இத்தாலியில் நலவாழ்வு பரிசோதனை இத்தாலியில் நலவாழ்வு பரிசோதனை 

விதையாகும் கதைகள்: குறிக்கோளில் கவனம்

குறிக்கோளைத் தெரிவுசெய்தபின், அதை அடைவதற்கான முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அரசர் ஒருவர் ஒருமுறை தன் நாட்டு மக்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, அவர்களுடைய கவலைகளையும், பிரச்சனைகளையும் நீக்க வேண்டுமென ஆசைப்பட்டார்.  அதற்காக, தான் பொது இடமொன்றில் அமரப்போவதாகவும், அங்கு தன்னை  யார் வேண்டுமானாலும் சந்தித்து தங்களுடைய பிரச்சனைகளைச் சொல்லலாம் எனவும் அரசர் அறிவித்தார். அரசரும், ஒரு மரத்தடியைத் தேர்ந்தெடுத்து, அந்த இடத்தைச் சுற்றிலும் நிறைய  குடில்கள் அமைத்து, அவற்றில் உண்பண்டங்களில் துவங்கி, நகைகள், அலங்காரப் பொருட்கள் என அனைத்தையும் வைத்தார். அரசரும், தோட்டக்காரர் வேடத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே அக்குடில்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அரசரைக் காணவந்த ஊர் மக்கள், அனைத்துப் பொருள்களும் இலவசம் என்ற பலகையைப் பார்த்ததும், தாங்கள் வந்த நோக்கத்தை மறந்து, தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு மகிழ்வோடு வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் இளைஞன் ஒருவன் மட்டும் தோட்டக்காரன் வேடத்தில் இருந்த அரசரிடம் சென்றான். அரசர் அவனைப் பார்த்து, "இங்கு இருக்கும் இலவசப் பொருள்களில் நீ எதையும் எடுத்துக் கொள்ளவில்லையா?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், " என்னுடைய நோக்கம் பொருள்களை எடுப்பது அல்ல, மாறாக, அரசரைக் காண்பது, அரசர் எங்கே" என்றான். அந்த இளைஞனின் பேச்சையும் செயலையும் கண்டு வியந்த அரசர், நான்தான் உங்கள் அரசர், நான் இங்கு வந்த நோக்கத்தை அடைந்துவிட்டேன். கொள்கையிலும் நோக்கத்திலும் உறுதியாக இருப்பவனே எனக்குத் தேவை. நீதான் என்னுடைய அரசவையின் மூத்த அமைச்சர்" என்று சொல்லி, அவனை கட்டித் தழுவினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2020, 14:32