இந்தோனேசியாவில் இரமதான் மாதத்தில் இந்தோனேசியாவில் இரமதான் மாதத்தில் 

ஏழைகளின் திருத்தந்தைக்கு விழா சமர்ப்பணம்

மக்களின் உரிமைகளுக்காக திருத்தந்தை ஆற்றிவரும் பணிகளை முன்னிட்டு அவரை கௌரவப்படுத்த விரும்புவதாக இத்தாலியிலுள்ள இஸ்லாமிய அமைப்பு தெரிவிக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 3, இச்செவ்வாயன்று, இஸ்லாமிய உலகில் சிறப்பிக்கப்படவிருக்கும் Eid Al-Fitr விழாவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சமர்ப்பிப்பதாக இத்தாலியிலுள்ள அரபு சமூகங்களின் அமைப்பு அறிவித்துள்ளது.

இரமதான் நோன்பு மாதத்தின் இறுதியில் சிறப்பிக்கப்படும் Eid Al-Fitr விழாவை முன்னிட்டு, இத்தாலியின் அரபு சமூகங்களின் அமைப்பு, பல்சமய அனைத்துலக பொதுநிலை கூட்டமைப்பு, இத்தாலியிலுள்ள வெளிநாட்டு மருத்துவ கழகங்கள் ஆகியவை இணைந்து இத்தாலிவாழ் இஸ்லாமியருக்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளதுடன், இப்பெருவிழாவை திருத்தந்தைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வலுவிழந்தோர், குடியேற்றதாரர், ஆகியோருக்காகவும், கலாச்சாரங்கள் மற்றும், மதங்களிடையே கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதற்காகவும், மனிதாபிமானம் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வுடன், மக்களின் உரிமைகளுக்காகவும் திருத்தந்தை ஆற்றிவரும் பணிகளை முன்னிட்டு அவரை கௌரவப்படுத்த விரும்புவதாக இத்தாலியிலுள்ள இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள் வெளியிடுள்ள Eid Al-Fitr வாழ்த்துச் செய்தியில், ஒருவர் மற்றவரை மனவுறுதியுடன் மன்னிப்பது, மற்றும், மோதல்களை நிறுத்துவதன் வழியாக, ஈராக் நாட்டிற்கு அவசரமாக தேவைப்படும் ஒப்புரவின்மீது நம் அர்ப்பணத்தை வெளியிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2019, 16:38