பிரேசில் நாட்டில் பன்முக உ.யிரினங்களைப் பாதுகாக்கும் பூங்கா பிரேசில் நாட்டில் பன்முக உ.யிரினங்களைப் பாதுகாக்கும் பூங்கா 

சமுதாயம் இயற்கை மீது போர் தொடுத்துக்கொண்ருக்கிறது

கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி, இயற்கை, மற்றும், பல்லுயிர்களுக்கு நாம் இழைக்கும் தவறுகளைத் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு - ஐ.நா. பொதுச் செயலர் கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மனித சமுதாயம், இப்பூமிக்கோளத்தோடு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளாவிடில், அதன் இழப்பை நாம் ஒவ்வொருவருமே சந்திக்க வேண்டியிருக்கும் என்று, ஐக்கிய நாடுகளின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மே 22, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, உலக பல்லுயிர் நாள் பற்றி தன் கருத்துக்களைக் கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், மனித சமுதாயம் இயற்கை மீது போர் தொடுத்துக்கொண்ருக்கிறது, அது, பல்லுயிர்கள் அழிவு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசடைதல் ஆகியவற்றுக்கு காரணமாகியுள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த உலக நாளையொட்டி மே 21, இவ்வெள்ளியன்று நடைபெற்ற மெய்நிகர் கூட்டத்தில் வெளியிட்ட செய்தியில், நாம் அனைவரும் இயற்கையை பராமரிப்பவர்களாக, அதற்கு ஆதரவாகச் செயல்படுகின்றவர்களாக வாழவேண்டும் என, கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இயற்கை, வாழ்வைப் பேணி வளர்க்கிறது, மற்றும், வாய்ப்புக்களை, வேலைவாய்ப்புகளை, மற்றும், தீர்வுகளை வழங்குகின்றது, ஆனால் தற்போது அது, முன்னெப்போதும் இல்லாத மற்றும், அதிர்ச்சியளிக்கும் முறையில் அழிந்துவருகின்றது என்றும், பல்லுயிர்களைக் காப்பது குறித்து, உலக அளவில் இடம்பெற்ற ஒப்பந்தங்கள் காக்கப்படுமாறும், கூட்டேரஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

இயற்கை நமக்கு திரும்பத் தருவதைவிட, மிக வேகமாக, அந்த இயற்கை வளங்களை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம் என்றும், கோவிட்-19 பெருந்தொற்று, மக்களுக்கும், இயற்கைக்கும் இடையேயுள்ள ஆழமான உறவைச் சுட்டிக்காட்டியுள்ளது என்றும், கூட்டேரஸ் அவர்கள் உரைத்துள்ளார்.

நிலத்தைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள மாற்றம், மற்றும், வனவிலங்குகளை வேட்டையாடுதல் ஆகியவை, எபோலா, கோவிட்-19 போன்ற தொற்று நோய்கள் உருவாவதற்கு முதன்மைக் காரணம் என்றும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மனிதரைத் தொற்றியுள்ள, புதிய மற்றும், ஏற்கனவே உள்ள நோய்களுள் நான்கில் மூன்று பகுதி, விலங்குகளிடமிருந்து அவர்களைத் தொற்றுகின்றன என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி, இயற்கை மற்றும், பல்லுயிர்களுக்கு நாம் இழைக்கும் தவறுகளைத் திருத்திக்கொள்ள, ஒரு வாய்ப்பு என்று அறிவுறுத்தியுள்ளார். 

பத்து இலட்சம் உயிரின வகைகள் அழிவின் ஆபத்தை எதிர்கொள்கின்றன, நம் கண்களுக்கு முன்னே சூழலியல் அமைப்புகள் மறைந்து வருகின்றன, பாலைநிலங்கள் விரிவடைகின்றன, சதுப்பு நிலங்கள் இழக்கப்பட்டு வருகின்றன, ஒவ்வோர் ஆண்டும், ஒரு கோடி ஹெக்டேர் பரப்பளவுள்ள காடுகள் அழிந்து வருகின்றன, பெருங்கடல்களில் மீன்கள் மிதமிஞ்சி பிடிக்கப்படுகின்றன, குப்பைக்குள் நெகிழிப் பொருள்கள், கார்பன் டை ஆக்சடை உறிஞ்சி, கடல்களை அமிலத்தன்மை உள்ளதாக ஆக்குகின்றன என்றும், கூட்டேரஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2021, 16:06