இயற்கையில் இறைவன் குடியிருக்கிறார் இயற்கையில் இறைவன் குடியிருக்கிறார் 

விதையாகும் கதைகள் - நாம் விரும்பிய வடிவில் கடவுள் வருவதில்லை

நம்மைச் சுற்றி, நம் அருகிலேயே இருக்கும் இறைவனை, எங்கெங்கோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அறுபது வயது நிரம்பிய ஒருவர், ஞானி ஒருவரை அணுகி, 'இறைவன் என் குரலுக்கு இதுவரை செவிமடுத்ததே இல்லை' என்றார்.

 'ஏன் அப்படி சொல்கிறாய்' என்று கேட்டார் ஞானி.

அந்த மனிதர் சொன்னார், 'நான் சிறுவனாக இருந்தபோது, கடவுளே, என்னோடு பேசமாட்டாயா என்று, பலமுறை வேண்டினேன். பதிலில்லை. இளைஞனாக இருந்தபோது, உன்னை எனக்கு வெளிப்படுத்தமாட்டாயா எனக் கேட்டேன், அதற்கும் பதிலில்லை.  முதிர்ச்சி அடைந்து வரும் காலத்தில், இறைவா, எனக்கொரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டு என நெஞ்சுருக வேண்டினேன், அதற்கும் பதிலில்லை. இறைவன் உண்மையிலேயே இருக்கின்றாரா என்ற சந்தேகம் வந்துவிட்டது' என்று.

ஞானி அவரிடம், 'குயில் கூவுவதை இரசித்திருக்கின்றாயா?, வானில் மின்னலுடன் இடி இடிக்கும்போது அதன் பிரமாண்டம் குறித்து எண்ணிப் பார்த்திருக்கின்றாயா?, உன் குழந்தைகள், மற்றும், பேரக்குழந்தைகளின் புன்சிரிப்பில் உன் அமைதியைக் கண்டிருக்கிறாயா? வண்ணத்துப்பூச்சியின் அழகில் மயங்கியிருக்கிறாயா? இதற்கு மேல் இறைவன் தன்னை எப்படி வெளிப்படுத்த முடியும்? இதற்கு மேல் என்ன அதிசயத்தை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறாய்? கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விடயங்களில் இருக்கிறார். கடவுள் நீ எதிர்பார்க்கும் வடிவில் வரமாட்டார். அவர் தன்னை வெளிப்படுத்தியுள்ளதை நாம்தான் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று சொல்லி முடித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 December 2020, 15:07