முகக் கவசம் குறித்த விழிப்புணர்வை வழங்கும் மல்யுத்த வீரர் முகக் கவசம் குறித்த விழிப்புணர்வை வழங்கும் மல்யுத்த வீரர்  

விதையாகும் கதைகள் : வார்த்தைகளால் சக்தியிழக்க வேண்டாம்!

பலருடைய வாழ்வில் தாங்கள் பலகீனப்பட்டு விட்டோமோ என்கிற எண்ணமே அவர்களை வீழ்த்தி விடுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை!

நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10 இலட்சம் பரிசு கொடுப்பதாக அறிவித்தார்கள்.

10 இலட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஓர் இளைஞனின் காதிலும் விழுந்தது. இந்த நிலையில் அந்த இளைஞன், தான் போட்டியிட முன்வந்தான். இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விடயங்களைக் கூறினான்.  அதில் ஒருவன், வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும் மகிழ்வுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று, "என்னய்யா ஆச்சு உங்களுக்கு? பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. கல்லு மாதிரி இருந்தீங்களே! உடம்பைப் பாத்துக்குங்க" என்று சொல்லிக் கிளம்பினான்.

"எனக்கு மூச்சு வாங்குதா? நான் நல்லாதானே பேசுறேன்?" அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.

"ஐயா, போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர இரசிகன். இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. அதுல சந்தேகமே இல்லை. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும், வலிமையும் இப்ப இல்லையே? உடம்பு சரியில்லையா?" என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

இப்போது அவருக்கு சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கும் நேரம் வந்தது. பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப்படுத்தினர். அவர் மேடையேறப் போகும்போது எதிராளியான இளைஞனின் மற்றொரு நண்பன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.

"என்னய்யா, எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே, என்னாச்சு உங்களுக்கு?" என்று கேட்டுவிட்டு விடைபெற்றான். அவ்வளவுதான். வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.

போட்டி துவங்கியது. அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும், வீரத்தையும் பாராட்டினார்கள். அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2020, 14:09