நாட்டின் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்ட சூடான் சிறார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
சூடானின் கார்ட்டூம் மிகோமா ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து 297 சிறார் மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும், நம்ப முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்ட குழந்தைகளை இடமாற்றம் செய்வது சூடான் மோதல்களை பிரதிபலிக்கின்றது என்றும் கூறியுள்ளார் சூடானுக்கான யூனிசெஃப் இயக்குனர் Mandeep O'Brien,
சூடான் முழுவதும் பல இலட்சம் சிறார் ஆபத்தில் உள்ளனர் என்று கூறிய Mandeep, சண்டை, இடப்பெயர்வு, உயிர்காக்கும் சேவைகளை வழங்குவதில் ஏற்படும் தடைகள் போன்றவற்றால் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும், இந்த மோதலால் அவர்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளன என்றும் எடுத்துரைத்துள்ளார்.
குழந்தைகள், சமூக நலம் மற்றும் நலவாழ்வுத் துறைகளின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படும் வேளையில் சிறாருக்கான மருத்துவப் பராமரிப்பு, ஊட்டச்சத்து, உளவியல் ஆதரவு, பொழுதுபோக்கு, கல்வி ஆகியவற்றை யுனிசெஃப் வழங்கி வருகின்றது என்றும் எடுத்துரைத்தார் Mandeep.
சூடான் முழுவதும், 1,36,00,000க்கும் அதிகமான சிறார், உயிர்காக்கும் மனிதாபிமான உதவிகள் அவசரமாகத் தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்றும், தற்போதைய வன்முறையின் தாக்கம், குடும்பங்கள், சிறார் போன்றோரையும் அவர்களது வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை அச்சுறுத்துகிறது என்றும் கூறியுள்ளார் Mandeep.
அடிப்படைச் சேவைகள் சீர்குலைக்கப்பட்டு, நலவாழ்வு வசதிகள் சேதமடைந்து அழிக்கப்பட்டு வரும் நிலையில் UNICEF உலக நாடுகளின் உதவியை நாடி வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் Mandeep.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்