பூமியில் புதுமை : ஆளுக்கொரு மரம், நாளுக்கொரு வரம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
அன்று, போர்க் காலத்தில்தான் பெரும்பாலும் பசுமை அழிவு நடக்கும். ஆனால் இன்றோ, தொடர்ந்து நடைபெறுகிறது. மரங்கள் வெட்டப்படுவதும், குளங்கள் மண்ணால் நிரப்பப்படுவதும், வயல்வெளிகள் சாலைகள் ஆவதும் என, குடியிருப்புகள் பெருகி வருகின்றன. பசுமை நிறம் மாறி சிமென்ட் நிறமே எங்கும் கோலோச்சுகின்றது. சிட்டுக்குருவி போன்ற பல சிறிய பறவையினங்கள் முற்றிலுமாக காணாமல் போயுள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இயற்கையை நேசிக்கின்ற, இயற்கையோடு ஒன்றி வாழ்கின்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கவேண்டிய ஒரு பெரிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை உணர்கின்றோம். இயற்கையை நேசிக்கும் ஒரு சமூகம் உருவாகவேண்டும் என்பது கட்டாயமாகிறது.
பசுமையான ஒரு சுற்றுப்புறச் சூழலை நமது வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்ல வேண்டும், என்ற தார்மீகக் கடமையை உணர்வோர் ஒவ்வொருவரும், இணைந்து செயலாற்றவேண்டிய தேவை உள்ளது. இவ்வுலகை முந்தைய காலத்தைப்போல் பச்சை நிறமாக்குவோம். அதற்கு முதலில், மரங்களை நடும் மனங்களை வளர்ப்போம். ‘மரங்கள் – சுற்றுச் சூழலின் பாதுகாவலர்கள்’ என்ற கருத்தை விதைப்போம். ‘ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்’. உலக அமைதிக்காக நொபெல் விருது பெற்ற கென்யாவைச் சேர்ந்த வங்காரி மாதாய் என்பவர், ’ஒவ்வொரு மரம் நடப்படும்போதும், அமைதிக்கான விதை ஊன்றப்படுகின்றது’ என்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்