தேர்தல் முடிவுகளை கிறிஸ்தவர்கள் புறக்கணிப்பு
மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்
பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய தேர்தல் குழுவைப் பாராட்டியுள்ள அதேநேரம், இத்தேர்தலில் சில முறைகேடுகளும் இடம்பெற்றுள்ளன மற்றும் வாக்குச்சாவடிகளிலிருந்து சில கட்சிகளின் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று, அந்நாட்டின் ஹைதராபாத் ஆயர் Samson Shukardin அவர்கள் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் இடம்பெற்றுள்ள சில நிகழ்வுகளை நோக்குகையில் நாம் இருளில் இருக்கின்றோம் என்ற உணர்வு ஏற்படுகின்றது எனவும், ஆயர் Shukardin அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், இது போலியான தேர்தல் என்று, பாகிஸ்தானின் பல்வேறு கிறிஸ்தவ மனித உரிமைப் பணியாளர்கள் தங்களின் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் வரலாற்றில், 2018ம் ஆண்டின் தேர்தல், மிக மோசமாக நடைபெற்ற தேர்தல் என, அந்நாட்டின் தொழிற்சங்கங்கள் குறை கூறியுள்ளன.
இதற்கிடையே, பாகிஸ்தானில், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன எனவும், அதனால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும், அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன என செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்