பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதியின் கருவிகளாக செயல்பட..
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
இருள் ஆட்சி செய்யும் உலகில், அமைதி மற்றும் நம்பிக்கையின் ஒளி, மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படுகின்றது என்று, பாகிஸ்தான் பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள் கூறினார்.
இவ்வாறு தனது கிறிஸ்மஸ் செய்தியில் கூறியுள்ள, பாகிஸ்தானின், இஸ்லாமபாத்-ராவல்பிண்டி பேராயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், பாகிஸ்தானிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும், குண்டுவீச்சுகளும், தாக்குதல்களும், கடத்தல்களும் இடம்பெற்றுவரும்வேளை, நம் தவறுகளை மன்னிக்கும் கடவுளில் நம்பிக்கையும், அமைதியும் நமக்கு மிகவும் தேவைப்படுகின்றன என்று கூறினார்.
கடவுள், தம் மகன் இயேசுவை கொடையாக அளித்த நிகழ்வை, கிறிஸ்மஸ் பெருவிழாவில் கொண்டாடும் கிறிஸ்தவர்கள், இயேசு எனும் இந்த நற்செய்தியை உலகிற்கு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார், பேராயர் ஜோசப் அர்ஷத்.
இயேசுவின் அமைதியை, பரிசாகப் பெற்றுள்ளதால், அந்த அவரின் அமைதியை, கடவுளின் கொடையாக, நாம் பிறருக்கு வழங்க வேண்டும் எனவும் கூறிய, பேராயர் அர்ஷத் அவர்கள், பாகிஸ்தானிலும், வேறு இடங்களிலும், அன்பு, அமைதி, மற்றும் நம்பிக்கையின் தூதுவர்களாகச் செயல்படுமாறு, கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார். (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்