தேடுதல்

இயேசு, தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். - யோவான் 19: 26-27 இயேசு, தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். - யோவான் 19: 26-27 

விவிலியத்தேடல்: சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 5

தன் வாழ்நாள் முழுவதும் பல வழிகளில் தன்னையே தந்த இறைமகன் இயேசு, சிலுவையில் தன் உயிர் பிரியும் நேரத்தில், தனது கொடைகளின் சிகரமாக, தன் தாயை, இவ்வுலகிற்கும், நமக்கும் அளித்தார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

சிலுவையில் அறையப்பட்டவரின் அழைப்பு 5

ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி, இப்போது நினைவுக்கு வருகிறது. இயேசுசபையைச் சேர்ந்த இளம் அருள்பணியாளர்களில் ஒருவர், மருத்துவமனையில் இருந்தார். வயிற்றில், புற்றுநோய் முற்றிய நிலையால், அதிக வேதனையில் இருந்தார். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

நானும், இன்னொரு நண்பரும் அவரைப் பார்க்கச்சென்றோம். அந்த வேதனையின் நடுவிலும், எங்களை, புன்முறுவலுடன் வரவேற்றார். நாங்கள் அவரது வலியைப்பற்றி பேசியபோது, "அது கிடக்குது விடுங்க... உங்க அப்பாவுக்கு சுகமில்லன்னு போன வாரம் சொன்னீங்களே. இப்ப எப்படி இருக்கார்?" என்று என்னிடம் கேட்டார். எங்கள் சந்திப்பின் முழு நேரமும், என் முதுகு வலி எப்படி இருக்கிறதென்று, என் நண்பர் தேர்வு எப்படி எழுதினார் என்று... எங்களைப்பற்றியே அவர் அதிகம் பேசினார்.

வெளியே வந்ததும், நானும், நண்பரும் பேசிக்கொண்டோம். இது எப்படி ஒருவரால் முடியும்? என் தந்தையைப்பற்றி போன வாரம் சொன்னதை, இந்த வேதனையின் மத்தியிலும் அவரால் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். தன் வலியை மறக்க, அதிலிருந்து தன் எண்ணங்களைத் திசை திருப்ப வேறு பல எண்ணங்களை அவர் மனதில் நிறைத்துக் கொள்கிறார் என்று என் நண்பர் விளக்கம் தரமுயன்றார்.

மனமும் உடலும் ஒன்றை ஒன்று அதிகம் பாதிக்கும் என்பது, நாம் அனைவரும் அறிந்த உண்மைதானே. உடல் காயப்பட்டால், மனம் சோர்ந்துவிடும், ஆனால் காயப்பட்ட நேரங்களிலும் மனம் நினைத்தால், காயங்களை மறந்து, உடலைச் செயல்பட வைத்துவிடலாம்.

நாங்கள் அவரைச் சந்தித்துவிட்டு வந்த ஒரு வாரத்தில் அவர் இறைவனடி சேர்ந்தார். கடைசி நேரம் வரை, அவர், மற்றவர்களைப் பற்றியே அதிகம் பேசிவந்தார் என்று, அவர் இறக்கும் வேளையில் கூட இருந்தவர்கள் சொன்னார்கள். இப்படி எண்ணுவதற்கு, பேசுவதற்கு, உயர்ந்ததோர் உள்ளம் வேண்டும்.

இயேசு, வேதனை நிறைந்த மரணப்படுக்கையில் பேசியவற்றை, கடந்த சில வாரங்களாக, நாம் சிந்தித்து வருகிறோம். இயேசு, தன் பணி வாழ்வில், பலமுறை சொன்ன ஓர் ஆழமான உண்மை - இறையன்பும் பிறரன்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது, பிரிக்கமுடியாதது என்ற உண்மை. இந்த மறையுண்மையின் மிகச் சிறந்த பாடங்களை, சிலுவையில் இயேசு மீண்டும் போதித்தார். "தந்தையே, இவர்களை மன்னியும்" என்றும் , "இன்றே நீர் என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்றும் அவர் சொன்ன வார்த்தைகள், பிறரன்பின் ஆணிவேரைக் காட்டும் அற்புத சொற்கள். இன்றைய விவிலியத்தேடலிலும், இயேசு, சிலுவையில், அடுத்தவரை மனதில் வைத்துச் சொன்ன மற்றொரு வாக்கியத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இயேசு அந்த அற்புதச் சொற்களைக் கூறிய நிகழ்வு, யோவான் நற்செய்தியில் இவ்வாறு பதிவாகியுள்ளது:

யோவான் நற்செய்தி 19: 25-27

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

இயேசுவின் கூற்றை சிந்திப்பதற்கு முன், இப்போது நாம் கேட்ட இந்த நற்செய்தியில் வாசித்த முதல் வாக்கியத்தை முதலில் சிந்திக்க முயல்வோம். “சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.” இயேசுவின் இறுதி சித்ரவதை நேரத்தில் அவரது சிலுவை அருகில், மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு, இயேசுவின் அன்பு சீடரும், நற்செய்தியாளருமான யோவானும் நின்று கொண்டிருந்தார். மூன்று பெண்கள், ஓர் இளைஞன்.

தன் மகனின் கொடூர வேதனையைப் பார்த்து, உள்ளமெல்லாம் நொறுங்கி, மண்ணோடு மண்ணாக அழுது புரண்டு வீழ்ந்திருக்க வேண்டும் தேவதாய். ஆனால், அவர் நின்று கொண்டிருந்தார். பெண்களுக்கு, சிறப்பாக தாய்களுக்கு இருக்கும் மன உறுதி, நம்மை, வியப்பில் ஆழ்த்தும்.

உலகப்புகழ் பெற்ற ‘பியெத்தா’ (Pieta) திரு உருவத்தை நாம் பார்த்திருக்கிறோம். கலை நயத்துடன், மிக்கேலாஞ்சலோ அவர்கள் வடித்த இவ்வுருவம், பல கோடி மக்களின் மனங்களில் இடம் பெற்றுள்ளது. 33 வயது நிறைந்த ஆண் மகனை முழுவதுமாக மடியில் சுமப்பதென்பது, எந்த ஒரு பெண்ணாலும் முடியாத காரியம். ஆனால், மரியா அப்படி தாங்கினார் என்று, மிக்கேலாஞ்சலோ அவர்கள் செய்த கற்பனையே மிக அழகானது. மரியாவைப்பற்றி மிக்கேலாஞ்சலோ அவர்கள் வைத்திருந்த அந்த உயர்ந்த எண்ணங்களுக்கு அவர் கொடுத்த ‘பியெத்தா’ வடிவம், பலகோடி மக்களின், சிறப்பாக, பெண்களின் மனதில், ஆழமான உறுதியை உருவாக்கியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

விருப்பப்பட்டு, மனமுவந்து, துன்பங்களை ஏற்கும் உறுதி பெண்களுக்கு, சிறப்பாக தாய்களுக்கு அதிகம் உண்டு. கருவில் ஓர் உயிர் தோன்றியதும், ஒரு தாயின் உடல் வேதனைகள், பல வழிகளில் ஆரம்பமாகின்றன. குழந்தையைப் பெறும்போது, தாய் படும் உடல் வேதனை மிகப்பெரிது. இன்றைய மருத்துவ உலகம், வலியின்றி குழந்தையைப் பெறுவதற்கு, அறுவைச் சிகிச்சைகளைக் கண்டுபிடித்திருந்தாலும், இன்னும் பலகோடி அன்னையர், இயற்கை முறையில், வேதனையோடு குழந்தை பெறுவதையே தேர்ந்தெடுக்கின்றனர். இதேபோல், குழந்தை வளரும்போது, நோயுறும் குழந்தையைப் பேணும்போது, அந்தத் தாய், விருப்பப்பட்டு ஏற்கும் வேதனைகளின் பட்டியல் நீளமானது.

அன்னை மரியா தன் வாழ்வில் சந்தித்த இந்த வேதனைகளின் ஆரம்ப நிகழ்வு, மார்ச் 25, இப்புதனன்று, ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. யூத சமுதாயத்தில், மணமாகா நிலையில் இருந்த இளம்பெண் மரியா, தாயாவதற்கு, இறைவன் தந்த அழைப்பு, ஓர் அழைப்பு அல்ல, அது, மரணதண்டனை தீர்ப்பு. அதை நன்கு அறிந்திருந்தும், அந்த அழைப்பிற்கு, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" (லூக். 1:38) என்று சொல்லி, இயேசுவைக் கருவில் தாங்கியது முதல், பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்தவர், அன்னை மரியா.

தன் பிரச்சனைகள் பெரிதென்று, அவைகளே தன் உலகமென்று, அவற்றைச் சமாளிக்கவே தன் வாழ்நாள் முழுவதும் போதாதென்று, மரியா, தான், தனது துன்பம் என்ற சிறைகளுக்குள் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி வாழவில்லை. தன் பிரச்சனைகளை மையப்படுத்தாமல், மற்றவர் பிரச்சனைகளில் பங்கேற்று, விடைதேட முயன்றார். ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு, மரியாவுக்கு வழங்கப்பட்ட உடனேயே, அவர், தன் உறவினராகிய எலிசபெத்தைத் தேடிச்சென்றார். கானா திருமண விருந்தில் உண்டான பிரச்சனையைத் தீர்த்துவைத்தார். இப்படி, அவரைச்சுற்றி, எங்கெங்கு பிரச்சனைகள் வந்தனவோ, அங்கெல்லாம் உறுதியாக நின்று, பிரச்சனைகளைத் தீர்த்தவர் மரியா. இன்று, சிலுவையடியில், தன் மகனுக்கு எவ்வகையிலும் உதவமுடியவில்லை என்றாலும், மகனின் வேதனைகளில் பங்கெடுத்து அந்த வேதனைகளை ஓரளவாகிலும் குறைக்கும் நோக்கத்துடன், மரியா, சிலுவை அருகில் நின்றார்.

மரியாவுடன் நின்றது, வேறு இரு பெண்கள், மற்றும், இயேசுவின் அன்புச்சீடர் என்று யோவான் நற்செய்தியில் வாசிக்கிறோம். சீடரின் பெயர் குறிக்கப்படவில்லை எனினும், அது யோவான் என்பது, மரபு வழி நமக்கு வரும் ஒரு தெளிவு. சீடர்களிலேயே மிக இளவயதுள்ளவர் யோவான். மற்ற சீடர்களெல்லாம் ஓடி ஒளிந்து கொண்டபோது, யோவானுக்கு மட்டும் எப்படி இந்த துணிவு வந்தது? இளவயது ஒரு காரணமாக இருக்கலாம். இளங்கன்று பயமறியாது என்று சொல்வதில்லையா? ஆனால், அதை விட, யோவான், இயேசுவின் மீது கொண்டிருந்த ஆழமான அன்பு, அவரை, அந்த சிலுவை அருகில் வேரூன்றி நிற்கவைத்தது.

இதே யோவானும், அவரது சகோதரர் யாக்கோபும் இயேசுவுக்கு மிக நெருக்கத்தில் அமர விரும்பிய காலமும் உண்டு. நெருக்கமேன்றால்... ஒருவர், இயேசுவின் வலது புறமும், மற்றொருவர், அவரது இடது புறமும் அமரும் அளவு நெருக்கம் தேடினர். வெறும் நெருக்கம் மட்டும் அல்ல. நெருக்கத்தோடு, அரியணைகளையும் தேடினர், இந்த செபதேயுவின் மக்கள். இதனால் பிறர் கோபத்தையும் தூண்டிவிட்டனர். அவர்கள், இந்த அரியணைகளைக் கேட்ட நேரமும், பரிதாபமான நேரம். இயேசு, தான் ஏறப்போகும் அரியணையைப்பற்றி, அதாவது, சிலுவையைப்பற்றி தெளிவாகச் சொன்னதும், யோவானும், யாக்கோபும் இயேசுவிடம் அரியணைகள் கேட்டனர். (மாற்கு 10: 35-45; மத்தேயு 20: 20-28) அந்நேரத்தில் யோவானுக்கு எதுவும் விளங்கவில்லை. இதோ, இங்கே, இப்போது, கல்வாரியில், எல்லாம் அவருக்குத் தெளிவானது. இயேசு கூறிய அரியணை எது என்று கண்டார், அதில் ஏறத் தயாராக அங்கு நின்றார்.

'நிற்பது' என்ற தமிழ் சொல்லுக்கும் Stand என்ற ஆங்கிலச் சொல்லுக்கும் பல பொருட்கள் உண்டு. கொள்கைப் பிடிப்போடு வாழ்வது, எதிர்ப்புகளைச் சமாளித்து வாழ்வது, புரிந்து கொண்டு செயல்படுவது என்று stand என்ற சொல்லோடு தொடர்புடைய பல கோணங்கள் உண்டு.

தமிழிலும் நிலைத்து நிற்பது, வேரூன்றி நிற்பது, மலைபோல் உயர்ந்து நிற்பது என்ற கோணங்களிலும், நின்று நிதானமாய் செயல்படுவது என்ற கோணத்திலும் 'நிற்பது' என்ற வார்த்தை, பல வழிகளில் நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

இயேசுவின் தாயும், அன்புச் சீடரும் அந்தச் சிலுவைக்கடியில் நின்று கொண்டிருந்தனர் என்று சொல்லும்போது, 'நிற்பது' என்ற சொல்லில் புதைந்திருக்கும் அத்தனை அர்த்தங்களையும் கூட்டிச் சேர்த்து நாம் சிந்திக்க வேண்டும்.

தன்னை ஆணிகளால் அந்தச் சிலுவையில் நிற்க வைத்து வேடிக்கைப் பார்க்கும் தீய சக்திகளைக் கண்டும் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் நின்ற தன் தாயையும், அன்பு சீடரையும் கண்ட இயேசு மன நிறைவடைந்திருப்பார். தான் போதித்த நம்பிக்கை பாடங்களுக்கு சிறந்த சாட்சிகளாக வாழ்ந்த அவ்விருவரும், தன் சிலுவை அருகில் நின்றது, அவருக்கு ஆறுதலைத் தந்திருக்கும். இன்பங்களை விட, தன்னோடு துன்பங்களையே அதிகம் பகிர்ந்துகொண்ட இந்த இரு உள்ளங்களும், ஒன்றுக்கொன்று உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், நிறைவுடன், அவர்கள் இருவருக்கும், இயேசு, பிரியாவிடை அளிக்கிறார். "அம்மா, இதோ உம் மகன்... இதோ உம் தாய்."

மகாபாரதத்தில் வரும் கர்ணன், நம் நினைவுக்கு வருகிறார். கொடுப்பது ஒன்றையே வாழ்வின் கொள்கையாய் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் கர்ணன் கொடுத்த இறுதிக் கொடைகள், மிக உன்னதமானவை. பிறப்பிலேயே தன்னைக் காக்க தன் உடலோடு ஒட்டிப்பிறந்த கவசத்தையும், காதணிகளையும், அவற்றை யாசித்துவந்த ஒரு முனிவருக்கு கர்ணன் வெட்டித்தந்தார். அந்த முனிவர், வஞ்சகமாய் வேடமணிந்து வந்திருந்த கடவுள் என்பது தெரிந்தும், தான் அளிக்கும் கவசமும், காதணியும் தான் தன் உயிரைக் காக்கும் கேடயங்கள் என்பதை உணர்ந்திருந்தும், அவற்றை, கர்ணன் வெட்டித் தந்தார் என்று மகாபாரதம் சொல்கிறது.

தன் வாழ்நாள் முழுவதும் மற்றவரை வாழவைக்க பல வழிகளில் தன்னையே தந்த இறைமகன் இயேசு, சிலுவையில் தன் உயிர் பிரியும் அந்த நேரத்தில், தனது கொடைகளின் சிகரமாக, தன் தாயை, இவ்வுலகிற்கும், நமக்கும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2020, 15:11