புத்தர் திருவுருவ சிலை புத்தர் திருவுருவ சிலை 

விதையாகும் கதைகள் : மனம் கவலைப்படுகிறதா?

மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்யவேண்டாம். அதை அப்படியே விட்டுவிட்டால், அதுவாகவே அமைதியாகிவிடும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணத்திலிருந்தார். ஓர் ஏரியை அடைந்தபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.

புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டுவரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார்.

ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி, பார்ப்பதற்கே பயனற்றதாகக் காட்சியளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படி குருவிற்கு கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார் சீடர். அத்துடன், தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.

நீர்நிலையருகே சென்று சீடர் பார்த்தார். இப்போது நீர் தெளிந்திருந்தது. சகதி, நீரின் அடியிற்சென்று படிந்திருந்தது. பானையில் தண்ணீரை முகர்ந்துகொண்டு, சீடர் புத்தரிடம் திரும்பினார். புத்தர் தண்ணீரைப் பார்த்தார், சீடரையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் கேட்டார், 'தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?' என்று.

'நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று' என்றார் சீடர்.

'நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது, இல்லையா? நம் மனமும் அப்படிப்பட்டதுதான். மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்யவேண்டாம். அதை அப்படியே விட்டுவிடவேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்கவேண்டும்.

அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்யவேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும். அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்' என விளக்கமளித்தார் புத்தர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2020, 10:40