மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
மனித வாழ்வைப் பாதுகாப்பது, சமுதாய மற்றும், அரசியல் விவகாரத்தில் மற்ற எல்லாவற்றையும்விட முக்கியத்துவம் பெற வேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதாக, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
அத் லிமினா சந்திப்பையொட்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டு Iowa, Kansas, Missouri, Nebraska ஆகிய மாநிலங்களின் 15 ஆயர்களை, சனவரி 16, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடிய திருத்தந்தை, அந்நாட்டில் மனித வாழ்வை ஊக்குவிப்பதற்கு முயற்சிகள் எடுக்கும் குழுவினருக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார் என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் வாழ்வு பணிக்குழுத் தலைவர் பேராயர் Joseph F. Naumann அவர்கள் கூறினார்.
மனித வாழ்வைப் பாதுகாப்பது, சமயம் சார்ந்த முதல் விவகாரம் அல்ல, ஆனால் அது மிக அடிப்படையான உரிமை என்றும், அது மனித உரிமை விவகாரம் என்றும் திருத்தந்தை கூறினார் என, கான்சாஸ் பேராயரான Naumann அவர்கள் தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டில், சனவரி 21ம் தேதி முதல், 29ம் தேதி வரை மனித வாழ்வைப் பாதுகாப்பதற்கு இறைவேண்டல் செய்யும் நாள்களாக கடைப்பிடிக்கப்படுகின்றது. (CNS)