'பார்சல்' மிக அழகாக இருந்தது. தங்க இழைகளால் ஆன 'ரிப்பனால்' கட்டப்பட்டு, மானும், குருவியும் போட்ட வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்டு... பரிசுப்பொருள் வந்திருந்தது. "பரிசு என்ன சார்?" என்று அருகிலிருந்தவர் கேட்டார். பார்சலை வைத்திருந்தவர், "கொஞ்சம் பொறப்பா! இந்தக் காகிதத்தைப் பாத்தியா? மானும், குருவியும்... அடடே மயிலும் இருக்கே... அதுவும், எத்தனை 'கலர்'ல இருக்கு..." என்று அவர் ‘பார்சலை’ வியந்துகொண்டேயிருந்தார். அருகிலிருந்தவர் பொறுமை இழந்தார். பரிசு வந்தால், உள்ளிருப்பதைப் பார்ப்பாரா, வெளி ‘பார்சலை’யே பார்த்து நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாரே என்று அவர் நினைத்தார். பல நேரங்களில் பரிசுகளை விட பரிசுகள் சுற்றப்பட்டுள்ள காகிதங்கள் நம் கவனத்தை ஈர்த்துள்ளன என்பது உணமைதானே! அதேபோல், பரிசுகளைத் தாங்கி வரும் இயேசுவை விட, பரிசுகள், நமது கவனத்தை அதிகம் கவர்ந்த நேரங்களும் உண்டல்லவா?

பரிசுகள் மட்டுமே முக்கியம் என்றால், கைநிறைய பரிசுகளை அள்ளிவரும் இறைவன், அவற்றை நம் இதயத்தின் வாசலில் விட்டுவிட்டு, மறைந்திருக்கலாம், கிறிஸ்மஸ் தாத்தாவைப்போல். கதவைத் திறக்கும் நமக்கு, ஆச்சரியமான பரிசுகள் மட்டும் காத்திருக்கும். பரிசுகளின் நாயகன் இருக்கமாட்டார். அப்படியே, அவர் அங்கு நின்றாலும், நம் கவனம் பரிசுகளில் புதைந்திருந்தால், பரிசுகளைக் கொணர்ந்த இறைவனை கவனிக்க மறந்துவிடுவோம்.

இயேசுவின் பாணி தனிப்பட்டது. பரிசுகளுடன், அவரும் நம் இல்லத்தில், உள்ளத்தில் நுழைவதையே பெரிதும் விரும்புகிறார். பரிசுகள் வழங்குவதைவிட, தன்னை வழங்குவதையே அதிகம் விரும்பும் இயேசு, சென்ற வாரமும், இந்த வாரமும் இதே கருத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார். இதில் மற்றோர் அழகிய அம்சம் என்னவென்றால், இந்தப் பிரியாவிடை உரையை, இயேசு, தன் இறுதி இரவுணவின்போது கூறினார். அந்த இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பகிர்ந்தளித்தார் என்பதை நாம் அறிவோம். துயரமும், கலக்கமும் நிறைந்த அந்த இறுதி இரவுணவில், "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்..." என்று அவர் சொன்னபோது, சீடர்களால் ஓரளவு உறுதி பெறமுடிந்தது. மிகவும் கடினமானச் சூழலில் தங்கள் தலைவன் எப்படியும் தங்களோடு இருப்பார் என்பதை நம்பி, சீடர்கள் வாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

நாம் எதை நம்பி, நம் வாழ்வுப் பயணத்தை மேற்கொள்கிறோம் என்பதை, அவ்வப்போது ஆய்வு செய்வது நல்லது. 1991ம் ஆண்டு நடைபெற்ற ஓர் உண்மை நிகழ்வு இது. நடுவானில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தின் இயந்திரங்கள் திடீரென செயலிழக்க ஆரம்பித்தன. எரிபொருள் முற்றிலும் இல்லை என்பதைக் கண்டுபிடித்தனர். தலைமை விமானி, பல ஆண்டுகள் விமானம் ஒட்டியவர் என்பதால், அவரால் அந்த பயங்கரமானச் சூழலை சமாளிக்கமுடிந்தது. அவசரமாகத் தரையிறங்கவும் முடிந்தது. யாருக்கும் எந்தச் சேதமும் இல்லை. இந்நிலை உருவாகக் காரணம் என்ன என்பது ஆராயப்பட்டது. மிகவும் உயர்ந்த தொழில்நுட்பம் கொண்டு செய்யப்பட்டிருந்த விமானத்தில், எரிபொருளின் அளவைக் காட்டும் கருவி பழுதடைந்திருந்தது. எனவே அது விமானத்தில் எரிபொருள் முழுமையாக உள்ளதென்று எப்போதும் காட்டிக்கொண்டே இருந்தது. 2000 கி.மீ. பயணத்திற்குரிய எரிபொருள் உள்ளதென்ற நம்பிக்கையில் விமானம் கிளம்பியது. 200 கி.மீ. கடப்பதற்குள் எரிபொருள் சுத்தமாகத் தீர்ந்துவிட்டது. அத்தனை பெரிய விமானத்தை வழிநடத்திச் செல்வதற்கு ஒரு சிறு கருவியே ஆதாரமாய் இருந்தது. அந்தக் கருவி பழுதடைந்து போனால், அதை நம்பிச் செல்லும் அத்தனை உயிர்கள் என்னாவது?

எதை நம்பி, யாரை நம்பி நம் வாழ்வு அமையப்போகிறது என்ற அடிப்படைக் கேள்வியை, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி நம்மிடம் எழுப்பியுள்ளது. கொரோனா தொற்றுக்கிருமியின் தாக்கம், விரும்பத்தக்க, அல்லது, விரும்பத்தகாத மாற்றங்களை நம்மீது திணித்துள்ளது. இந்தக் கிருமியின் பிடியிலிருந்து சிறிது, சிறிதாக விடுபட்டுவரும் நாம், இனிவரும் காலங்களில், எதை நம்பி, யாரை நம்பி, நம் வாழ்வை வடிவமைக்கப்போகிறோம் என்ற கேள்விக்கு, உண்மையான, நேர்மையான பதில்களைத் தேடுவோம். "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்..." என்று கூறும் இயேசுவை நம்பி, நம் வாழ்வுப் பயணத்தைக் தொடர, தூய ஆவியாரின் துணையை நாடுவோம்.

பொதுவாகவே, ஏப்ரல், மே மாதங்கள், மாற்றங்களைக் கொணரும் மாதங்கள். பலருக்கு, வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடு மாற்றம் என்று, பல மாற்றங்களைச் சந்திக்கும் சூழல்கள் உருவாகியிருக்கலாம். குறிப்பாக, இளையோர், தங்கள் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தொடர் கல்வியை, பணியை, வாழ்வின் அடுத்த நிலையைத் தீர்மானிக்கும் காலம் இது.

கொரோனா தொற்றுக்கிருமி உருவாக்கியுள்ள நிலையற்ற ஒரு சூழல், குறிப்பாக, பொருளாதார உலகில் உருவாகியுள்ள சரிவு, இளையோருக்கு, கூடுதல் சவால்களை உருவாக்கியுள்ளது. தங்கள் எதிர்காலத்தைக் குறித்த பல கேள்விகள் இளையோரின் உள்ளங்களில் நிறைந்திருக்கும். இத்தகையச் சூழலில், அவர்கள் எடுக்கும் முடிவுகள், அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்போர் அனைவருக்கும் நன்மை தரும் முடிவுகளாக அமைய, தூய ஆவியார் அவர்களை நல்வழி நடத்தவேண்டும் என்று மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2020, 11:06