புத்த மத துறவிகள் புத்த மத துறவிகள் 

விதையாகும் கதைகள் : விழிப்புணர்வு பெறுவது

உங்களை அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால், பல நூறு ஓட்டைகள் கொண்ட ஒரு சல்லடையில், நீரை நிரப்புவது போன்றதாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

புகழ் பெற்ற குரு ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது சீடர்களின் தலைவரான மூத்த சீடர் குருவிடம்,

"குருவே! நாங்கள் விழிப்புணர்வு பெறுவது எப்படி?'' என்று கேட்டார்.

"உங்களை அறிவால் நிரப்பிக்கொள்ளுங்கள்!'' என்றார் குரு.

"அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் எப்படி குருவே? புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!'' என்றார் சீடர்.

"உங்களை அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் பல நூறு ஓட்டைகள் கொண்ட ஒரு சல்லடையில், நீரை நிரப்புவது போன்றதாகும்!'' என்றார் அவர்.

"சல்லடையில் நீரை நிரப்புவதா? அதெப்படி முடியும் குருவே?'' என்றார் சீடர்.

"முயன்று பாருங்கள் முடிகிறதா? இல்லையா? என்பதை நாளை என்னிடம் சொல்லுங்கள்!'' என்றார் குரு.

சீடர்கள் ஒன்றுகூடி சல்லடையில் நீரை எப்படி நிரப்புவது என்பது பற்றி கலந்து பேசத் தொடங்கினர். ஒரு பெரிய சல்லடை கொண்டு வரப்பட்டது. ஒரு சீடர் அதில் நீரை ஊற்றினார். நீர் சல்லடை ஓட்டைகளின் வழியே வெளியேறியது. மறுபடியும் யோசித்தனர்.

சல்லடையில் ஐஸ்கட்டியை நிரப்பலாம் என்ற யோசனை பிறந்து, ஐஸ்கட்டியும் நிரப்பப்பட்டது. சிறிது நேரத்தில், ஐஸ்கட்டி உருகி, ஓட்டைகள் வழியே நீராக ஓடிவிட்டது. சீடர்கள் சோர்ந்து போயினர்.

மறுநாள் குருவின் முன்னே தலை கவிழ்ந்து நின்றனர்.

"சல்லடையை எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு நடந்தார் குரு. சீடர்கள் அவர் பின்னே ஓடினர். ஆசிரமத் தோட்டத்தில் சீடர்கள் குளிக்கும் பெரிய நீர்த்தொட்டியில் போட்டார். சல்லடை நீருக்குள் மூழ்கியது.

"இப்போது சல்லடையில் நீர் நிரம்பியிருக்கிறது அல்லவா?'' என்று கேட்ட குரு

சொன்னார், "விழிப்புணர்வு பெறுவது எப்படி என்று கேட்டீர்கள். அதைப் பெற அறிவு எனும் கடலில் உங்களைத் தூக்கிப் போடுங்கள். அறிவு உங்களைவிட்டு விலகி ஓடிவிடாது!'' என்று.

சீடர்களுக்குத் தெளிவு பிறந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2020, 15:30