பூமியில் புதுமை : அன்று அணைக்கட்டு, இன்றோ பணக்கட்டு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஐந்தறிவு உள்ள எறும்புகூட வெயில் காலங்களில் உணவைத் தேடி சேமித்து, பூமிக்கு அடியில் வைத்து அதை மழைக் காலங்களில் பயன்படுத்திகொள்ளும். ஆனால், ஆறறிவு உள்ள மனிதருக்கோ, பருவ காலங்களில் பெய்யும் மழைநீரை, கண்மாய், குளம், ஏரி, அணைக்கட்டு போன்ற அமைப்புகளால் தேக்கி வைக்கத் தெரியவில்லை.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள், பொதுநலப் (தொலை) பார்வையோடு பல அணைக்கட்டுகளை அமைத்தார். இன்றுள்ள அரசியல்வாதிகள் பணக்கட்டுகளைச் சேமிக்கின்றனர்.
நீர் மட்டம் குறைந்தால் வெப்பம் அதிகரிக்கும். இதனால் புதிய நோய்கள் மனிதரைத் தாக்கும். கொசு உற்பத்தி அதிகமாகும். இதனால் மலேரியா, காலரா போன்ற, இன்னும் பெயர் தெரியாத புதிய நோய்கள் பரவும். இதனால் மனிதருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். மழைநீரைச் சேமிக்க, ஊக்குவிக்காத அரசியல்வாதிகள், கடல்நீரை குடி நீராக்குவோம் என வாதிடுகின்றனர். கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்திற்குச் செலவாகும் பணத்தை கண்மாய், குளம், ஏரி போன்றவற்றை ஆழப்படுத்தவும், புதிய அணைகள் கட்டவும் பயன்படுத்தினால் நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது.
ஒராண்டிற்குள் தமிழகக் கண்மாய்கள், குளம் மற்றும், ஏரிகளை ஆழப்படுத்த திட்டமிட்டு செய்யவேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட பொதுமக்களும் உதவவேண்டும். எல்லாரும் ஒற்றுமையாய் சேர்ந்து செயல்பட்டால், வெற்றிதான். இத்தகைய திட்டங்களை ஆற்ற கர்மவீரர் போன்ற தலைவர்கள் வரமாட்டார்களா? என மக்கள் ஏங்குகிறார்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்