'Amoris Laetitia'வின் 'கனிகள் நிறைந்த அன்பு' – காணொளி வெளியீடு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையும் இணைந்து, 'கனிகள் நிறைந்த அன்பு' என்ற தலைப்பில், காணொளி தொகுப்பை, ஆகஸ்ட் 25, இப்புதனன்று வெளியிட்டது.

'Amoris Laetitia', அதாவது, 'அன்பின் மகிழ்வு' என்ற தலைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு வெளியிட்ட திருத்தூது அறிவுரை மடலின் 5ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டு வருவதையொட்டி, இவ்விரு திருப்பீட அவைகளும் இணைந்து வெளியிடத் திட்டமிட்டுள்ள 10 காணொளித் தொகுப்புகளில், ஆறாவது தொகுப்பு, இப்புதனன்று வெளியானது.

தம்பதியரிடையே உருவாகும் அன்பு, அவ்விருவருக்குள் மட்டும் தங்கிவிடாமல், அவ்வன்பு, குழந்தைகள் என்ற கனிகளில் வெளிப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 5ம் பிரிவில் கூறியுள்ள கருத்துக்கள், இக்காணொளியில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

திருத்தந்தை கூறும் கருத்துக்களுக்கு நடைமுறை வடிவம் கொடுக்கும்வண்ணம், இத்தாலியின் வெனிஸ் நகரில் பிறந்து, தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும்  என்ரிகோ மற்றும் பிரான்செஸ்கா என்ற தம்பதியர், தங்கள் குடும்பத்தில் உள்ள ஏழு குழந்தைகளில், முதல் குழந்தை வளர்ப்புக்குழந்தை என்றும், ஏனைய ஆறு குழந்தைகள் இறைவன் தங்களுக்கு வழங்கிய கொடை என்றும் கூறுவது, இக்காணொளியில் பதிவாகியுள்ளது.

திருமணத்திற்குப் பின், தன்னுள் உருவான முதலிரு குழந்தைகள் கருவிலேயே கலைந்துவிட்டன என்று கூறும் பிரான்செஸ்கா அவர்கள், அதைத் தொடர்ந்து, இரஷ்யாவிலிருந்து முதல் குழந்தையை தாங்கள் தத்தெடுத்ததையும், அதைத் தொடர்ந்து, இறைவன் தங்களுக்கு ஆறு குழந்தைகளை வழங்கியதையும் இக்காணொளியில் கூறியுள்ளார்.

என்ரிகோ மற்றும் பிரான்செஸ்கா தம்பதியர், ஏழு குழந்தைகளுடன் வாழும் குடும்ப வாழ்வில், இறைவனுக்கு முதலிடம் வழங்கப்படுவதைக்குறித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்ப வாழ்வில் கனிகள் பெறுவதன் பயனை இடையிடையே பகிர்ந்துகொள்கிறார்.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவையும், திருப்பீடத் தகவல்தொடர்பு அவையும் இணைந்து, திட்டமிட்டுள்ள இந்த பத்து காணொளித் தொகுப்பு வரிசையின், முதல் காணொளி, இவ்வாண்டு மார்ச் மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு காணொளி வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் ஆறாவது காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி முதல், 26ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெறவிருக்கும் குடும்பங்களின் பத்தாவது உலக மாநாட்டிற்கு ஒரு தயாரிப்பாக, இந்த காணொளி வரிசை வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2021, 14:48