தேடுதல்

"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13-14) "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13-14) 

பொதுக்காலம் 5ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

உப்பும், ஒளியும், தூய்மையின் அடையாளங்கள் என்பதால், இயேசு, இவற்றை, நம்முடன் ஒப்புமைப்படுத்தி, அந்தத் தூய்மை, நம் வாழ்வில் வெளிப்படவேண்டும் என விழைகிறார்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 5ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

மேடைப் பேச்சுக்களிலும், ஆலயங்களில் வழங்கப்படும் மறையுரைகளிலும், எத்தனையோ கருத்துக்கள் கூறப்பட்டாலும், அக்கருத்துக்களைவிட, அவ்வுரைகளில் சொல்லப்பட்ட கதைகளும், உருவகங்களும் மக்களின் உள்ளங்களில் இன்னும் ஆழமாகப் பதிவது உறுதி. கதை வடிவில் இயேசு கூறிய உவமைகளும், அவர் பயன்படுத்திய உருவகங்களும் சீடர்களின் உள்ளங்களில் ஆழமாக இடம்பெற்றன. சீடர்களின் நினைவுகளிலிருந்து உருவான நான்கு நற்செய்திகளின் வழியே, இவ்வுவமைகளும், உருவகங்களும் தலைமுறை, தலைமுறையாக மனித சமுதாயத்தில் தனியொரு இடம்பெற்றுள்ளன. இயேசு பயன்படுத்திய பல உருவகங்கள், தினசரி வாழ்விலிருந்து எடுக்கப்பட்டதால், அவற்றின் உதவியுடன் அவர் சொன்ன உண்மைகள், நம் மனங்களில் ஆழமாய், பாடமாய் பதிந்துள்ளன.

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில், இயேசு, இரு உருவகங்களைப் பயன்படுத்தியுள்ளார். "நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத்தேயு 5:13-14) என்ற உருவகங்கள் வழியே, ஒவ்வொரு நாள் வாழ்விலும் பயன்படுத்தப்படும் இரு பொருள்களை இயேசு நம்முடன் ஒப்புமைப்படுத்துகிறார். உப்பும், விளக்கும் இல்லாத இல்லங்கள் இல்லை. மதம், இனம், ஏழை, பணக்காரன், என்ற பாகுபாடுகள் ஏதும் இன்றி, எல்லா இல்லங்களிலும் பயன்படுவது, உப்பும், விளக்கும். இயேசு கூறிய இவ்விரு உருவகங்களில் பொதிந்திருக்கும் உண்மைகளைப் புரிந்துகொள்வது பயனுள்ள முயற்சி.

உப்பும், ஒளியும் எவ்விதம் உருவாகின்றன என்பதைச் சிந்திக்கும்போது, அவற்றை, தூய்மைக்கு அடையாளங்களாகப் புரிந்துகொள்ளலாம். இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள இருபெரும் கொடைகளான சூரிய ஒளி, கடல் நீர் இரண்டும் இணைந்து, உப்பு உருவாகிறது. அதேபோல், நாம் ஏற்றிவைக்கும் ஒளி, மெழுகிலிருந்து உருவானாலும், எண்ணெயிலிருந்து உருவானாலும், எரிகின்ற சுடர், எவ்வித வேறுபாடுமின்றி, தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. நாம் ஏற்றிவைக்கும் மெழுகு, கறுப்பானாலும், வெள்ளையானாலும் சரி, நாம் ஊற்றிவைக்கும் எண்ணெய், சுத்தமானதாகவோ, மாசடைந்ததாகவோ இருந்தாலும் சரி, ஏற்றப்பட்ட சுடர், எப்போதும் தூய்மையான ஒளியைச் சிந்துகிறது. உப்பும், ஒளியும், தூய்மையின் அடையாளங்கள் என்பதால், இயேசு, இவற்றை, நம்முடன் ஒப்புமைப்படுத்தி, அந்தத் தூய்மை, நம் வாழ்வில் வெளிப்படவேண்டும் என விழைகிறார்.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்ற இந்தக் கூற்றின் ஆழத்தை உணர, உப்பின் பண்புகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள முயல்வோம்.

  • உப்பாக இருப்பது என்றால், நடுநாயகமாக இல்லாமல், பின்னணியில் இருந்து செயலாற்றுவது. உப்பு இல்லையேல், உணவுக்குச் சுவையில்லை. ஆனால், உப்பு மட்டுமே உணவாக முடியாது.
  • உணவுக்குச் சுவை சேர்க்கும் உப்பு, ஓரு குறிப்பட்ட அளவுடன் பயன்படுத்தப்பட வேண்டும். உப்பில்லா உணவு குப்பையிலே என்பதை அறிவோம். அதேபோல், உப்பு அதிகமான உணவும், குப்பையிலே.
  • உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்கும், உடலின் ஒரு சில குறைகளைத் தீர்ப்பதற்கும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பின் அரிய குணங்களை நன்கு அறிந்திருந்த இயேசு, தன்னைப் பின்பற்றுவோருக்கு, அக்குணங்களை ஒப்புமைப்படுத்துகிறார். இயேசுவைப் பின்பற்றுவோர், மண்ணுலலகிற்கு உப்பாக இருக்கின்றனர் என்றால், அதன் பொருள் என்ன?

  • அவர்கள், உலகிற்குத் தேவையானவர்கள் என்றாலும், பின்னணியில் இருந்து செயலாற்றுகிறார்கள். தாங்களே உலகின் மையம், நடுநாயகம் என்று வாழ்வதில்லை.
  • உணவில் அளவோடு கரையும் உப்பைப்போல், அவர்களும், உலகில் அளவோடு கரைந்து வாழ்கின்றனர். அளவுக்கதிகமாய் உலகோடு கரைந்தால், உலகம் அவர்களால் பயன்பெறப் போவதில்லை.
  • உலகிற்கு மருந்தாகவும், உலகை அழிவிலிருந்து காக்கவும், இவர்கள் கருவிகளாகச் செயலாற்றுகின்றனர்.

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் என்று சொன்ன அதே மூச்சில், இயேசு ஓர் எச்சரிக்கையையும் தருகிறார். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. (மத்தேயு 5:13) உணவுக்குச் சுவைசேர்க்கும் உப்பு, தன் சுவையை இழந்தால் பயனில்லை என்று இயேசு எச்சரிக்கிறார். உப்பு எவ்விதம் தன் சுவையை இழக்கும்? உப்புடன் பிற மாசுப் பொருட்கள் கலந்தால், அது, தன் சுவையை இழந்துவிடும். இயேசுவைப் பின்பற்றுவோரும் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து, கொள்கைப்பிடிப்பிலிருந்து விலகி, உலகச் சக்திகளுடன் கலந்துவிட்டால், மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயனற்ற உப்பாக மாற வாய்ப்புண்டு. சுவையிழந்த, பயனற்ற உப்பு, வெளியில் கொட்டப்படும், மனிதரால் மிதிபடும்.

மிதிபடும் உப்பைப்பற்றிச் சிந்திக்கும்போது, நம் மனதில் மற்றுமோர் எண்ணமும் எழுகிறது. உணவுக்கு அவசியமாகத் தேவைப்படும் உப்பு, தன்னை முற்றிலும் மறைத்து, கரைத்து, உணவுக்குச் சுவை சேர்க்கிறது. அதேபோல், உலகில், எத்தனையோ மனிதர்கள், இந்த உலகின் உயிர் நாடிகளாய் இருக்கின்றனர். அவர்கள் இல்லையேல், உலகம் இயங்காது என்பது உண்மை. ஆனால், அவர்கள், ஒருபோதும் உலகின் நடுநாயகமாய் வைக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக, அவர்கள், மனித சமுதாயத்தால் மிதிக்கப்படுகிறார்கள்.

உலகின் உப்பாக இருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், ஏர் பிடிக்கும் உழவர்கள் போன்ற, பல கோடி தொழிலாளர்களை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். மண்ணில் மிதிபடும் உப்பைப்போல் வாழ்நாளெல்லாம் மிதிபடும் இவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கும் மனம் நமக்கு வேண்டும்; உலகம் இவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கவேண்டும், என்று செபிப்போம்.

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" என்பது, இயேசு வழங்கும் அடுத்த உருவகம். ‘ஒளி’ என்ற சொல்லைக் கேட்டதும், ‘இருள்’ என்ற சொல், தானாகவே நம் எண்ணத்தில் தோன்றும். இருள் சூழும்போதுதானே ஒளியைப்பற்றி, விளக்கைப்பற்றி நாம் எண்ணிப்பார்ப்போம். நடுப்பகலில் விளக்கைப்பற்றி நாம் சிந்திப்பது இல்லை.

  • உணவில் கலக்கப்படும் உப்பைப்போல, இருளில் ஏற்றப்படும் விளக்கு, தன்னையே விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. தன்னை வெளிச்சமிட்டு காட்டாமல்,  சுற்றியுள்ளவற்றை வெளிச்சத்திற்கு கொணர்வதே, விளக்கின் முக்கியப் பணி.
  • மெழுகுதிரியோ, அகல்விளக்கோ, மின்விளக்கோ, எவ்வடிவத்தில் விளக்கு இருந்தாலும், அது தன்னையே அழித்துக் கொள்ளும்போதுதான், வெளிச்சம் தரமுடியும். தன்னைக் கரைக்க மறுக்கும் உப்பு, சுவை தர முடியாததுபோல், தன்னை அழிக்கவோ, இழக்கவோ மறுக்கும் விளக்கு, ஒளி தரமுடியாது.
  • உலகிற்கு ஒளியாக இருப்பவர்களும் தங்களையே அழித்துக்கொள்ள முன்வரவேண்டும். தங்களை முன்னிலைப்படுத்தி, விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், தங்களைச்சுற்றி இருப்பவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
  • மரக்காலுக்குள் வைக்காமல், விளக்குத் தண்டின்மீது வைக்கப்படும் விளக்கே, வீட்டை ஒளிமயமாக்கும். அதேபோல், உலகிற்கு ஒளியாக இருக்கும் நாமும், நம்மைச் சுற்றியுள்ள இருள் எவ்வளவுதான் கருமையாக இருந்தாலும், அதை நீக்க முன்வரவேண்டும். இருளில் வாழும் பிறர் வாழ்வில் ஒளி சேர்ப்பதே நம் எண்ணம்.

உலகின் ஒளியாக நாம் எவ்வாறு வாழமுடியும் என்பதை, இறைவன், இன்றைய முதல் வாசகத்தில், நமக்கு ஆலோசனைகளாக தருகின்றார். அவர் தரும் ஆலோசனைகளுக்குப் பின்னணியாக, உண்மையான நோன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும், அவர், இன்றைய முதல் வாசகத்தில் கூறுகிறார். விரைவில் நாம் துவங்கவிருக்கும் தவக்காலத்தில், நோன்பு பற்றிய சிந்தனைகள் நமக்குள் எழும் இத்தருணத்தில், "ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது?" (எசாயா 58:5) என்ற கேள்வியை, இறைவன், நமக்கு முன் வைக்கிறார். இதைத் தொடர்ந்து, உண்மையான நோன்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் இறைவன் வரையறுப்பது, இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கிறது:

எசாயா 58:7

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு!

இத்தகைய நோன்பு, நம்மை, இவ்வுலகில், ஒளியாக வாழச்செய்யும் என்ற உண்மையை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்:

எசாயா 58: 8-10

அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும்... உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

உப்பாக, ஒளியாக வாழ்வதென்பது, தனக்குள் தானே நிறைவுகண்டு, தன்னிலேயே தங்கிவிடும் வாழ்வு அல்ல. குப்பியிலோ, கிண்ணத்திலோ வைக்கப்பட்டிருக்கும் உப்பு, அங்கேயே இருக்கும்வரை, பயன்தராது. அது எப்போது, குப்பியிலிருந்து வெளியேறி, உணவுடன் கலக்கிறதோ, அப்போதுதான், உப்பு, தான் உருவானதன் பயனை அடைகிறது. அதேபோல், மரக்காலுக்குள் வைக்கப்படாமல், விளக்குத் தண்டின் மீது வைக்கப்படும் விளக்கே, "வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளிதரும்" என்றும் இயேசு கூறியுள்ளார்.

சுயநல வட்டத்தைவிட்டு வெளியேறினால் மட்டுமே திருஅவை பயன்தர முடியும் என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரைகளில் அவ்வப்போது கூறி வருகிறார். கோவில்களில் அடைபட்டு, மூடப்பட்ட கதவுகளுக்குப்பின் பாதுகாப்பு உள்ளதென்று உணரும் திருஅவை பயனற்றது என்று, திருத்தந்தை தெளிவாகக் கூறியுள்ளார். உணவு தன்னைத் தேடி வரவேண்டும் என்று உப்பு காத்திருந்தால், பயன்தராது என்பதுபோல, மக்கள் தன்னைத் தேடிவரவேண்டும் என்று, அருள்பணியாளர்கள், 'சாமியார் பங்களா'க்களில் காத்திருப்பது பயனற்றது என்பதை, திருத்தந்தை, பலமுறை தன் உரைகளில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இன்றைய உலகில், தடுப்புச் சுவர்களை எழுப்பி, தங்கள் சமுதாயத்தைப் பாதுகாக்க, ஒரு சில தலைவர்கள் முற்படும் வேளையில், பாலங்கள் கட்டுவது ஒன்றே, திருஅவையின் தலையாயப் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறி வருகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பொறுப்பேற்ற 2013ம் ஆண்டு, Civiltà Cattolica என்ற இதழுக்கு வழங்கிய நேர்காணலில், "எவ்வகையான திருஅவையை நீங்கள் கனவு காண்கிறீர்கள்?" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, "போர்க்களத்தில் செயல்படும் ஒரு மருத்துவமனையைப் போல திருஅவையை நான் காண்கிறேன். அதிகமாக அடிபட்டு கிடக்கும் ஒருவரிடம், அவரது இரத்தக் கொழுப்பு (Cholesterol), இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு என்ன என்ற கேள்விகள் கேட்பது வீண். அவரது காயங்களை முதலில் குணமாக்கவேண்டும். பின்னர், ஏனையவை குறித்து நாம் பேசலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலிருந்து திருஅவை தன் பணிகளைத் துவக்கவேண்டும்" என்று தெளிவாகக் கூறினார்.

போர்க்களமாக மாறியிருக்கும் இன்றைய உலகில், திருஅவையின் உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொருவரும், காயப்பட்டிருக்கும் உலகை நலம்பெறச் செய்யும் உப்பாகவும், வெறுப்பென்ற இருளில் மூழ்கியிருப்போருக்கு நல்வழி காட்டும் ஒளியாகவும் திகழவேண்டும் என்று மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2020, 14:26