தன் முன்னோர்களுக்காக செபிக்கும் இந்து நண்பர் தன் முன்னோர்களுக்காக செபிக்கும் இந்து நண்பர்  

விதையாகும் கதைகள் : இழந்ததைத் திருப்பிக் கொடு இறைவா!

இழப்பின் மறுபக்கம் என்ன கிடைத்தது என்பதையும், வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பின் மறுபக்கம் பெரும் பயனாகவே அமைந்திருக்கிறது என்பதையும் உணர்ந்த மனிதன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

நன்றாக வாழ்ந்த ஒருவர், வயதான காலத்தில், தனது வறுமையைப் போக்க, தான் இழந்த பொருட்களையெல்லாம் திரும்பத் தரவேண்டுமென இறைவனிடம் முறையிட்டார்.

“இறைவா, என் வேண்டுதலை ஏற்று, நான் இழந்ததையெல்லாம் எனக்குத் திரும்பக்கொடு” என்று சொல்லி வேண்டினார். அவரது வேண்டுதலைக் கேட்டு இரங்கிய இறைவன், அவரிடம், “பக்தனே, நீ இழந்தவை எவை?” என்று கேட்டார்.

“நான் பலவும் இழந்திருக்கிறேன். கால மாற்றத்தில் என் இளமையை இழந்தேன், என் அழகை இழந்தேன், வயதாக ஆக, உடல் நலத்தை இழந்தேன். இப்படியே நான் இழந்தது ஏராளமாக இருக்கின்றன” என்று சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் அவர், “நான் எதையெல்லாம் இழந்தேனோ, அதையெல்லாம் மீண்டும் தா” என்று இறைவனிடம் கேட்டார்.

அதைக் கேட்டுச் சிரித்த இறைவன், “பக்தனே, நீ கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய். உழைப்பின் பயனால் வறுமையை இழந்தாய். உறவுகள் கிடைத்ததால் தனிமையை இழந்தாய். நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய். இதைப்போன்று இன்னும் பல இருக்கின்றன. நீ இழந்த இவற்றையெல்லாம் திரும்பத் தரட்டுமா?” என்று கேட்டார்.

அப்போதுதான் அவர், இழப்பின் மறுபக்கம் என்ன கிடைத்தது என்பதையும், வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பின் மறுபக்கம் பெரும் பயனாகவே அமைந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2020, 12:53