மனிதகுல நெருக்கடிகள் மனிதகுல நெருக்கடிகள் 

சுற்றுச் சூழல் அழிவால், போரால் பாதிக்கப்பட உள்ளோர் 120 கோடி

சுற்றுச்சூழல் சீர்கேடு, மற்றும், போர்களால் 2019ம் ஆண்டிலேயே 3 கோடி மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக மாறியிருந்தனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

இன்னும் 30 ஆண்டுகளில், உலகில் இயற்கை பேரிடர்களாலும், போதிய வளங்களின்மையாலும், ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் உயர்ந்திருக்கும் என, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மக்கள்தொகை அதிகரிப்பு, உணவு, மற்றும், தண்ணீர் பற்றாக்குறை, போன்றவைகளுடன், இயற்கைப்பேரிடர்களும் இணைந்துள்ளதால், குறைந்த அளவு, 120 கோடி மக்கள் 2050ம் ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பர் எனக் கூறும் IEP எனும் பொருளாதார, மற்றும், அமைதி அமைப்பின் ஆய்வறிக்கை, மத்திய ஆசியா, மற்றும், மத்திய கிழக்கு நாடுகள், அதிக அளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக்களையும் தெரிவித்துள்ளது.

2050ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை தொட்டிருக்கும் நிலையில், இயற்கை வளங்களைப் பெறுவதற்கானப் போராட்டங்கள் அதிகரித்திருக்கும் எனக் கூறும் இவ்வமைப்பு, சுற்றுச்சூழல் சீர்கேடு, மற்றும், போர்களால் 2019ம் ஆண்டிலேயே 3 கோடிபேர் புலம்பெயர்ந்தவர்களாக மாறியிருக்க, இன்னும் முப்பது ஆண்டுகளில் 120 கோடி பேர் வரை இடர்பாடு நிறைந்த இடங்களில் வாழவேண்டியிருக்கும் என தெரிவிக்கிறது.

பல நாடுகள், குறிப்பாக, இந்தியாவும், சீனாவும் நீர் பற்றாக்குறையை சந்திக்க உள்ளன எனக்கூறும் இவ்வறிக்கை, பாகிஸ்தான், ஈரான், மொசாம்பிக், கென்யா, மடகாஸ்கர் ஆகியவை, நச்சுச் சேர்க்கைகளால் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக கூறுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைகளோடு ஒப்பிடும்போது, தற்போது இவ்வுலகம் 60 விழுக்காட்டு நீர் வளத்தை இழந்துள்ளது எனவும், அடுத்த 30 ஆண்டுகளில் இவ்வுலகின் உணவு தேவை, 50 விழுக்காடு அதிகரிக்கும் எனவும் IEPயின் 90 பக்க அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. (AsiaNews)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2020, 13:10