கருக்கலைத்தல் சட்டம் குறித்து அயர்லாந்து ஆயர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
அயர்லாந்தில், கருக்கலைத்தலை அனுமதிக்கும் சட்டம், இன்னும் சில மாதங்களில் நிறைவேற்றப்படவிருக்கும் சூழலில், அது குறித்து, மருத்துவத் துறையில் பணியாற்றுவோருக்கு, சில வழிகாட்டுதல்களை, அந்நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.
கரு உருவான 12 வாரங்களுக்குள், மருந்துகள் வழியே அதைக் கலைப்பதற்கு அனுமதி வழங்கும் இப்புதிய சட்டப்பிரிந்துரை, மருந்து விற்பனையாளர்கள், இம்மருந்தை விற்க மறுப்பதற்கு தேவைப்படும் உரிமையை வழங்கவில்லை என்பதை, அயர்லாந்து ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தங்கள் மனச் சான்றுக்குக் கீழ்ப்படிந்து, கருக்கலைத்தல் சிகிச்சையை செய்ய மறுக்கும் உரிமை, மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும், அம்மருத்துவர்கள், கருக்கலைத்தல் சிகிச்சையை செய்யக்கூடிய மற்றொரு மருத்துவரை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளதென்று சட்டம் வலியுறுத்துவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
வளரும் உயிரைப் பறிப்பதற்கு தங்கள் மனச்சான்று இடம்கொடுக்காதச் சூழலில், மற்றொரு மருத்துவரை அடையாளம் காட்டி, உயிரைப் பறிக்க உதவுவது, எவ்வகையில் நியாயம் என்று, அயர்லாந்து ஆயர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கருவில் வளரும் உயிரைக் கொல்வதற்கு மறுக்கும் மருத்துவப் பணியாளர்கள், சட்டரீதியாக தண்டிக்கப்பட மாட்டார்கள், பாகுபாட்டுடன் நடத்தப்பட மாட்டார்கள் என்ற உறுதியையும், அயலர்லாந்து அரசு வழங்கவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்