பாகிஸ்தானில் மரணதண்டனை பெற்ற கிறிஸ்தவத் தம்பதியர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் நாட்டில், 2014ம் ஆண்டு, தவறாகக் குற்றம் சாட்டப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு தம்பதியரின் மனு மீதான தீர்ப்பு, ஏப்ரல் 8ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிஜ்ரா (Gjra) என்ற ஊரில் வாழ்ந்த Shafqat Emmanuel, மற்றும், Shagufta Kausar என்ற தம்பதியர், கைத்தொலைப்பேசி வழியாக, தேவநிந்தனையான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கைதுசெய்யப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளனர்.
தேவநிந்தனை குறுஞ்செய்திகளை, ஆங்கிலத்தில் அனுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள இத்தம்பதியர், கல்வியறிவற்றவர்கள் எனவும், இவர்களுக்கு ஆங்கிலத்திலோ, உருது மொழியிலோ எழுதத் தெரியாது என்றும், அவர்களுக்காக வாதாடும் வழக்குரைஞர், Khalid Tahir Sandhu அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது, பாகிஸ்தானில், 25 கிறிஸ்தவர்கள், தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும், இவர்களில் ஆறு பேருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்