தேடுதல்

அமைதிக்காக விளக்கேற்றி செபம் அமைதிக்காக விளக்கேற்றி செபம் 

சிலுவையின் முன், திரிசூலத்தை நட்ட மதத் தீவிரவாதிகள்

கிறிஸ்தவர்கள் அளித்த புகார் மனுவை ஏற்று, அரசு அதிகாரிகள், திரிசூலத்தை அகற்றியதைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள், பாஞ்சாலி மேட்டில் நிறுவப்பட்டிருந்த சிலுவையை அகற்றியுள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலி மேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு குன்றில் பல ஆண்டுகளாய் நிறுவப்பட்டிருந்த ஒரு சிலுவையின் முன், மதத் தீவிரவாதிகள் சிலர், திரிசூலம் ஒன்றை நாட்டியதற்கு, கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார், இந்தியக் கிறிஸ்தவர்களின் உலக அவைத்தலைவர், சஜன் ஜார்ஜ்.

1954ம் ஆண்டு நிறுவப்பட்ட அச்சிலுவை, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள, அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத் என்ற அமைப்பு, திரிசூலத்தை அச்சிலுவைக்கு முன் நட்டுவைத்து, தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

1963ம் ஆண்டு பாஞ்சாலி மேடு குன்றை நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ், அரசு, இரு குடும்பங்களிடமிருந்து கைப்பற்றுமுன்னரே, அதாவது, 1954ம் ஆண்டிலேயே, அக்குன்றின் மேல் சிலுவை நாட்டப்பட்டது என்று, அப்பகுதியில் பணிபுரியும், புனித மரியா பங்குத்தளத்தின் அருள்பணியாளர் ஜேம்ஸ் அவர்கள் கூறினார்.

மேலும், இக்குன்றில் நடப்பட்டுள்ள சிலுவையை மையமாக்கி, ஒவ்வோர் ஆண்டும், கத்தோலிக்கர்கள் சிலுவைப்பாதை பக்தி முயற்சியை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் அருள்பணி ஜேம்ஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

கேரளாவில், மதங்களுக்கிடையே பகைமை உணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இத்தகைய முயற்சிகளை இந்து தீவிரவாதிகள் மேற்கொள்கின்றனர் என்று சஜன் ஜார்ஜ் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் அளித்த புகார் மனுவை ஏற்று, அரசு அதிகாரிகள், திரிசூலத்தை அகற்றியதைத் தொடர்ந்து, இணக்க வாழ்வுக்கு உதவும் நோக்கத்தில், கிறிஸ்தவர்கள் அங்கு நிறுவப்பட்டிருந்த சிலுவையையும் அகற்றியுள்ளனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2019, 16:11